Skip to main content

கோலியும் அனுஷ்காவும்



இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 ஆட்டத்தில் கோலி சிறப்பாக ஆடினார் (73 ஓட்டங்கள்). ஆனால் ஆட்டத்தை வென்ற பிறகு பரிசு வழங்கும் நிகழ்வில் அவர் தன் ஆட்டத்தின் சிறப்புக்கு யாருடைய உதவு, பங்களிப்பெல்லாம் இருந்தது எனும் போது அணியின் பயிற்சியாளர்களை குறிப்பிட்டு கூடவே “அனுஷ்காவும் என்னுடன் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் உதவியது.” எனச் சொன்னதை நான் ரசிக்கவில்லை. தொழில்முறை வெற்றிகளை தொழில்முறையில் மட்டும் பார்ப்பதே நல்லது, அதை அந்தரங்க வாழ்க்கையுடன் கலந்து தன் குடும்பமும் தன் பயிற்சியாளர்கள், அணியும் ஒன்றே என சமப்படுத்துவது ஒரு மோசமான போக்கு. பொதுவாக ஒரு வீரர் ஓய்வு பெறும் போது தனது பெற்றோர், நண்பர்கள், சிறுவயது பயிற்சியாளர்கள் ஆகியோரை பட்டியலிட்டு நன்றி சொல்வார்கள். சச்சின் ஓய்வு பெறும் போது அவ்வாறு உணர்ச்சிகரமான ஒரு நீண்ட நன்றி நவிலல் செய்தது நினைவிருக்கும். ஏனென்றால் அது ஒரு தனிமனிதனாகவும் அவர் தன் முடிந்து போன ஆட்டவாழ்வை திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம். ஆனால் கோலி செய்வதோ முழுக்க unprofessionalஆன காரியம். 


இதை இப்போதல்ல நீண்ட காலமாகவே அவர் இதை செய்து வருகிறார் - இந்திய அணி அயல்நாட்டுக்கு பயணம் செல்லும் போது அதிகாரபூர்வ சந்திப்புகளில் தன் மனைவி கலந்து கொள்ள அனுமதிப்பது, வீரர்களுடன் வெளியே செல்லும் போது அனுஷ்காவை அழைத்து செல்வது என. இதனாலே அணி மோசமாக தோற்கும் போது ரசிகர்கள் அனுஷ்காவையும் சாடுகிறார்கள். “நான் சிறப்பாக ஆடுவதற்கு என் மனைவியின் அருகாமையே காரணம்” என ஒருவர் பேசும் போது அவர் மோசமாக ஆடும் போது ரசிகர்கள் அதற்கும் அதே மனைவியை தானே பழிகூறியாக வேண்டும்? தேர்வாளர்கள் அனுஷ்காவுக்கு தேநீர் விளம்புகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் இதனாலே எழுகின்றன. எனக்குத் தெரிந்த உலகக் கிரிக்கெட்டில் எந்த வீரரும் இதை செய்வதில்லை, இந்திய கிரிக்கெட்டில் இதற்கு முன்பு செய்ததில்லை. 


ஒரு அணித்தலைவர் தான் சிறப்பாக ஆடியதற்கு தன் பயிற்சியாளர்களை பாராட்டி விட்டு அதே மூச்சில் மனைவியையும் குறிப்பிடும் போது இருவரும் தனக்கு ஒன்றே எனும் பொருள் வருகிறது. அதைக் கேட்டிருக்கும் பயிற்சியாளர்களுக்கு சுரணை உண்டென்றால் மூஞ்சியில் காறித் துப்புகிற உணர்வே ஏற்படும். காதல், குடும்ப ஆதரவு போன்ற தனிப்பட்ட காரணங்கள் ஒருவர் சிறப்பாக செயல்பட காரணமாகலாம். ஆனால் அதை வெளியே சொல்லி அதற்கு ஒரு அதிகாரபூர்வ மதிப்பை அளிக்காமல் இருப்பதே பொறுப்பான கௌரவமான ஒரு வீரர் செய்வது. கோலிக்கு நிச்சயமாக அப்பண்புகள் இல்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...