Skip to main content

“நாயகனும்” “காலாவும்” - மீள்-சொல்லலின் அரசியல்

















இன்று “நாயகன்” படத்தின் ஒரு பகுதியை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன் - அப்போது தான் இதற்கும் “காலாவுக்குமான” ஒற்றுமை மீண்டும் நினைவுக்கு வந்தது. இப்போது இது வெறும் ஒற்றுமை அல்ல, ஒரு அரசியல், மீள்-சொல்லலின் அரசியல் எனப் பட்டது.

 பின்நவீனக் கதையாடல்களில் இப்படி மீள்சொல்வதற்கு ஒரு தனி இடம் உண்டு - இரண்டிலுமே தாராவியை நவீனப்படுத்தி சேரிகளை அப்புறப்படுத்தி அடித்தட்டு மக்களை வெளியேற்ற முயலும் பண முதலைகளை நாயகன் எதிர்க்கிற காட்சி உண்டு; இரண்டு படங்களின் திரைக்கதையிலும் இதுவே மையக்காட்சி (key incident). ஒரு மத்திய சாதி ஆள் தாதாவாகி அங்கு அதிகமாய் வசிக்கும் தலித்துகளைக் காப்பாற்றுகிறார் என்பதில் ஒரு போலியான அரசியல் வருகிறது. அப்படி ஒரு மானுடநேயத்தை முன்னிறுத்தும் போது பாதிக்கப்பட்ட மக்களின் agencyஐ மணிரத்னம் “நாயகனில்” பறித்து விடுகிறார். அதை மீட்டெடுப்பதே “காலா”. அங்கு தலித்துகளுக்கு ஒரு தலித் தலைமை அமைகிறது. அவர்களின் விடுதலையும் சாதி ஒருங்கிணைப்பில், ஒற்றுமையில், சுயமரியாதையில் பிறக்கிறது.

வேலு வேலுபாய், வேலு நாயக்கர் ஆகும் முன்பு அங்கு ஒரு லோக்கல் தலைவர் இருப்பார் (விஜயன்). அவர் பணம் வாங்கிக்கொண்டு சோரம் போவார். அவரைப் போன்றே அரசியல் தலைவர் ஒருவர் காலாவிலும் வருகிறார். மனைவியும், மகனும் கொல்லப்படுவது, அதன் துயரமும் “காலாவில்” மீள வருகிறது. ஆனால் மனைவி மீதான காதல் “காலாவில்” இன்னும் எதார்த்தமாக, கருணையை, மானுட நேயத்தை மீறின ஒரு புரிந்துணர்வாக, நேசமாக, சஞ்சலங்களும் தடுமாற்றங்களும் கொண்ட தாம்பத்ய பந்தமாக காட்டப்படுகிறது. கணவனின் அரசியலைப் புரிந்த, நடைமுறையில் களத்தில் இயங்குகிறவராக மனைவி காட்டப்படுகிறார். அதே போல நாயக்கரின் பிள்ளைகளைப் போல விடலைத்தனமாக, தந்தையிடம் இருந்து விலகி நிற்பவர்களாக “காலாவின்” மகன்கள் இல்லை - அவர்கள் தொடர்ந்து அரசியல் களத்திலேயே நிற்கிறார்கள், போராடுகிறார்கள்.





ஒரு மிக முக்கியமான காட்சியாக எனக்குப் பட்டது “அந்திமழை மேகம்” பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு ஷாட் - நாயக்கரின் முன்னே வந்து நிற்கும் ஒரு சிறுவன் சிவப்பு வண்ணப்பொடியை அவர் மீது தேய்க்கிறான். அங்கிருந்து பாட்டு - விநாயக சதுர்த்திக் கொண்டாட்டம் - தொடங்குகிறது. இந்த சதுர்த்திக் கொண்டாட்டத்தின் அடிப்படையிலே இந்துத்துவ அணிதிரட்டல்கள் அங்கு நடந்தே என நமக்குத் தெரியும். மணிரத்னம் இந்த மத அரசியலை கவனிப்பதில்லை அல்லது போகிற போக்கில் திணித்தபடி செல்கிறார்.


21 வருடங்களுக்குப் பிறகு இந்த அரசியலுக்கு ரஞ்சித் ஒரு பதில் அளிக்கிறார் -

இதே போன்ற ஒரு ஷாட் “காலாவின்” கிளைமேக்ஸ் காட்சியில் வருகிறது. வில்லன் ஹரிதேவ் அபயங்கர் பூமிபூஜை நடத்த வர, ஒரு சின்னஞ்சிறு சிறுவன் அவரிடம் வந்து கறுப்பு வண்ணப்பொடியை அவர் மீது வீசி அவரது வெள்ளையாடையை கறுப்பாக்குகிறான். தொடர்ந்து அங்கு குழுமியிருக்கும் மக்கள் அதே போல கறுப்புப் பொடியை அவர் வீசுகிறார்கள். அந்த பகுதியே கறுப்பு வண்ணத்தால் சூழப்படுகிறது. வில்லனும் அவரது அடியாட்களும் குழம்புகிறார்கள், அஞ்சுகிறார்கள், அழிகிறார்கள்.

 இந்த கறுப்பு வண்ணம் என்பது காலாவின் நிறம், காலத்தின் நிறம், கறுப்பு என்பது அனைத்தையும் உள்ளடக்கிய நிறம், அதற்குள் வெளிச்சம்-இருட்டு, நன்மை-தீமை, சுத்தம்-அசுத்தம் எனும் இருமைகள் இல்லை. கறுப்பு எதிர்-அரசியலின் நிறம்; ஹரி தாதாவினுடயது வெண்மையின் அரசியல், தூய்மையின், பிராமணத்துவத்தின் அரசியல், அது ஒரு முடிவுக்கு வரப் போகிறது என்பதை இந்த கருமையின் பிரவாகம் காட்டுகிறது; அடுத்து நீலப்பொடிகள் தூவப்படுவதை ரஞ்சித் காட்டுகிறார். கருமை நீலமாக மாறுகிறது. இது விடுதலை அரசியலின் எதிர்காலத்துக்கான உருவகம். சிவப்புப் பொடியின், மதச்சடங்கின் நிறத்தை, ஒரு சிறிய காட்சித்துளியை எடுத்து அதை எப்படி ஒரு மகத்தான கிளைமேக்ஸின் விஷுவலாக ரஞ்சித் மாற்றியமைத்து மீள்கதையாக்கம் செய்கிறார் பாருங்கள்! 


 ஒரு மக்கள் சமூகத்தின் போராட்ட வாழ்வை மணிரத்னம் மத்தியவர்க்க சிக்கல்களுக்கு ஆட்பட்ட நாடகமாக்கி, சாதி, அரசியல் நீக்கம் செய்யும் போது, ரஞ்சித் அதையே தனதான அரசியலுக்குள் வைத்து மீளச் சொல்லுகிறார். அதற்கான விஷுவல் குறிப்புகளாக மேற்சொன்ன சில காட்சிகளை படமெங்கும். விட்டுச் செல்கிறார்.

ஒரு மகத்தான கலைஞன்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...