Skip to main content

சாய் வித் சித்ரா - எஸ்.ரா பேட்டி


கொஞ்சம் நெகிழ்ச்சி, நிறைய செண்டிமெண்ட், நிறைய சுவாரஸ்யமான கதைகள், தகவல்கள், அவதானிப்புகள் என கலவையான உரையாடல். 


எஸ்.ரா ரொம்ப கூர்மையான மனிதர். அதனாலே இலக்கியம், சினிமா குறித்த, குறிப்பாக narratology சார்ந்த அவரது அவதானிப்புகள் வெகுசிறப்பாக இருக்கும். ஆனால் தன் கட்டுரைகளில், உரைகளில் உணர்வுகளை


, சம்பவங்களை சித்தரித்த அளவுக்கு அவர் தன் அவதானிப்புகளை சொன்னதில்லை. சொல்லப் போனால் எஸ்.ரா எனும் தனிப்பட்ட மனிதரின் பார்வையை தவிர்த்து விட்டு எஸ்.ரா எனும் பயணி, எஸ்.ரா எனும் வாசகர், எஸ்.ரா எனும் கதைசொல்லி, எஸ்.ரா எனும் சினிமா ஆர்வலர் என பல்வேறு பாத்திரங்களாக மாறிப் பேசவே அவருக்கு ஆசை அதிகம். தனிப்பட்ட முறையில் உரையாடும் போது அந்த தனிமனிதர் சட்டென வெளிப்பட்டு தன் கருத்துக்களால், பார்வையால் நிறையவே அச்சரியப்படுத்துவார். 


ஒருமுறை - இந்த பேட்டியில் அவர் சொல்லுகிற - ஒரு ரூபா விசயத்தை தனிப்பேச்சில் குறிப்பிட்டார். நான் நீண்ட நாட்கள் அதை மறக்கவே இல்லை. இந்தியர்களின் பேச்சில், சிந்தனையில் இயல்பாகவே ஒரு தத்துவார்த்தம் இருக்கிறது என அவதானித்தார் அன்று. இன்னொரு முறை தான் கதை எழுத ஆரம்பித்த காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் சிறந்த கதைகளில் உள்ள வடிவத்தை உள்வாங்கி, சொற்களை எண்ணி, சொற்களின் அடுக்குமுறையை கவனித்த ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்ததாக சொன்னார். அந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒவ்வொரு சில மாதங்களும் திட்டமிட்டு குறிப்பிட்ட வகையான நூல்களைப் படிப்பது ஆச்சரியமூட்டும் மற்றொரு செயல். நான் ஒருமுறை அவருடைய வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்த போது தன் நாட்காட்டியை காட்டி “நாளை 11 மணிக்கு அங்கு இருப்பேன், அடுத்த வாரம் அந்த நாள் இந்த வேலை பண்ணிக் கொண்டிருப்பேன்” என்று துல்லியமாக சொன்னார். தமிழில் எஸ்.ரா அளவுக்கு நாட்களை கச்சிதமாக திட்டமிட்டு கழிக்கிற மற்றொரு எழுத்தாளர் இல்லை எனத் தோன்றியது. என்னைப் போன்றவர்கள் நாளை காலை 10 மணிக்கு இதைச் செய்ய வேண்டும் என நாட்காட்டியில் குறித்து வைத்தால், மனம் “இதை கண்டிப்பா செய்யக் கூடாது” என பல்லைக்காட்டி இளித்துக் கொள்ளும். அடுத்தடுத்த நாட்களுக்கு இதையிதை செய்யலாம் என திட்டமிட்டால் நாட்காட்டி இருப்பதே மறந்து போகும். அன்று எஸ்.ரா பேசுவதை ஒரு குழந்தை ராணுவ வீரனைப் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன். 


இப்பேட்டியில் சித்ரா லஷ்மண் சுஜாதாவைப் பற்றி கேட்கிறார். அதற்கு எஸ்.ரா தனக்கு சுஜாதா மீது ஆரம்பத்தில் இருந்தே பெரிய ஈடுபாடோ வியப்போ இல்லை, அவருடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையுமே பொருட்படுத்தி ஓரளவு படித்திருக்கிறேன் எனச் சொல்கிறேன். ஆனால் பதிலை முடிக்கும் போது சுஜாதாவின் சிறந்த 100 படைப்புகளைத் தொகுத்து ஒரு நூலாக பிரசுரித்திருக்கிறேன் என்கிறார் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு. நான் அந்த நூலைப் படித்திருக்கிறேன் - அது முழுக்க சுஜாதாவை போற்றும் ஒரு எழுத்தாளர் மிகுந்த கவனத்துடன் தொகுத்ததைப் போன்றே இருக்கும். எந்த நூல் என்றாலும் தன் விருப்புவெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அது தன் வாழ்நாள் பணி என்பதைப் போல செய்யும் இயல்பு எஸ்.ராவுக்கு உண்டு. அவரை நம்பி ஒரு ஏவுகணையைக் கூட ஒப்படைக்கலாம். ஒரு விஞ்ஞானியைப் போல அதை வானில் ஏவி விட்டு தான் மறுகாரியம் பார்ப்பார்.


பேட்டியில் நான் ரசித்த மற்றோரிடம் எஸ்.ரா திரைக்கதையை, அதன் நுணுக்கங்களை எளிமையாக விளக்கும் பகுதி. மற்றொன்று சென்னையில் காசில்லாமல் திரிந்த போது பாலத்தின் கீழ் தூங்கிய, நண்பர்களின் அறைகளில் தற்காலிகமாக தங்கிய தினங்களைப் பற்றி நினைவுகூருவது. அதில் அவர் சொல்லும் குப்பைத்தொட்டி சம்பவம் புக்காவஸ்கியின் Ham on Rye நாவலை நினைவுபடுத்தியது.


  பாருங்கள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...