Skip to main content

மோடி எதிர்ப்பலை எனும் மாயை



இந்த பாஜக எதிர்ப்பலை மாயையைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இடமே இல்லாத போது எப்படி எதிர்ப்பலை வர முடியும் என்பதே என் கேள்வி. தமிழக மக்கள் தம்மை இந்திய தேசியத்துக்கு எதிராக கற்பிக்க சில சூழ்நிலைகளில் மட்டும் தான் முடியும் - முன்பு இந்தி எதிர்ப்பு, பின்னர் ஜல்லிக்கட்டு, இடையே நீட் எதிர்ப்பு. ஆனால் நிரந்தரமாக அது இங்கிருந்ததில்லை, ஏனென்றால் அதற்கான அவசியம் தமிழர்களுக்கு இல்லை. அவர்கள் தம்மை தம்மளவில் ஒரு தேசிய இனமாக கருதுகிறார்கள். மேலும், தமிழர்கள் தமது இருப்புக்கு மத்திய அரசால் நிரந்தர ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நம்புவதில்லை. அப்படி ஒரு கசப்பு இருந்தாலும் ஆளும் மத்திய அரசை எதிர்க்கும் நோக்கில் மட்டுமே மக்கள் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளது இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளதா? சரி அப்படியே வாக்களித்தாலும் பாஜகவின் நிரந்தர எதிரிகளான கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை? ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகமாய் தோல்வியடைந்தார்கள்? அவர்களை விட வெளிப்படையாக யார் பாஜகவை எதிர்க்கிறார்கள்? இது அடிப்படையில் ஒரு மாயை


யாரோ இப்படி ஒரு எதிர்ப்பலை இருப்பதாக தில்லி பாஜகவுக்கு நம்ப வைத்து விட்டார்கள். அவர்களுடைய ஈகோவை இது தடவி விடுவதாலோ என்னவோ வில்லனாக தம்மை கற்பித்து அடுத்தடுத்த காய்களை நகர்த்த தொடங்கி விட்டார்கள். அமமுக வாக்குகள் பாஜக எதிர்ப்பு வாக்குகள் எனச் சொல்லி அதிமுக-அமமுக இணைப்பை தடுத்தார்கள். அடுத்து, சவுக்கு சங்கரில் இருந்து சீமான் வரை பாஜக-திமுக ரகசிய கூட்டணி என பேசுகிறார்கள். இதுவும்பாஜக எதிர்ப்பலையைதிமுக பயன்படுத்தக் கூடாது எனும் நோக்கில் தான். பழைய 2-ஜி வழக்கை பாஜக திரும்ப எடுக்கிறது என்பது முதல் ஸ்டாலின் வேலை வைத்திருந்த புகைப்படம் வரை இதற்கு ஆதாரமாகக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் ஒரு ஆதாரமாடா? நாளை காங்கிரஸுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை எடுத்து வைத்து பாஜகவும் காங்கிரஸும் ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளது என சொல்லலாமே. ராகுல் ஒரு கோயிலுக்குப் போனதைக் காட்டி ராகுல் ஆர்.எஸ்.ஸின் பிடியில் உள்ளதாய் கொதிக்கலாமே. பைத்தியங்கள் மட்டுமே இதையெல்லாம் நம்புவார்கள்.


 என்னைப் பொறுத்தமட்டில் இந்த அவசரகதி குற்றச்சாட்டுகளே இவர்களை அம்பலப்படுத்தி விடுகின்றன. மேலும் அரசியலில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதால் மக்களும் அதைக் கணக்கில் கொண்டே வாக்களிக்கப் போகிறார்கள். நாளை ஒருவேளை பாஜகவுடன் திமுக இணங்குவதாகத் தெரிந்தால் முற்போக்காளர்கள் மட்டுமே ஏமாற்றமடைவார்கள், ஒட்டுமொத்த ஜனங்களும் அல்ல. தமிழகத்துக்கு இது ஒரு பிரச்சனையே அல்ல. (ஏன் என வரும் பத்திக்கு அடுத்த பத்தியில் சொல்கிறேன்) வரும் போது பார்த்துக் கொள்கிறோம். இப்பவே ஏன் நரம்பு புடைக்க கதறுகிறீர்கள் நீங்கள்?


இப்போதைக்கு அதிமுகவுக்கு நான்கே பிரச்சனைகள் தாம்.


தமிழக அரசியலில் தலைவர்களை மையமிட்டுத் தான் இயக்கங்கள் தோன்றுகின்றன. அதிமுகவின் முதல் பிரச்சனை அதற்கு ஒரு உறுதியான நிலையான தலைமை இல்லாதது


அடுத்த பிரச்சனை அடுத்த முறை ஆட்சிக்கு வர மாட்டோம் எனும் ஆவேசத்தில், அவநம்பிக்கையில் கட்டுப்பாடின்றி ஊழல் செய்து பணத்தை அவர்கள் வெளிப்படையாகவே குவிப்பது.


 மூன்றாவதாக, அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆள்வதால் இயல்பாகவே தோன்றுகிற அதிகாரக் களைப்பு, அதிகாரம் நோக்கிய அலுப்புணர்வு (anti-incumbency).


 நான்காவதாக, அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜக அதை உடைக்க, பலவீனப்படுத்த தொடர்ந்து முயல்வது.


மற்றபடி என்னதான் பாஜகவால் வழிநடத்தப்பட்டாலும் எடப்பாடி அரசு தன்னை முழுமையாக தமிழக விரோத அரசாக காட்சிக் கொள்ளவில்லை. வேல் யாத்திரையை அது கையாண்ட விதம் ஒரு உதாரணம். அண்மையில் கர்நாடகாவில் நடந்த மதரீதியான மோதல்கள், மாட்டுக்கறி தடை போன்றவை, .பியில் அரங்கேறுகிற அப்பட்டமான மதவாத சட்டங்கள், மாற்றங்கள் இங்கு நிகழ்ந்தனவா? இல்லையே. என்னதான் இது பினாமி ஆட்சியென்றாலும், ஓரளவுக்கு மேல் (நீட், புதிய கல்வித்திட்டம், சி.., வேளாண் சட்டங்கள் போன்ற விசயங்களில்ல்) தமிழக நலனுக்காக நிற்க இந்த அரசால் முடியவில்லை என்றாலும், இது இன்றும் அதிமுக ஆட்சியே, பாஜக ஆட்சி அல்ல.

இந்த காரணங்களால் தான் இத்தேர்தலில் பாஜக vs திமுக என்றொரு எதிரிணை இல்லை என்கிறேன். எப்போதுமே இக்களம் அதிமுக vs திமுக என்றே இருக்கும். இதை எடுத்து சொல்லும் முதுகெலும்பு நம் ஊடகங்களுக்கு இல்லை என்பதே அவலம்!  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...