Skip to main content

ஒரு நல்ல தலை



தினமணியில் வாராவாரம் வெளிவருகிற “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரை ஆரம்பித்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. இரு வருடங்களுக்கு முன்பு அதை நான்கு நூல்களாக தொகுத்து உயிர்மையில் வெளியிட்டேன். நான் இத்தொடர் ஒரு வருடத்திற்கு மேல் போகாது என நினைத்திருந்தேன். நான் முடிந்த வரையில் எனக்குப் பிடித்த துறைகளான தத்துவம், கோட்பாடு, அரசியல், சமூகம் என பலவற்றில் இருந்தும் சொற்களை எடுத்து அறிமுகப்படுத்துவேன். சமகால நடப்புகளை மறைமுகமாய் விமர்சிக்க, பகடி செய்ய, கருத்து சொல்ல இத்தொடரை பயன்படுத்துவேன். என் அதிர்ஷ்டம் இதுவரையில் நான் யாரை பகடி செய்கிறேன் என நிறைய பேருக்கு தெரிந்ததில்லை, அதனால் எடிட்டரிடம் இருந்து குறுக்கீடுகள், அறிவுரைகள் வந்ததில்லை. இது தான் பல லட்சம் பிரதிகள் அச்சாகும் இதழ்களில் எழுதுவதன் அனுகூலம்.


ஆனால் என்ன சிக்கல் என்றால் நான் எழுதிய தொடர்களிலேயே நான் மிகக் குறைவாக ரசித்து எழுதுவது இதைத் தான். ஏனென்றால் ஆங்கில இலக்கணம், ஆங்கில சொற்றொடர்கள், சொற்களின் வரலாறு, மொழி குறித்த சுவாரஸ்யமான கதைகள் இவற்றை எழுதுவதில் எனக்கு பெரிய சவால்கள் இல்லை. வெள்ளைக்காரன் மொழியைப் பற்றி தமிழில் எழுதுகிற அபத்தம் கூட உறைக்கிறது. இது நான் எழுத வேண்டியது அல்ல எனும் எண்ணம் எப்போதும் இருந்ததுண்டு. நியாயமாக இது எந்த வாசிப்பும், எழுத்துத் திறனும் இல்லாத, ஆங்கிலத்தில் பேசினால் ஒருவருக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விடக் கூடும் என நம்புகிற ஒரு பள்ளி ஆசிரியரோ விவேகானந்தா இன்ஸ்டிடியூட்டில் பாடம் எடுக்கும் ஒரு மாமாவோ எழுத வேண்டியது. என்னைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் ஒரு சாதாரணம் மொழி. எந்த மாக்கானும் அதைப் பேசலாம். இதை சுட்டுவதற்காகவே இத்தொடரில் ஒரு நாயின் பாத்திரத்தை உருவாக்கி அதை ஆங்கில அறிவு படைத்ததாக சித்தரித்தேன்.


 ஆனாலும் தொடர்ந்து ஏழு வருடங்களாக எழுதுவதற்கு ஒரே காரணம் தான் - வேறு விருப்புரிமைகள் இல்லை.


தினமணி தவிர எனக்குக் கிடைத்த தொடர் எழுதும் வாய்ப்பு குமுதத்தில் தான். அதுவும் கிரிக்கெட் குறித்து தான் எழுதினேன். கிரிக்கெட் பற்றி எழுதுவதில் கூட ஆங்கிலம் பற்றி எழுதுவதை விட அதிக சுவாரஸ்யமும் சவாலும் இருந்தன. ஏனோ எனக்குப் பிடித்த துறைகள் (இலக்கியம், தத்துவம், சமூகம்) சார்ந்து எழுத வாய்ப்பு இந்த 13 ஆண்டுகளில் வெகுஜன இதழ்களில் ஒரு வாய்ப்பு கூட அமைந்ததில்லை. ஒன்று நானாக பெரிதாக முயலவில்லை. பத்திரிகையாளர்கள் இடையே நட்பு வட்டத்தை இதற்காக அமைத்து கேட்டுக் கொண்டே இருக்கவில்லை. இன்னொன்று, யாரையோ எங்கேயோ தொடர்ந்து என் கருத்துக்களால் எரிச்சல்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறேன்.

பரவாயில்லை எனத் தோன்றுகிறது.

நம்மிடம் ஒரு அழகிய வாள் இருக்கிறது. அதை வைத்து வெங்காயம் நறுக்க சொன்னால் நறுக்கி விட்டுப் போகிறோம். ஒருநாள் வெட்ட வாகாக ஒரு ‘நல்ல தலை’ கிடைக்காமலா போய் விடும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...