Skip to main content

அதிகாரக் குவிப்பு, செலிபிரிட்டி கலாச்சாரம் - அழியும் இந்திய கிரிக்கெட் அணி





தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய பயணத்தொடரில் இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை நிச்சயமாய் இழக்கும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் வாஹ்ன் சொல்லியிருக்கிறார். இதை ஏற்கிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா காலங்காலமாய் சொதப்பியே வந்துள்ளது. டிரா செய்ய முடிந்தால் சிறப்பு. ஒட்டுமொத்தமாய் இந்த ஆஸி தொடர் ஒரு நேரவீண். 

இதை கோலியும் அறிவார். ஆனால் அவர் மனமெல்லாம் பிறக்கவிருக்கும் தன் குழந்தை மீதே இருக்கும். வேறெந்த நம்பிக்கையூட்டும் நற்செய்தியும் அவருக்கு வரும் மாதத்தில் இல்லை. ஏனென்றால், இந்த தொடர் அவசரமாய் திட்டமிடப்பட்டு, மோசமாய் அணி தேர்வு செய்யப்பட்டு மோசமாய் எடுக்கப்பட்ட அட்லி படத்தைப் போல உள்ளது. 


ஷாமி, சஹல், சாஹா நல்ல உடல் தகுதியுடன் இல்லை. ஆனால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த கிரிக்கெட் வாரியம் ரோஹித் ஷர்மா மட்டும் இந்தியாவில் அவர் பாட்டுக்கு திராட்டில் விட்டது ஏன் எனப் புரியவில்லை. ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு நியாயமா எனும் கேள்விக்கு விடையில்லை. கோலி வழக்கம் போல இந்த அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என நழுவப் பார்க்கிறார். வீரர்கள் இன்னொரு பக்கம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து ஆடின களைப்பில் இருக்கிறார்கள். மீண்டும் ஒரு பெரிய தொடரை எதிர்கொள்வதற்கான மன ஊக்கம், ஆற்றல் அவர்களுக்கு இருப்பதாய் தோன்றவில்லை. அணித்தலைவரான கோலி முன்பு தன் அப்பா காலமான போது ஈமச்சடங்குக்கு செல்லாமல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டவர். சச்சினும் அப்படி உலகக்கோப்பைத் தொடருக்கு திரும்ப வந்து ஆடியதைப் பார்த்துள்ளோம். ஆனால் இப்போதைய கோலியோ இந்த முக்கியமான தொடரின் டெஸ்ட் போட்டிகளுக்கு முழுமையாக இருக்காமல் இந்தியாவுக்கு தன் குழந்தைப்பிறப்புக்காக திரும்பும் முடிவில் இருக்கிறார். இது பிற அணி வீரர்களுக்கு அளிக்கும் சேதி என்னவாக இருக்கும், ‘இத்தொடர் ஒருவித விடுமுறை கொண்டாட்டம் தவிர வேறொன்றும் இல்லை’ என்பதன்றி.

 நியாயமாக கோலிக்குப் பதிலாக ரஹானேவை டெஸ்ட் தொடரின் தலைவராக ஆரம்பத்திலேயே அறிவித்து, கோலியை வெறும் மட்டையாளராக மட்டுமே முதல் போட்டியில் ஆடச் சொல்லியிருக்க வேண்டும். அத்துடன் அணியைத் தேர்வு செய்வது, தொடரின் வியூகங்களைத் திட்டமிடுவது ஆகிய பொறுப்புகளை முழுமையாக ரஹானேவிடம் ஒப்படைத்திருக்கலாம். அப்போது டெஸ்ட் தொடரில் உன்னிப்பாக உத்வேகமாய் இந்திய அணி ஆட வாய்ப்பு இருந்திருக்கும்.

 ஆனால் இது ஏதோ குழந்தை பாதி கக்கா போய் விட்டு அதில் படுத்து புரண்டு விளையாடுவதைப் போல ஒரு போட்டியில் இவர் தலைவர், மற்ற போட்டிகளில் இன்னொருவர் தலைவர் என்றால் அது எப்படியான குழப்பத்தை, கவனச்சிதறலை ஏற்படுத்தும்? போட்டித்தொடரை இழந்தோமெனில் பழி யாருக்குப் போகும்? வென்றோமெனில் பெருமை யாருக்கு?

அணித்தலைவருக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை அளிப்பது, தேர்வாளர்கள், வாரிய தலைவர் என அனைவரையும் அணித்தலைவர் தன் உள்ளங்கையில் வைத்து செல்ல நாய்க்குட்டியைப் போல நடத்துவதானது தோனியின் காலத்திலேயே தொடங்கி விட்டது. கோலி இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று விட்டார். இப்போது அணித்தலைவரானவர் இந்தியாவின் பிரதமரைப் போல. அவரது செயலுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. மாறாக அவருக்கான பெயரும் புகழும் மட்டும் தொடர்ந்து கட்டமைக்கப்படும். ஒரு நட்சத்திர பிம்பத்தை இப்படி உருவாக்கி அதை வைத்து அறுவடை செய்வதன்றி உலகக்கோப்பைகளை வெல்லும் இலக்குடன் அணி இப்போது வழிநடத்தப்படுவதில்லை. இவ்விசயத்தில் கங்குலி, ஷா ஆகியோரின் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஶ்ரீனிவாசனின் தலைமையிலான வாரியத்தைப் போன்றே நடந்து கொள்கிறது.


விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளராக அனுஷ்கா ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அந்தளவுக்கு குடும்ப அரசியல், தனிமனித வழிபாடு, அதிகாரக் குவிப்பு இந்திய கிரிக்கெட்டை நாசமாக்கி வருகிறது. எதிர்காலத்தில் இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அரசியல்வாதிகள் கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிப்பதை, அணித்தலைவரை நிரந்தரமாய் அன்றி நான்கு வருடங்களுக்கு மட்டுமே நியமிப்பதை, ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு அணித்தலைவரை நியமிப்பதை வழக்கமாக வேண்டும், வீரர்களின் மனைவி, குழந்தைகள் அவர்களுடன் ஓட்டலில் தங்குவது, கொண்டாட்டங்களில் பிற வீரர்களுடன் கலந்து கொள்வது, மனைவிகள் சமூகவலைதளங்களில் கிரிக்கெட் பற்றி கருத்து சொல்வது தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் அதிகாரம் ஒரு புள்ளியில் குவிந்து செலிபிரிட்டி கலாச்சாரம், அரசியல் அதிகாரம் என அது வளர்வதை தடுக்கலாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...