Skip to main content

அப்கானிஸ்தான் குறித்த கவலைகள்



அப்கானிஸ்தான்-தாலிபான் பிரச்சனை முழுக்க அம்மக்களின் வரலாறு, உள்நாட்டுச்சிக்கல்கள், அமெரிக்கா, சோவியத் காலனிய ஆதிக்கம், பொருளாதார வளர்ச்சியின்மை, முன்னேற்றத்துக்கும் பழமைக்கும் இடையில் எங்கே போவதெனத் தெரியாத பழங்குடி இனங்கள் சம்மந்தப்பட்டவை. அதை இந்திய சூழலுடன் பொருத்துவதோ, அதை வைத்து பாஜகவை பகடி செய்வதோ, இந்திய இஸ்லாமியர்களுக்கு ஊமைக்குத்து விடுவதோ எல்லாம் அபத்தங்கள். இந்தியா இப்போது வெளியுறவுத்துறை சார்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்படி அப்கானிஸ்தானை நமக்கு சாதகமாக கையாள வேண்டும் என பரிந்துரைப்பதும் தவறானது - இன்னொரு மக்களின், தேசியத்தின் நெருக்கடியை, குழப்பங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்து உள்ளே நுழைவது கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிவது போல ஆகி விடும். அமெரிக்க அரசு இத்தனை ஆண்டுகளாய் அப்கானிஸ்தானை கைப்பிடிக்குள் ராணுவத்தின் மூலம் வைத்திருந்ததால் அந்நாட்டு ஆயுத வியாபாரிகள், கார்ப்பரேட்டுகளைத் தவிர அந்த சாமான்ய அமெரிக்கர்கள் எந்த பயனும் பெறவில்லை. இத்தனை லட்சம் மக்களை டுரோன்களால் போட்டுத்தள்ளியதிலோ, இப்போது அவர்களை தவிக்க விட்டு அலட்சியமாக வெளியேறியதாலோ அமெரிக்கா உண்மையால் எந்த உருப்படியான லாபத்தையும் தார்மீக ரீதியாகவோ அரசியல்ரீதியாகவோ பெறவில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பவை இந்திய பிரிவினையின் போது அப்போதைய பிரிட்டிஷ் அரசு மக்களின் பாதுகாப்பையும் பெருங்கூட்டமாக மக்கள் புலம்பெயர்வதை ஒருங்கிணைப்பதை தம் பொறுப்பல்ல என கைமலர்த்தி விட்டு சென்றதை, அதன் விளைவாக பல லட்சம் பேர் கொல்லப்பட்டதை, உயிரிழந்ததை ஓரளவு நினைவுபடுத்துகிறது.


அப்கானிஸ்தானில் இப்போது நடப்பது ஒரு மிகப்பெரும் அவலமே. மக்கள் விமானத்தில் தொற்றிக்கொண்டு பாதி வானத்தில் இருந்து விழுவதைக் காண கண்ணீர் வருகிறது. விமானத்தைத் துரத்திக் கொண்டும் ஓடும் மக்களின் பரிதாபகர காட்சியையும் ஒரு அமைதியான நாகரிகமான சூழலில் இருந்து பார்க்கிறவரால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அப்கானிஸ்தான் ஒருநாள் தன்னையே சீரமைத்துக் கொள்ளும் என நான் நம்புகிறேன். தாலிபான்கள் மூர்க்கத்தையும், வலிமையையும் இழந்து, அதிகாரத்தையும் மக்களிடம் திரும்பக் கொடுக்கும் நாள் நிச்சயமாக வரும். அதை அம்மக்களே செய்ய முடியும். நாம் அல்ல. அதைப் பற்றி அவர்களே சிந்திக்கவும் தவிக்கவும் வேண்டும். நாம் அல்ல. 


நமது ஜனநாயகத்தை எப்படி பாதுகாப்பது என்று நாம் கவலைப்படுவோம். இப்போதுள்ள மதவாத ஆட்சி ஒன்றியத்தில் தொடரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் நாம் ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு சென்றபடியே இருக்கிறோம். பல்லாயிரம் விவசாயிகளிடம், எதிர்க்கட்சிகளிடம், பல கோடி சிறுபான்மையினரிடம் எந்த உரையாடலையும் வைத்துக் கொள்ள விரும்பாத ஒரு முரட்டு, ஜனநாயக விரோத அரசை நாம் தலைவணங்கி கொண்டாடுகறோம். சொந்த தேவைக்காக பல லட்சம் கோடிகள் வரிப்பணத்தை தன் எதிரிகளையும் நண்பர்களையும் ஒற்றறிய செலவிட்ட ஒரு அரசை பெருவாரியான மக்கள் எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்கிறோம். இதற்கும் தமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். பெட்ரோல் விலை அம்பானிகளின் லாபம் பல்லாயிரம் மடங்கு பெருகும் நோக்கில், அரசின் கஜானாவை நிரப்பும் நோக்கில் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் இதை ஏதோ வானிலை செய்தி போல எடுத்துக் கொண்டு இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என வானத்தைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நாம் ஜனநாயக உரிமைகளோ வாக்களிக்கும் அதிகாரமோ தேவையில்லாத ஒரு மக்கள் கூட்டமென நம்மை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். நாம் முதலில் நம்மைப் பற்றி கவலைப்படுவோம். அப்கானிஸ்தானையும் உகாண்டாவையும் அந்நாட்டு மக்கள் கவனித்துக் கொள்ளட்டும்.

 ஒரு ஜனநாயக நவீன தேசமாக நாம் என்னவாக விரும்பினோம், என்னவாக விரும்புகிறோம், இப்போது எங்கிருக்கிறோம் என நம்மை நமக்குள்ளே ஒப்பிடுவது தான் சரி.

 அதை விட்டு விட்டு பாஜகவும் தாலிபான்களும் ஒன்றா இல்லையா என்றெல்லாம் குடுமிப்பிடி இடுவது என்னவொரு பாசாங்கு. அந்த ஒப்பீடே அவசியமற்றது. உண்மை என்னவென்றால் நமது நவீனத்துக்கு முந்தைய அரசியல், ஜனநாயகமற்ற பாசிச ஆட்சி அமைப்பு குறித்த நமது அவமான உணர்வை மறைக்க “அந்தோ அப்கானிஸ்தானின் நிலையைப் பாரீர்” என ஆவேசப்பட்டுக் கொள்கிறோம். எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு - அடுத்தவன் துர்மணத்தை விமர்சிக்கும் முன் சொந்த குண்டியை மணந்து பார்த்து விட வேண்டும். நாம் நம்முடையதை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வோம், அவர்கள் அவர்களுடைய பார்த்துக் கொள்வார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...