ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார். தேர்தலுக்குப் பின் துவங்குவேன் என்றும் சொல்லவில்லை. தன்னை ஒரு நிரந்தர “எதிர்கால முதல்வர்” வேட்பாளராக களத்தில் வைத்திருக்க அவர் விரும்புகிறார் அல்லது பாஜக விரும்புகிறது. அதற்கான ஒரு முன்னோட்டம் தான் இந்த மாய மான் அறிக்கை - அதிலுள்ள கருத்துக்கள் எனது, ஆனால் அது எனதல்ல என ஒரு விளக்கத்தை வேறு அண்மையில் கொடுத்திருக்கிறார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் தமது கூட்டணியில் அரசை அமைக்க முடியாவிடில் பாஜக அரசு ரஜினியை வைத்து ஒரு எதிர்காலக் கனவை தொடர்ந்து தக்க வைக்க விரும்பும். இந்த தேர்தலுக்கு அடுத்த தேர்தலுக்கு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் இப்போது ரஜினியை வைத்தாடும் சதிராட்டத்தை மீண்டும் பாஜக ஆடும். அல்லது ஒருவேளை அதிமுக, மூன்றாவது அணிகள் ஓரளவுக்கு இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாகத் தோன்றினால், அவ்வப்போது ஆட்சியைக் கலைத்து ரஜினியை முதல்வராக்குவோம் என மிரட்டல் விடுப்பதற்கும் பாஜகவுக்கு ரஜினி பயன்படுவார்.
அதென்ன டுரோஜன் குதிரை?
டுரோஜன் குதிரை கிரேக்க தொன்மத்தில் வருகிறது - கிரேக்கத்துக்கும் டுரோய் நகரத்துக்கும் பெரும் போர் நடக்கிறது. டுரோய் நகரக் கோட்டையை உடைக்காமல் கிரேக்கர்களால் போரில் வெல்ல முடியாது. ஆனால் மிக வலிமையான கோடைக்காவலை உடைப்பது அத்தனை சுபலமல்ல. பத்து வருடங்கள் தொடர்ந்து முற்றுகையிட்டுப் பார்த்து களைத்துப் போகிற கிரேக்கர்கள் இறுதிக்கட்ட முயற்சியாக ஒரு சூழ்ச்சியை செய்கிறார்கள் - ஒரு பிரம்மாண்டமான குதிரை சிற்பத்தை செய்து அதனுள் தம் படை வீரரக்ள் சிலரை பதுக்குகிறார்கள். அந்த குதிரை சிற்பத்தை விட்டுவிட்டு கப்பலேறி தம் ஊருக்கு திரும்புகிறார்கள். கிரேக்கர்கள் தம்மிடம் தோற்று ஓடுகிறார்கள் என இதைப் பார்த்த டுரோய் வீரர்கள் குதூகலிக்கிறார்கள். தோல்வியை ஒப்புக்கொண்டு தமக்கு பரிசாக ஒரு பிரம்மாண்டமான குதிரையை விட்டுச்சென்றிருக்கிறார்கள் என நினைத்து அதை இழுத்து கோட்டைக்குள் போகிறார்கள். இரவு முழுக்க குடி கொண்டாட்டம் விழாக்கோலம். மக்கள் போதையில் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்க குதிரையில் இருந்து வெளியேறும் கிரேக்க வீரர்கள் கோட்டை வாயிலை திறந்து விடுகிறார்கள். அதற்காக காத்திருக்கும் கிரேக்கப் படை உள்ளே நுழைந்து டுரோய் வீரர்களை படுகொலை செய்து டுரோய் நகரை கைப்பற்றுகிறது.
அதில் இருந்து எதிரியின் வலுவான கோட்டைக்குள் புகுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமான சூழ்ச்சி எனும் பொருளில் இந்த டுரோஜன் குதிரை அறியப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ரஜினி தான் அந்த டுரோஜன் குதிரை. பார்க்க அழகாக, வேடிக்கையாக கூட இருக்கும். ஆளாளுக்கு இழுத்து தெருவில் விட்டு விளையாடுவார்கள். ஆனால் ஒரு நள்ளிரவில் அதனூடாக எதிரிகள் நுழைந்து தமிழக ஆட்சியை பறித்துக் கொள்வாரக்ள்.
ரஜினி இங்கு வெறும் நடிகராக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. ஆனால் எல்லாரிடமும் கைக்குலுக்கி நல்லுறவை பேணி விட்டு நள்ளிரவில் கோட்டைக்கதவை திறந்து விடுகிற துரோகியாக அவர் இருக்க வாய்ப்புள்ளவரை அவரை தொடர்ந்து எதிர்ப்பது அவசியம். நேரடியாக நடப்பு அரசியலில் ஈடுபடும் எதிர்த்தரப்பினரை நம்பலாம், நாளை அவர்கள் நம் தரப்பிலும் சேரலாம். ஆனால் ரஜினியைப் போன்றவர்கள் ஒரு கணினி வைரஸைப் போன்று பொய்வேடம் பூண்டு உள்ளிருந்து நம்மை அழிக்க வந்தவர்கள். எப்படி ஆளுநர் என்பவர் மத்திய அரசின் சார்பில் மாநில சுயாட்சிக்கு, அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஒரு சட்டபூர்வமான அச்சுறுத்தலோ, ரஜினியைப் போன்றவர்கள் பாஜக சார்பில் அதே பணியை நம் தோளில் கையிட்டு புன்னகைத்தபடி செய்கிற எட்டப்பர்கள். ரஜினிக்குத் தேவை ஒரு anti-malware program.
