Skip to main content

எனது நண்பன் எனது நண்பன் அல்ல



தெரிதா தனது The Politics of Friendship (நட்பின் அரசியல்) என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில்  கிரேக்க ஞானி அரிஸ்டாட்டிலின் ஒரு மேற்கோளைப் பற்றி வெகுசுவாரஸ்யமாக பேசுகிறார்: அரிஸ்டாட்டில் தன் நண்பர்களிடத்து இவ்வாறு ஒருமுறை சொல்லுகிறார்: “ நண்பர்களே, நண்பர்கள் என யாருமே இல்லை”. இந்த மேற்கோளின் சுயமுரண் வெளிப்படையானது - நண்பர்களே இல்லையென்றால் அரிஸ்டாட்டில் இங்குநண்பர்களேஎன அழைத்து பகிர்ந்து கொள்ளும் அந்த நபர்கள் எல்லாம் யார்? அரிஸ்டாட்டில் என்னதான் சொல்ல வருகிறார்? தெரிதா இவ்வாறு விளக்குகிறார் - நட்பு என்பது யாரெல்லாம் நமது நண்பர் அல்ல என நாம் வகுத்துக் கொண்ட பின்னர் தோன்றுகிறது. நீ எனது நண்பன், ஏனெனில் அவன் எனது விரோதி, அவன் எனது விரோதி எனில் அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு நண்பன், அவன் எனக்கு நண்பன் எனில் என் விரோதிக்கு அவனும் விரோதி, அவனுக்கு அடுத்திருப்பவன் எனக்கு விரோதி, ஏனெனில் அவன் என் நண்பனுக்கு நண்பன் அல்ல, இன்னும் ஒருவன் எனக்கு நண்பனோ விரோதியோ அல்ல, அவனை இரண்டு வகைமைக்குள்ளும் அடைக்க முடியவில்லை, அவன்துரோகியாகஇருக்க வேண்டும், அவனுக்கு எதிர் இருக்கையில் இருப்பவன் அவனுக்கு விரோதி என அறிவேன், ஆனால் அதற்காக அவன் எனக்கு நண்பன் ஆக முடியாது, ஏனெனில் ஒரு துரோகியின் விரோதியும் விரோதியின் விரோதியும் ஒன்றல்லன்.


 நீங்கள் கேட்கலாம், நமது நண்பர்களை எல்லாம் இவ்வாறான இருமைக்குள்ளா வகுத்து கொண்டிருக்கிறோம் என. “நண்பன்எனும் கோரல் எப்போதும் இருமையை வலியுறுத்துகிறது, ஆனால் நட்பனுபவத்தில் இருமை இருப்பதில்லை. (அதற்கு பின்னால் வருகிறேன்.) நட்பு மிக அந்தரங்கமான உறவு - நீங்கள் உங்களுக்கு பரிச்சயமானவர்களின் வட்டத்தில் இருக்கும் போது ஒருவரை மட்டும் கட்டி அணைத்துஇவன் என் நண்பன்எனச் சொல்வது பரவலான சங்கடத்தை ஏற்படுத்தும்; மற்றவர்கள் தாம் புறக்கணிப்படுவதாய் ஒரு கணம் உணர்வர். ஆகையால் நாம் இப்படி அடையாள்பபடுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்த அப்போது முயல்வோம். நமது நட்பு இவ்விடத்தில் அதுவரை நாம் நினைத்திருந்ததைப் போலசாதாரணமானதுஅல்ல, அது அசாதாரணமானது என உள்ளுணர்வில் அறிந்து கொள்வோம். பரிச்சயக்காரர்களின் அசௌகர்யத்தின் மௌனத்தில் தான் அந்த மனத்திறப்பு நமக்குக் கிட்டும். ஒருவர் தனது நட்பை பிரகடனம் செய்யும் போதெல்லாம் அது ஒரு அந்தரங்க ஒளிவட்டத்தைப் பெற்று விடுவது இதனாலே - இப்படியான பிரகடன நிலையை நட்பின் சமூகமாக்கம் எனலாம். ஆனால் பிரகடனம் செய்யத் தேவையிராமல் நண்பர்கள் பரஸ்பரம் சந்தித்து மனங்கள் ஒன்றுடன் ஒன்றுசெம்புலப்பெயல் நீர்போல் கலக்கையில் அங்கு சங்கடங்கள், அந்தரங்கம், அது குறித்த பிரக்ஞை ஏதும் இராது. நட்பனுபவம் என அதை நாம் வரையறுத்துக் கொள்வோம்.  

நட்பனுவத்தில் நண்பன் என்பவன் நண்பன் அல்லாமல் ஆகிறான் என்கிறார் தெரிதா (அதுவே அரிஸ்டாட்டிலின்  மேற்கோளின் பொருள்). அப்போது நண்பன்-விரோதி எனும் இருமை பனிப்புகை போல மறைந்து விடுகிறது. அதனால் தான் அரிஸ்டாட்டில் நண்பர்களே நண்பர்கள் யாருமில்லை என்கிறார், நண்பர்களே நண்பர்கள் அனைவரும் எதிரிகள் என அவர் சொல்லவில்லை. இந்த நுணுக்கமான வித்தியாசம் முக்கியமானது. ஒருவன் நமது விரோதி அல்லாமல் ஆகும் போதே நண்பன் ஆகிறான், ஆனால் அவன் நண்பன் ஆன பின் அவன் நமது நண்பனும் அல்லாமல் ஆகிறான், அவன் நாமாகவே ஆகிறான், நாம் அவனாகவே ஆகிறோம். இதை நட்பின் பூரண நிலை எனலாம். (நட்பின் சம்போகம்!)

அரிஸ்டாட்டில் நண்பர்களை பொதுவாக மூன்றாக பிரித்துக் கொள்கிறார் - 1) ஒரு நோக்கத்தின், ஒரு பொதுவான தேவையின் பொருட்டு சேர்ந்திருக்கும் நண்பர்கள் (ஒரே துறையில் பணியாற்றுபவர்கள், சக படைப்பாளிகள், ஒரே கட்சிக்காரர்கள், ஒரே லட்சியம் கொண்டவர்கள்); 2) பரஸ்பரம் அளிக்கும் இன்பத்தின் பொருட்டு நட்பாகிறவர்கள் (சுவாரஸ்யமாகப் பேசுகிறவர்கள், பணம் செலவழிக்கிறவர்கள், இனிமையான சுபாவம் கொண்டவர்கள், வசீகரமான ஆளுமை கொண்டவர்கள்) - இலக்கியத்தில் நாம் காணும் குரு-சிஷ்ய நண்பர்களையும் இவ்வகைமையில் சேர்க்கலாம் என நினைக்கிறேன். 3) நண்பனின் நலனில் மகிழ்ச்சியியும் நிறைவும் காண்கிறவர்கள் - இவர்கள் தான் வள்ளுவர் சொல்லும்உடுக்கை இழந்தவன் கைவகையினர். தான் எப்படி இருக்க முடியாதோ, எப்படி இருக்க விரும்பவில்லையோ அப்படி தன் நண்பன் இருப்பதால் அதை ஊக்கப்படுத்துவார்கள்; நண்பனின் மகிழ்ச்சியும் எழுச்சியும் தன்னுடையது என நம்பத் தலைப்படுகிறவர்கள்; நண்பனும் இவர்களை அப்படியே காண்பதால் இவர்கள் ஈருடல் ஓருயிராக வாழ்வார்கள் - ஒருவனுக்கு இரு வாழ்க்கைகள் என கற்பனை பண்ணிப் பாருங்கள். இது பாரமாக அல்ல தனி மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே கவனிக்கத்தக்கது. இந்த நிலை படைப்பாக்கத்துக்கு இணையானது - நண்பனுக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சனை வருகிறது, கடும் துன்பத்தில் விழுகிறான், நீங்கள் அவனுக்காக வருந்துகிறீர்கள், ஆனால் அந்த வருத்தம் நீங்கள் உங்களுக்காக வருந்துவதைப் போன்றதல்ல. இந்த வருத்தத்தில் ஒரு மனவிடுதலை இருக்கிறது. நீங்கள் களைத்துப் போகிறீர்கள், மனம் புண்படுகிறீர்கள், கண்ணீர் சிந்துகிறீர்கள், ஆனால் அதன் முடிவில் உங்களை ஒரு சிறிய பரவசம் வந்து ஆட்கொள்கிறது. நண்பனின் வெற்றியைக் கொண்டாடுவதும் இப்படியே. சொல்லப் போனால் நண்பனின் வாழ்வில் ஒரு துன்பம் நேர்கையில் நீங்கள் நண்பனை விட அதிகமாய் அல்லல்படுகிறீர்கள், அவன் வாழ்வில் ஒரு மகிழ்ச்சி வருகையில் அவனை விட அதிகமாய் அதைக் கொண்டாடுகிறீர்கள், இரண்டின் போது உங்களுடையது அல்லாத ஒன்றில் மனம் தோய்கிறீர்கள். அது ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம் அழுவதைப் போன்றது, சிரித்து ஆட்டம் போடுவதைப் போன்றது, ஆனால் உங்கள் உணர்ச்சிகள் நடிப்பல்ல. இந்த மூன்றாவது வகை நண்பர்களையே அரிஸ்டாட்டில் உன்னதமானவர்கள், ஆனால் இவர்கள் அரிதானவர்கள் என்றார்.

நன்றி: உயிர்மை.காம், அங்கே என்ன சத்தம் (6)


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...