Skip to main content

நாவல் எழுத யாராவது கற்பிக்க முடியுமா சொல்லுங்கள்?


எங்கள் கல்லூரியில் மாலை வேளை நடக்கும் எலெக்டிவ் வகுப்பில் நான் இரண்டாம் வருடமாக நாவல் எழுதும் கலையை கற்பிக்கிறேன். கடந்த வருடம் 17 மாணவர்கள். இவ்வருடம் 45ஆக உயர்ந்து விட்டது. பெரிய வகுப்புகளின் சௌகரியங்கள் 45இல் ஐந்து பேராவது ஒரு நாவலை அரை கல்வியாண்டுக்குள் முடித்து விடுவார்கள் என்பது. கடந்த முறை ஒருவரே முடித்தார். இந்த முறை 12 அத்தியாயங்கள், அத்தியாயத்துக்கு 5-7 பக்கங்கள் என ஒரு இலக்கை கொடுத்திருக்கிறேன். ஆகையால் இம்முறை நாவலை எழுதி முடிப்பது சற்று சுலபமாக அமையும் என கணிக்கிறேன்.

மாணவர்களை தினமும் நாவலை எழுத வைப்பதே என் பிரதான நோக்கம். ஏனென்றால் இத்தகைய வகுப்புகளுக்கு வருவோருக்கு அதுவே பெரும் சவால் - அவர்களால் எழுத முடியும், அவர்களுக்கு மொழித்திறனும், வாசிப்பும் உண்டு, ஆனால் தினம் தினம் ஒரே புத்தகத்தில் வேலை செய்வது கடினம். அந்த பயிற்சியை எப்படியாவது கொடுத்து விட வேண்டும். இன்றைய முதல் வகுப்பில் அதை பற்றியே முக்கியமாக பேசினேன். 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உண்டு, அது எழுதப்படாமலே பல சமயம் போய் டுகிறது என்பது என் நம்பிக்கை. அது இலக்கிய நாவலோ, வெகுஜன நாவலோ, எளிய துப்பறியும் நாவலோ, பதின் வயதினருக்கான ரொமான்ஸ் நாவலோ - ஒவ்வொன்றும் ஒரு வகையான சவால்.

இம்முறை திரைக்கதை கலை குறித்த புத்தகங்களில் இருந்து எடுத்துக்  நிறைய விசயங்களை (ராபர்ட் மெக்கீயின் Story போன்ற புத்தகங்கள்) நாவலுக்கும் பொருத்திக் கொண்டு கற்பிக்கலாம் என நினைக்கிறேன்.  

நாவல் கலையை கற்பிக்கும் வகுப்புகளில் பொதுவாக சில சட்டகங்களை, வரையறைகளை, எளிய சூத்திரங்களை அளிப்பார்கள். அதை கவனித்தால் இவ்வளவு ஈஸியா என மூக்கில் விரல் வைப்போம். ஆனால் வீட்டுக்குப் போய் எழுதினால் அது அவ்வளவு சுலபமல்ல எனப் புரியும். எழுத்தைப் பொறுத்தமட்டில் எனக்கு கோட்பாடுகளில் நம்பிக்கை குறைவு. எளிய தவறுகள் சிலவற்றை தவிர்க்க உதவுமே ஒழிய அவை தரும் போலி நம்பிக்கை ஆபத்தானது. 

 தொடர்ந்து இத்தகைய பட்டறைகளில் கலந்து கொண்டு எப்படி நாவல் எழுதுவது என வக்கணையாகப் பேச மட்டும் கற்றுக் கொள்ளும், ஆனால் ஒரு அத்தியாயம் கூட ஒழுங்காக எழுதியிராத, பலரை எனக்குத் தெரியும். நீங்கள் கிரிக்கெட்டை கற்றுக் கொள்ள செல்லும் போது ஒரு பயிற்சியாளர் உங்களை அமர வைத்து forward defense பற்றி கோட்பாட்டு வகுப்பெடுக்க மாட்டார். பாட்டுக் கற்க போகும் போது அங்கு குரு ஸ்வர வரிசையை குறிப்புகள் தருவார், ஆனால் அதோடு விடாமல் பாட வைப்பார். ஆடியே விளையாட்டை கற்கிறோம்; பாடியே பாட்டைக் கற்கிறோம். ஆக எழுத்தை மட்டும் எப்படி பேசியே கற்க முடியும், எப்படி அதை மட்டும் விவாதித்து கற்க முடியும்?

ஆனால் அதற்காக மாணவரின் கையைப் பற்றி எழுத வைக்கவும் முடியாது. அவர்களாகவே எழுத வேண்டும். இப்படித் தான் எழுதுவது என செய்து காட்டவும் முடியும். இதெல்லாம் எழுத்துக் கலையைப் பற்றி பேசுவதன், பேசிக் கற்பிப்பதன் சிக்கல்கள்.

நான் இந்த சிக்கலுக்கு ஒரு சுலபத் தேர்வை இன்னும் காணவில்லை என்பதே ஒரு குற்றவுணர்வை, ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது. சில நாட்களில் எதற்கு இந்த தேவையில்லாத வேலை, எழுதுவதே என் பணி, எழுத்தைக் கற்பிப்பதல்ல என நினைப்பேன். ஆனால் ஒரு திறமையான புது எழுத்தாளனை கண்டடையலாமே, எழுதுவது குறித்து உரையாடலாமே, நிறைய பேர்களை ஊக்கப்படுத்தலாமே என ஒரு சபலம் தோன்ற மீண்டு விடுவேன்.

 இந்த வகுப்புகள் ஒரு எழுத்தாளனாகவும் ஆசிரியனாகவும் எனக்கு அளிக்கும் உற்சாகமும் ஆற்றலும் அளப்பரியது. அதை வைத்து (கடந்து இரு வருடங்களாக எழுதி வரும்) வரும் என் நாவலையும், மாணவர்கள் தம் நாவலை நிறைவு செய்து சமர்ப்பிக்கும் போது, என்னால் முடிக்க இயன்றால் முத்தாய்ப்பாக இருக்கும்! அதுவே என் கனவு! 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...