பி-டீம், சி-டீம் எல்லாம் விடுங்கள். கொள்கை அளவில் பாஜகவின் தமிழ் வடிவமே மய்யம். இந்த அரசியலை கமல் ஹே ராமிலேயே ஆரம்பித்து விட்டார். "கோட்ஸே கெட்டவன் அல்ல, அதற்காக அவன் முழுக்க நல்லவனும் அல்ல, இந்த காந்தியின் அரசியலினால் பிரிவினை வந்து எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? ஆனால் அதுக்காக காந்தியை நாம் முழுக்க மறுக்கவும் இயலாது, அவர் ஒரு மகாத்மா" என பிடிகொடுக்காமல் வலதுசாரித்தனம் பேசும் படமே அது. அதனாலே தோல்வியுற்றது.
இந்து, இந்தி, இந்திய தேசிய விசயத்தில் மய்யத்தின் அத்தனை கொள்கைகளும் இப்படி வலதுசாரிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்குபவையே. அதை சூரப்பா விவகாரத்தில் பார்த்தோம். இப்போது மும்மொழிக் கொள்கையிலும். உளவியல் ரீதியில் பார்த்தால், கமலுக்கு எளிய சாமான்ய தமிழ் மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், கலாச்சாரம், இவற்றை முன்னிறுத்தும் அரசியலுடன் உடன்பட முடியவில்லை எனத் தோன்றுகிறது. 'மனதளவில்' அவர் இம்மண்ணின் மைந்தன் அல்ல. அவருடைய எந்த வணிகப்படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் சொந்தக்காரர்கள் அவருக்கு எதிராக குழிபறிப்பார்கள், சொந்த சாதிக்காரர்கள் ஒன்று குறுகின மனப்பான்மை கொண்டவர்களாகவோ பகுத்தறிவில்லாத மூடர்களாகவோ இருப்பார்கள். ஒரு கிராமத்தில் ஒருவர் கூட ஹீரோவை புரிந்து கொள்ள முடியாதபடிக்கு கீழே இருப்பார்கள். இந்த திரைக்கதை டெம்பிளேட் கமலுக்கு சமூகம் குறித்துள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்துவது. இப்போதும் கூட அவரால் தனக்குத் தெரியாதவர்களிடம், தன் புகழ்பாடி அல்லாதவர்களிடம் சகஜமாக பேச முடியாது. பவுன்சர்கள் இல்லாமல் அவரால் பயணிக்க முடியாது. பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினாலே பதற்றம். இதுவே தன் மொழியை, மக்கள் மொழியை பாதுகாக்கும் தெளிவற்றவராக அவரை ஆக்குகிறது. தனக்கு இணக்கமாக இல்லாத மக்களை அவரால் புரிந்து கொள்ளவோ நேசிக்கவோ முடியாது. ஏனென்றால் மக்களைப் பார்த்ததும் இவர்கள் நம்மவர்கள் அல்ல என்றே நினைக்கிறார். அவர்கள் "நான் உங்கள் ரசிகன்" என சரணடையாவிடில் அவர் முகத்தில் புன்னகையே வராது.
கமல் ஒரு தனியர். எலைட்டிஸ்ட். அந்நியர். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கும் குழப்பவாதி. மும்மொழியை விடுங்கள், அவருக்கு - தன்னைத் தவிர - யார் மொழியைப் பற்றியும் அக்கறை இல்லை. ஏனென்றால் 'மனதளவில்' இது அவரது மாநிலமே அல்ல. கொஞ்சம் மிரட்டினால் நான் வெளிநாடு போகிறேன் கிளம்பி விடுவார். அவர் மனதளவில் தான் ஒரு தமிழ் யூதன் என நினைக்கிறார் எனத் தோன்றுகிறது.(இதை நான் சாதியளவில் சொல்லவில்லை. இது ஒரு கலாச்சார பிரச்சனை.) இவரை நம்பி வாக்களிப்பவர்களை என்ன சொல்வது?