Skip to main content

மனுஷ்ய புத்திரன் எனும் ராவணன்



இந்த ஆண்டு மனுஷுக்கும் சற்று சிக்கலானதாக, சவாலானதாக இருந்தது என அறிவேன். லாக் டவுனின் போது உயிர்மை அச்சு இதழை கொண்டு வர இயலவில்லை, அவருடைய அலுவலகத்தை மூடும் சூழல். இருந்தாலும் ஒற்றை ஆளாக பகுதி நேர ஊழியர்களை சிலரை வைத்துக் கொண்டு அவர் உயிர்மை இணைய இதழ், யுடியூப் சேனலை உற்சாகத்துடன் சிறப்பாக நடத்தினார். இந்த புத்தகக் கண்காட்சியிலும் குறைந்தபட்ச முதலீடு, உள்கட்டமைப்பு, நிறைய கட்டுப்பாடுகள் இருந்தும் அவர் எப்படியோ சமாளித்து விட்டார். இந்த நெருக்கடிகள் ஒரு பக்கமிருக்க, அவர் எழுதிக் குவித்த கவிதைகள் தாம் பெரிய ஆச்சரியம். எப்போதெல்லாம் நெருக்கடிகளும் ஏமாற்றங்களும் அதிகமாகின்றனவோ அப்போதெல்லாம் எழுத்தில் தீவிரம் காட்டுவது, அநேகமாய் துரித கவனிப்புக்கு, செய்தித் துணுக்குக்கு மட்டும் தகுதியானவை என நாம் நினைக்கிற எத்தனையோ விசயங்களை கவிதையாக்குவது, கடந்த பத்தாண்டில் எழுதியதை விட எளிமையாக மென்மையாக அதே நேரம் தீவிரமாக எழுதுவது என பலரும் பொறாமைப்படுமளவுக்கு செயல்பட்டிருக்கிறார். பலரும் கடுப்படிக்கும் அளவுக்கு வாசகிகளைப் பெற்றிருக்கிறார். கைவிடப்படும் போது நம்மில் பலரும் எழுத்தை விட்டு விடுவோம், குடியில் சங்கமிப்போம், மன அழுத்த மாத்திரைகளை கையில் வைத்து உருட்டிக் கொண்டிருப்போம், சமூக வலைதளங்களில் வம்பில், வீண் சர்ச்சையில் ஈடுபடுவோம். ஆனால் மனுஷ் கவிதை வெளிப்பாட்டை இறுகப் பிடித்து மேலே வந்து விட்டார் என்பது இளம் எழுத்தாளர்கள் பலருக்கும் ஒரு பெரும் ஊக்கமளிக்கும் சங்கதி.


பொதுவாக எழுத்தாளர்கள் எப்படி மனம் குவித்து உத்வேகத்துடன் செயல்படுகிறார்கள்?

சிலர் எளிய மத்திய வர்க்க வாழ்க்கைக்குள் இருந்தபடி அதிலிருந்து எழுத்துக்கான கருப்பொருளை எடுத்து அமைதியான, வசதியான வேளைகளில் மட்டும் எழுதுகிறார்கள்.   

இன்னும் சிலர் ஒரு துறவியைப் போல எழுத்து மட்டுமே இலக்கு, வேறெதையும் கவனிக்க மாட்டேன் என செயல்படுவார்கள். வீடு, குடும்பம், வேலை என இருந்தாலும் அதிலெல்லாம் பட்டும்படாமல் இருந்து விட்டு எழுத்தில் முழுத்தீவிரத்துடன் பித்துடன் இருப்பார்கள். இந்த வகைமையில் இன்னும் சிலர் செய்தித்தாள் படிக்கவோ, சினிமா பார்க்கவோ, சில்லறை இன்பங்களில் ஈடுபடவோ செய்யாமல் உக்கிரமாக இருப்பார்கள் அல்லது அப்படி இருக்க வேண்டும் என போதிப்பார்கள்.

மனுஷ் போன்று வெகுசிலரே எழுத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத சூழலில் வாழ்க்கை முறையில் இருப்பார்கள் - அன்றாட நிகழ்வுகள், சச்சரவுகள், செய்திகள், இலக்கிய வம்புகள், அரசியல் கருத்துக்கள், நிகழ்வுகள் என எதையும் அவர் விட்டு வைப்பதில்லை. ஒரு பக்கம் இறைந்து கிடக்கும் நாளிதழ்கள், இன்னொரு பக்கம் போனில் சமூகவலைதள உரையாடல்கள், ஐ.சி.யு மருத்துவ உபகரணம் போல அணையாத டிவி என அவர் இருக்கும் இடம் கவனச்சிதறல்களின் உச்சமாக இருக்கும். அவர் அரசியலுக்கு வந்த பிறகு பயணங்களும் அதிகமாகி விட்டன, தினசரி டிவி விவாத அரங்கு வெட்டுகுத்துக்கள் வேறு. இதன் மத்தியில் அவர் ஆயிரக்கணக்கான கவிதைகளை வருடாவருடம் எழுதுவது ஒரு அதிசயம் என்றே நினைக்கிறேன். 


எழுதுவதற்கு மனத்தை அதிக சஞ்சலமின்றி வைத்திருக்க வேன்டும், உணர்ச்சிகளை ஆறப் போட வேண்டும், மெல்ல மெல்ல கொதிநிலைக்கு போக வேண்டும், அமைதியான நிலை, சலனமற்ற போதம் பழுத்து மெல்ல நெருப்பாகி ஒளிவிடும் போது அது சிறந்த எழுத்தாகும் என்றெல்லாம் தமிழில் நம்பிக்கைகள் உள்ளன. ஜெயமோகன் போன்றோர் இதை அறிவுறுத்துவார்கள். எப்படியும் குறைந்தபட்சம் எழுத்துக்கு ஒரு வாழ்க்கை ஒழுங்கு அவசியம் என சொல்லாதவர்களே இல்லை. எனக்குத் தெரிந்து மனுஷ் ஒழுங்குக்கு நேரெதிர் திசையில் பயணிப்பவர். தன் மொத்த நாளில் ஒரு சில மணிநேரங்கள், சில நேரம் பத்து பதினைந்து நிமிடங்களே கவிதைக்கென செலவழிக்கிறார். ஒரு ஆயிரம் பக்க கவிதைத் தொகுப்பை மொத்தமும் தன் செல்போனிலே எழுதியதாக ஒருமுறை சொன்னார். ஏன் அப்படி? லேப்டாப்பில் எழுதலாமே? படுக்கப் போகும் போது போனில் எழுதுவேன் என்றார். இதையெல்லாம் எப்படி சாதிக்கிறார் என்பது அடிக்கடி எனக்குள் எழும் கேள்வி. ஆனால் பாருங்கள் எழுத்துக்கு விரோதமான ஒரு வாழ்க்கைச்சூழலை அமைத்துக் கொள்ளும் போதெல்லாம் அவர் அதிகமாகவும் சிறப்பாகவும் எழுதுகிறார். அவருடைய மன அமைப்புக்கு இது தான் சரியாக வருகிறது என நினைக்கிறேன். உ.தா., அவர் இலக்கியம், சிறுபத்திரிகை சூழல் என்று மட்டுமிருந்த, அரசியல் சமூகம் பற்றி குறைவாக எழுதிய, சமூக வலைதளங்கள், டிவி விவாதங்களே இல்லாத தொண்ணூறுகளில் மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். அவரது அந்த காலத்து சிலாகிக்கப்பட்ட கவிதைகளை விட பத்து பன்னிரெண்டு ஆண்டுகளில், இந்த “சீரழிவான, கவனச்சிதறல்களின் காலத்தில்” எழுதிய கவிதைகளே மேலானவை முதிர்ச்சியானவை எனும் எண்ணம் எனக்குண்டு.


மனுஷின் மன அமைப்பு சிறு சிறு அறைகளாக பகுக்கப்பட்ட, அவற்றை இணைக்கிற ஊடுபாதைகள் கொண்ட ஒன்று என நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அவரால் இருக்க முடிகிறது. இவற்றின் அடியாழத்தில் எங்கோ கவிதைக்கான பாதாள அறை இருக்கிறது. சரியான / தேவையான நேரத்தில் அங்கு போய் இருந்து கொண்டு அவரால் தீவிரத்துடன் செயலாற்ற முடிகிறது. ஒரு கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் போவதைப் போல சுலபமாக அவரால் அந்த அறைக்குள் போக முடிகிறது என்பதே ஆச்சரியம். சமூகவலைதள அறை, காதல்களின், நட்புகளின், எளிய அலுப்பான அன்றாட உறவுகளின் அறை, அரசியல் அறை, செய்திகளின், சர்ச்சைகளின் வம்புகளின் அறை, கருத்துக்களின் அறை, அன்றாடங்களின் அறை என எங்கு நேரம் செலவிட்டாலும் தன்னை அங்கு அழித்துக் கொள்ளாமல் கவிதைக்கு மீண்டு விடுகிறார். அது அவருடைய இயல்பு. அவரை ஒரே ஒரு அறையில் பூட்டி வைத்தால் போரடித்து செத்து விடுவார். என்னால் இப்படி பத்து தலைகளுடன் இருக்க முடிவதில்லை. ஒருநாள் ஒன்றில் ஈடுபட்டால், அதில் மட்டுமே இருந்து அதிலேயே எரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நான் கவனமாக எழுத்தைத் தவிர பிற விசயங்களில் உன்மத்தமாய் ஈடுபடாமல் இருக்க முயல்வேன். மனுஷ் இதற்கு நேரெதிரான இயல்பு கொண்டவர். அவர் ஒரு ராவணன்.


மனுஷுக்கு இன்று பிறந்த நாள். என் வாழ்த்துக்களும் அன்பும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...