Skip to main content

அசோகமித்திரனை வாசித்தல் (1)


இன்று வாசகசாலையின்முன்னோடிகள் வரிசையில்இன்று பேஸ்புக் லைவ்வில் அசோகமித்திரனின் எழுத்தை அறிமுகப்படுத்திப் பேசினேன். முதன்முதலில் லைவ்வில் பேசுவதால் நடுக்கமாய் இருந்தாலும் (கண்ணாடியைப் பார்த்துப் பேசுவதை விட மோசம்) ஓரளவுக்கு சமாளித்து விட்டேன். அடுத்த முறை பேசும் போது இந்த அனுபவம் கைக்கொடுக்கும். இந்த உரைக்கான என் குறிப்புகளை இங்கு பகிர்கிறேன்

1) அசோகமித்திரனை இலக்கிய வாசகர்களும் படிக்கலாம், பொழுதுபோக்கை நாடும் வாசகர்களும் படிக்கலாம். இது அவருடைய ஒரு தனித்துவம். அவருடைய பெரும்பாலான கதைகளுக்கு இது பொருந்தும். இந்த இயல்பை நீங்கள் அவரை சு.ரா, நகுலன், ,நா.சு, ஆதவன், மௌனி போன்றோருடன் ஒப்பிட்டால் இது துல்லியமாக விளங்கும். இலக்கிய எழுத்துக்கு என்று ஒரு தனி மொழி, தனி நுண்ணுணர்வு, வாழ்க்கை நோக்கு, நம்பிக்கைகள் இருந்தன. கதை என்பதை மொழிக்கும் மனத்துக்குமான ஒரு உறவாடல் என இலக்கியவாதிகள் பார்த்தனர்; கலை என்றால் அது பயிற்சியை, வாசிப்பை, மனநுட்பத்தைக் கோரும் ஒரு செயல்பாடு என நம்பினர். எப்படி ஒரு கார் வாங்கியவுடன் அதை ஓட்ட முடியாதோ (ஓட்டுநர் உரிமம், ஓட்டுவதற்கான பயிற்சி, இன்ஷுரன்ஸ் எடுக்க வேண்டும்) இலக்கியமும் உடனடியாய் யாரும் படிக்க முடியாது. .தா., சு.ராவின்பல்லக்குத் தூக்கிகள்கதையில் விவரணை, உரையாடல் என ஒவ்வொன்றும் குறியீட்டு தொனியை பெறுகிறது; அதிகாரம் எப்படி உடல் மற்றும் மொழி பரிவர்த்தனையில் உருக்கொள்கிறது என்பதை சித்தரிப்பதே சு.ராவின் நோக்கம், வெறுமனே ஒரு கதையை சுவாரஸ்யமாக நம்பும்படியாக சொல்வதல்ல. அக்கதையின் பல நிலையிலான அர்த்தக் கட்டுமானங்கள் நுட்பமான, பயிற்சி பெற்ற வாசகனுக்கே திறக்கும். அது அவ்வாறே கட்டப்பட்டுள்ளது. சு.ராவின் ஆரம்பகால கதைகளை அவரது எண்பது, தொண்ணூறுகளின் கதைகளுடன்  ஒப்பிட்டால் அவர் இலக்கிய கதையை ஒரு உயர் தொழில்நுட்ப சங்கதியாகக் கருதி வளர்த்தெடுத்து வந்துள்ளதை அறியலாம். கலையில் தொழில்நுட்பம் இப்படியென்றால், அதன் அரசியல், நம்பிக்கைகளும் பொதுநீரோட்டத்துக்கு எதிராகவே இருந்தது. இதுவும் பிரக்ஞைபூர்வமாக வளர்த்தெடுக்கப்பட்டது. ஜி.நாகராஜனின் நாவல்கள் இதற்கு ஒரு உதாரணம். அவரது கதையுலகம் தெளிவாகவே மத்திய வர்க்க விழுமியங்களில் இருந்து விலகி நின்றது. (ஜி.நாகராஜன் தன் வாழ்வையும் அவ்வழியில் செலுத்தியது வேறு விசயம்). இன்று வரை தொழில்நுட்ப ரீதியிலோ அரசியல் சார்ந்தோ இலக்கியத்தை தனித்த தடமாக காட்டுகிறவர்கள் சிறுகதையாளர்களில் சு.ராவின், ஜி.நாகராஜனின் வாரிசுகளாக பின்நவீன இலக்கியத்திலும் இருக்கிறார்கள். புதுமைப்பித்தன், தி.ஜாவைப் போல நடுநிலை இலக்கிய தரத்துக்கும் இன்று ஒரு தொடர்ச்சியைப் பார்க்கிறோம். இவர்களில் இருந்தெல்லாம் அசோகமித்திரன் விலகி தனித்து நிற்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படி?


அசோகமித்திரன் தான் கலையைப் படைப்பதாகக் கோரியதில்லை. தான் வாழ்ந்ததை எழுதியதாகவே திரும்பத் திரும்ப கூறி வந்தார். அவருடையதண்ணீர்நாவலைப் பற்றி அவரிடம் பேச முயன்றால் சென்னையில் நிகழ்ந்த தண்ணீர்ப் பஞ்சத்தின் போது கிடைத்த அனுபவங்களையே எழுதியிருக்கிறேன் எனக் கூறுவார். தண்ணீர் ஒரு குறியீடு எனும் வாதத்தையே அவர் விரும்ப மாட்டார். அவரதுபுலிக்கலைஞன்கதையையும் அப்படியே அவர் முன்வைத்தார். அவரது கதைகளை அவர்இது கலைஎனும் தோரணையின்றிஇது நான் என் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒரு எளிய அனுபவம்எனும் தோரணையுடன் சித்தரிக்க முன்னெப்போதும் இல்லாத ஒரு வெளிச்சம், புழங்கும் இடம் வாசகனுக்கு அவரது கதைகளில் கிடைத்தது. அது நேர்மையான வெளிப்படையான கதைகூறல் என்பதாலே பொது வாசகர்களுக்கு அசோகமித்திரனை அணுகுவதில் எந்த தடையும் என்றும் இருந்ததில்லை. அறிமுக வாசகர்களை நான் எப்போதும் அசோகமித்திரனை வாசிக்கும்படி கோருவேன். அவர்களை அவர் ஒருபோதும் ஏமாற்றமாட்டார். அவர் உணர்த்துகிற நுட்பமான ஒரு சிக்கலும் அவர்களுக்குப் புரியும், அவரது நகைச்சுவையும் ரசிக்கத்தக்கதாக இருக்கும், முக்கியமாய் தாம் ஒரு அசல் கதையை படித்ததாய் அவர்கள் நம்புவார்கள்

2) அசோகமித்திரனின் கதை வடிவம் தனித்துவமானது என்றாலும் அதற்கு ஒரு மரபு உள்ளது - அமெரிக்க மினிமலிச எழுத்து மற்றும் ஐரோப்பிய இருத்தலிய இலக்கியம் அவரை பெருமளவு பாதித்தது. ஆனால் தன்னுடைய சமகால நவீனத்துவ எழுத்தாளர்களைப் போலன்றி அவர் மினிமலிச, இருத்தலிய எழுத்தை பிரதியெடுக்கவோ அப்படியோ பின்பற்றவோ இல்லை. அவர் அதன் அழகியல் மற்றும் தத்துவத்தை இந்திய சூழல், பண்பாடு, தன்னுடைய அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டார். அவர் ஒரு இந்திய இருத்தலிய கதையை உருவாக்கினார். இது ஐரோப்பிய இருத்தலிய எழுத்தில் இருந்து, இந்திய நவீனத்துவ எழுத்தில் இருந்து தனித்திருந்தது. 2012இல் நான் இதைஅசோகமித்திரனிடம் வன்முறை உண்டா?” எனும் கட்டுரையில் (“அம்ருதாஇதழில் வெளியானது) விவாதித்தேன். அதை அசோகமித்திரன் படித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். தன்னுடைய பாணியில் “V.Good - A. Mitran” என. பின்னர் அவரை நான் சந்தித்து உரையாடிய போது அக்கட்டுரையை பாராட்டினார். முன்பு ஒருமுறை சு.ரா அசோகமித்திரனை விமர்சிக்கையில் அவருடைய எழுத்தில் தீவிரம் போதவில்லை, “வன்முறைகாத்திரமாக இல்லை எனக் கூறியது அவரைக் காயப்படுத்தியது. அதனாலே அவர் அன்று ஒரு மனநிறைவை அடைந்தார் என நினைத்தேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...