Skip to main content

பாதி வழியில் இறங்கி விடும் எழுத்தாளர்கள்



சில எழுத்தாளர்கள் எழுதுவதை பாதியில் நிறுத்தி விடுவதைப் பற்றி மூத்த கவிஞரான ஒரு நண்பரிடம் உரையாடும் போது அவர் ஒரு சுவாரஸ்யமான அவதானத்தை வைத்தார் - “நாம் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதால் எழுதுவதை நிறுத்துவதில்லை, எழுதுவதை நிறுத்துவதற்காக இந்த பிரச்சனைகளை ஒரு சாக்காக பயன்படுத்துகிறோம்.” எனக்கு ஊரில் ஒரு நண்பர் இருந்தார். நாகர்கோயிலில் இருந்து தக்கலைக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அவருடன் அடிக்கடி பேருந்தில் பயணிப்பேன். இலக்கியம், கலை, அரசியல் என பேசிக் கொண்டு செல்வோம். ஒரே பிரச்சனை டிக்கெட் எடுத்த நிறுத்தத்தில் ஒருநாளும் இறங்க மாட்டார் - ஏதாவது ஒரு இடத்தில் திடீரென இறங்கி விட்டு அங்கு யாரையாவது பார்க்கலாம் என்பார். பிறகு அங்கிருந்து ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்த இடத்துக்கு செல்வோம். “ஏண்ணெ இப்படி பண்றிங்க?” என ஒவ்வொரு முறையும் கேட்பேன். அவரது பதில்நினைச்ச எடத்துக்கு போறதில என்ன ஒரு இது இருக்கிடே. எதிர்பார்க்காத மாரி ஏதாவது நடக்கணும். தினமும் டக்குன்னு ஒரு புது விசயத்தை பண்ணனும். நாம என்ன பண்ணுவோமுன்னு யாருக்கும் பிடிபடக் கூடாது கேட்டியா?” தினமும் ஒன்றையே திரும்பத் திரும்ப பண்ணுவது ரொம்ப அலுப்பானது என்பதை பின்னர் மத்திய வயதில் தான் நான் புரிந்து கொண்டேன்


எழுத்தாளனான பிறகு என் சக எழுத்தாளர்களில் பலருக்கு எழுதுவது பற்றி கனவு காண்பதில் உள்ள விருப்பம் எழுதுவதில் இல்லை என்பதை, சில நேரம் கனவைக் கூட துறந்து விட்டு சம்மந்தமில்லாத புது சாகசங்களை நாடிச் செல்லும் அதீத கோணங்கித் தனங்களை அவர்கள் கொள்வதை கவனித்திருக்கிறேன். அற்ப விசயங்களுக்காக பெரிய சண்டைகளை இட்டு மூர்க்கமாகிறவர்களை, அதை வருடகணக்காய் நினைவில் வைத்திருப்பவர்களைக் கண்டிருக்கிறேன். பேஸ்புக் வந்த பிறகு பலர் எழுதுவதும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாய் அபுனைவு எழுதும் தயக்கம் பலருக்கும் உடைபட்டிருக்கிறது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மனம் குவித்து அதையே தொடர்ந்து செய்யும் திறனை பலரும் இழந்திருக்கிறார்கள். பேஸ்புக்கில் எழுதியபடியே தாம் ஒரு எழுத்தாளனாய் இயங்க முடியவில்லை என நினைக்கிற பலரையும் கவனிக்கிறேன். அன்றில் இருந்து இன்று வரை நமக்கு ஒரே பிரச்சனை தான் எனத் தோன்றுகிறது - எழுத்து கட்டற்ற ஒன்றுக்கான பாய்ச்சல், ஆனால் இலக்குக்குறி என ஒன்று தெரிந்து போனால் கட்டுண்டு போகிறோம். கட்டை அறுக்க முடியாமல் நாம் அந்த செயலில் இருந்தே பாதியில் இறங்கி செல்கிறோம்

நீங்கள் ஒரு அபாரமான கவிதையை ஒரு மின்னல் வரியுடன் துவங்குகிறீர்கள், ஆனால் அடுத்தடுத்து இருள் வந்து கவிகிறது. ஒரு பிரமாதமான கதைக்கரு கதையாக வளரும் போது மூட்டமாகி விடக் கூடும்; அல்லது அதை எழுதும் நிகழ்முறை (process) அலுப்பாக சிரமமாக ஒரு கட்டம் வரை இருக்கலாம். நீங்கள் ஒரு நாவல் குறித்து கனவு காண்பதை விட அதை ஒன்றிரண்டு வருடங்கள் சுமப்பது ஆயிரம் மடங்கு அவநம்பிக்கையும் குழப்பங்களும் கூடிய அனுபவம். அது மட்டுமல்ல சுயமதிப்பீடு சார்ந்த நெருக்கடி எழுத்தாள வாழ்க்கையை கொடுமையாக்குகிறது. தன் காதலை வெளிப்படுத்தினால் அதன் அழகு பாழாகி விடும் என எண்ணும் ஒரு பெண்ணைப் போல இருக்கிறான் ஒரு எழுத்தாளன். சிலரோ சில வருடங்கள் தொடர்ந்து நாவல், கதைகள் என உச்சம் தொட்டு விட்டுகண்டெக்டர் நிப்பாட்டுங்க, ஆள் இறங்கணும்என கூவி குதித்து இறங்கி ஓடுவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் திரும்ப எழுத வந்தாலும் பழைய மும்முரத்துடன் இயங்குவது மிகவும் சிரமம். சிலருக்கு குடும்ப பிரச்சனைகள் இடையூறாகும்

மற்றொரு காரணமும் உண்டு - எழுத்து அவர்களுடைய ஆர்வங்களில் ஒன்றாக இருக்கும், அது அவர்களை செலுத்தும் ஒற்றை லட்சியமாக இராது. நன்றாகப் பாடுவார்கள், வேலையில் சிறப்பார்கள், ஊர் சுற்றுவார்கள், விளையாடுவார்கள், அதோடு கொஞ்சம் எழுதவும் செய்வார்கள். என்ன பிரச்சனை என்றால் எழுதுவதும் நன்றாகவே இருக்கும். இவர்களிடம்தினமும் எழுதுங்க, தொடர்ந்து புத்தகங்கள் கொண்டு வாங்கஎன்றால் அவர்களுக்கு அது பாரமாக இருக்கும். இத்தகையோர் கொஞ்ச நாள் எழுதி விட்டு வேறேதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கி விட்டு திரும்பவும் பழைய இடத்துக்கே வந்து சேர்வார்கள். இலக்கியத்தோடே இருந்த படி அதில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவிப்பார்கள்நாவல் எழுதும் கலையை கற்பிக்கும் போது நான் இத்தகையோரை மாணவர்களிடம் அதிகமும் காண்கிறேன் - எழுதுவதும் எழுத்தாளனாய் இருப்பதும் இருவேறு விசயங்கள் என அந்த மூத்த எழுத்தாள நண்பர் என்னிடம் குறிப்பிட்டார்



 எழுத்து ஒரு துன்பம் என ஏற்ற பின் அது இன்பமாகிறது. ஆனால் அப்படி ஏற்பது மனித இயல்பல்ல; உடனடி இன்பமளிக்கும் காரியங்களுக்காக செயலாற்றியே நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எப்படியோ ஏற்றுக் கொண்டு விட்டால் அது நம்மை கட்டற்ற இருப்பாக்குகிறது. ஆனால் கட்டற்றுப் போக ஒவ்வொரு முறையும் நாம் நமது கைகால்களை சங்கிலியால் கட்டிக் கொண்டு எழுத்துக்குள் முடங்கி கிடக்க வேண்டி இருக்கிறது. எழுத்தாளனாய் இருப்பதன் மிகப்பெரிய உள்முரண் இது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...