தமிழர் வாழ்வில் ஏன் துக்கம் (கூடவே எளிமையும்) ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது எனக் கேட்டு கார்ல் மார்க்ஸ் ஒரு அழகிய பிராயிடிய அலசலை செய்திருக்கிறார். பொருளாதார உயர்வை, பாதுகாப்பை இழந்து விடுவோமோ எனும் அச்சமே இதன் ஆதாரப்புள்ளி என அவர் கருதுகிறார். ஆனால் இது முழுக்க உண்மையா என்றும் தெரியவில்லை.
மகத்தான மனிதனின் வீழ்ச்சி மேற்கில் கிரேக்க நாடகங்களில் துன்பியலின் இலக்கணமாக இருந்தது, இதுவே பின்னர் மகத்தான ஒன்றின் வீழ்ச்சி (குடும்பம், அன்பு, கற்பு, நம்பிக்கை) என நவீன சனநாயக மத்திய வர்க்கத்திடம் வந்ததோ?
இன்னொரு பக்கம் வீழ்ச்சியின், துக்கத்தின் அழகியல் அது இருமைகளை உடைக்க உதவுகிறது என்பதாகவும் இருக்கலாம் - உ.தா., கைவிட்ட காதலிக்காக கண்ணீர் வடிப்பது. இழந்த குடும்ப மேன்மை, ஆதரவு, அன்புக்காக ஏங்குவது, வெதும்புவது, அதைப் போற்றுவது. "தேவதாஸ்", " பராசக்தி", "மூன்றாம் பிறை" என ஏகப்பட்ட உதாரணங்கள் தமிழ் சினிமாவிலும் "விஷ்ணுபுரம்", " நெடுங்குருதி" போன்று நாவல்களிலும் இத்ற்கு பல உதாரணங்கள் தோன்றுகின்றன. ஆங்கில நாவல்களில் "அன்னா கரெனினா", "போரும் வாழ்வும்", Catcher in the Rye, Great Gatsby, Great Expectations, Oldman and the Sea, Farewell to Arms, Norwegian Wood, The Windup Bird Chronicle, Kafka on the Shore போன்றவை உடனடியாய் மனத்தில் எழுகின்றன. ஹெமிங்வேயின் Farewell to Arms நாவலின் முடிவில் ஹென்ரியின் கைகளில் கேதரினும் அவர்களது குழந்தையும் மடியும் காட்சி எப்போது படித்தாலும் கண்ணீரை வரவழைப்பது.
இழப்புணர்வு, அதன் துக்கம் மகத்தான உணர்வுகள் என நினைக்கிறேன். நமது மகாபாரதம் முழுக்க இவ்வுணர்வுகளால் ஆனது தானே. துக்கத்தை எடுத்து விட்டால் மகாபாரதம் குடும்பங்கள் இடையிலான ஒரு சல்லித்தனமான தன்னலப் போட்டி மட்டுமே. துக்கம் ஏன் மகத்தானதாக இருக்கிறது என்தற்கு ஒரு நடைமுறை காரணத்தை நம்மால் சுலபத்தில் கண்டறிய முடியாது, அது இருமையைக் கடந்து சிந்திக்க நமக்கு உதவுகிறது என்பதைத் தவிர.
கார்ல் மார்க்ஸின் இந்த பார்வை மிகச்சிறப்பாகப் பொருந்துவது தமிழ் நவீன கவிதைகளுக்கு எனத் தோன்றுகிறது. இந்த கோணத்தில், தமிழ்ப் புனைவுகளில் உள்ள வெள்ளாள இலக்கிய அரசியலைப் பற்றி, அது பிராமண-வெள்ளாள மோதலாக, இழப்பின் கசப்புணர்வாக வெளிப்படுவதைப் பற்றி ராஜ் கௌதமன் எழுதிய "புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்" எனும் ஒரு முக்கியமான படைப்பையும் குறிப்பிட வேண்டும்!