Skip to main content

ஐபேடை ஒரு மாற்று மணிக்கணினியாக பயன்படுத்துவது


விண்டோஸ் கணினிகள் மீது கசப்பு ஏற்பட்ட பின்னர் நான் ஆப்பிளுக்கு நகரலாம் என முடிவெடுத்தேன். (அடிக்கடி எழுதிக் கொண்டிருக்கும் போது கணினி மயக்கம் போட்டு விழுவது, எழுதிக் கொண்டிருந்த கோப்பை அப்படியே புதைத்து விடுவது என ஏகப்பட்ட பிரச்சனைகள்; ஒரு கட்டத்தில் நான் கூகிள் docsஇல் எழுதுவது மட்டுமே பாதுகாப்பு என நம்பும் இடத்துக்கு நகர்ந்திருந்தேன்.) என் நண்பர்களும் இதை பரிந்துரைத்தனர்நான் தினமும் 6-8 மணிநேரங்கள் அல்லது அதற்கு அதிகமாகக் கூட கணினியில் எழுத செலவிடுகிறேன். ஒரு தரமான, நம்பகத்தன்மை கொண்ட கணினி இருப்பது என்னைப் போன்றோருக்கு அவசியம். ஆனால் ஒரு சிக்கல் - ஆப்பிள் கணினிகளின் விலை எட்டா கிளை. நான் எகிறிக் குதித்து ஒரு ஆப்பிளைப் பறித்தால் என் சேமிப்பில் பாதி காலியாகிடும்நான் ஏதாவது குறுக்குவழி இருக்குமா என யோசித்த போது புளூடூத் கீபோர்டுகள் கண்ணில் பட்டன

வெளிநாட்டில் பலரும் டேப்லெட்டை புளுடூத் கீபோர்டுடன் சேர்த்து ஒரு மடிக்கணினிக்கு பதிலியாக பயன்படுத்துகிறார்கள். (உள்ளூரில் நான் இந்த சங்கதியை - சென்னையிலோ இங்கு பெங்களூரிலோ கண்டதில்லை.) 
இதில் இரு அனுகூலங்கள்:
1) சிக்கனம்:
ஐபேடை நீங்கள் 25,000 சுமாருக்கு வாங்கி விடலாம். 2000-10,000 வரை சுமாரில் இருந்து தரமான கீபோர்டுகள் கிடைக்கின்றன. ஆக, ஒரு மாற்று மேக்புக்கை நீங்கள் 66,000-72,000 செலவழித்து வாங்க வேண்டியிராமல் 27,000-35,000க்கே ரெடி பண்ணி விடலாம்

2) வசதி
சம்பிரதாயமான விண்டோஸ் கணினிகள் கனமானவை. லேப்டாப் வைத்ததும் உங்கள் தோள்பை முதுகை அழுத்த தொடங்கும். ஆனால் ஐபேட் ஒரு மெல்லிய நாவலின் எடை கொண்டது. அதை ஒரு சின்ன ஸ்லிங் பையிலோ (ஜோல்னா பையிலோ) வைத்து அல்லது மேலங்கி அணிவோர் அதற்குள்ளாகவோ வைத்து எங்கும் கொண்டு போகலாம்

வேகம்
விண்டோஸ் கணினியின் booting time அதிகம். அது கண்விழித்து சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டு, சேலையை உதறி ஒழுங்காக கட்டிக் கொண்டு முகம் கழுவி, பல்துலக்கி, உச்சா போய் தலையை சீவி ஒழுங்காகி உங்களுக்கு தேவையான கோப்புகளை திறந்து கடைபரப்பிட இரண்டு மூன்று நிமிடங்களாவது பிடிக்கும். 8 GB Ram கொண்ட நல்ல விண்டோஸ் கணினிகள் சுலபத்தில் திறந்து தயாராகும் என்றாலும் ஐபேடின் வேகத்துக்கு இணையாகாது.
 நீங்கள் ஐபேடை திறந்த அரை விநாடியில் அது புன்னகையுடன் உங்களுக்காக தயாராக இருக்கும். நான் எப்போதுமே ஐபேட் திறப்பதை கண்ணின் இமை ஒன்று திறப்பதுடன் ஒப்பிடுவேன்; கண் எப்போதுமே விழித்துதான் இருக்கும், இமை தான் அதை மூடி ஓய்வு கொடுக்கும். இமையை யாராவது தொட்டால் உடனடியாய் அது விழித்துக் கொள்ளும். விண்டோஸ் கணினிகளோ நமது மற்ற உடலுறுப்புகளைப் போல. தூங்கும் போது உங்கள் விரலை யாராவது அசைந்தால் அநிச்சையாக அதை இழுத்து கொள்வீர்களே அன்றி விழிக்க மாட்டீர்கள். ஐபேட் இப்படித் தான் நமதுகண்ணுக்கு கண்ணாகஇருக்கிறது.

நம்பகத்தன்மை:
ஐபேடை நான் பயன்படுத்த தொடங்கி ஆறு மாதங்கள் ஆகின்றன - ஒருமுறை கூட அது crash ஆனதில்லை. ஒரு கோப்பு கூட தானாக அழிந்து காணாமல் போனதில்லை. ஆப்பிள் கணிகளை பல வருடங்களாக பயன்படுத்தி வருபவர்களும் இதையே தான் சொல்கிறார்கள். ஆனால் விண்டோஸ் கணிகள் நம்மை நடுத்தெருவில் கைவிட்டு காணாமல் போவதையே வழக்கமாக வைத்துள்ளன.
நீங்கள் அவசரமாக கணினியை திறக்க முயலும் போதுஇருங்க, அப்டேட் ஆகிக் கொண்டிருக்கிறது. 20% ...” என அது இன்னொரு பாதையில் ஓடிக் கொண்டிருக்கும். அது தயாராக பத்து நிமிடமோ இருபது நிமிடமோ ஆகலாம். ஆனால் ஐபேடிலோ இந்த அப்டேட்டிங் பின்னணியில், உங்களுக்கு தொந்தரவோ இன்றி, நடந்து முடிந்து விடும்.

இணக்கம்:
விண்டோஸ் ஒரு பூனை; ஒட்டாது. ஆனால் ஐபேட் உங்களுடைய உடம்பின் ஒரு பாகம் போல் ஆகி விடும். உங்கள் தேவைகள் என்னென்ன என ஏற்கனவே அவர்கள் உணர்ந்து வடிவமைத்தது போன்றிருக்கும் IOS. இந்தஇணக்கத்தைபொறுத்தமட்டில் நீங்கள் விண்டோஸை இதனோடு ஒப்பிடவே முடியாது.

மின்கலம்:
இன்று இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்க மின்கலம் கொண்ட மொபைல், மடிக்கணினிகள் வந்து விட்டன. ஆனாலும் அவை விலை அதிகமானவை. சில விண்டோஸ் கணினிகள் நிலையற்றதாக இருக்கும், ஆனால் மின்கலம் நீண்ட நேரம் வரும். தரமும் நீடித்த மின்கலமும் ஐபேடில் சிக்கன விலையில் சாத்தியமாகிறது

தமிழில் தட்டச்சுவது:
விண்டோஸில் நீங்கள் தமிழில் எழுத NHM போன்ற செயலிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும். அவை சிலநேரம் வேலை செய்யாமல் போய் விடும். அப்போது நீங்கள் செயலியை நீக்கி மீண்டும் துவக்க வேண்டும். இது போன்ற அலும்புகள் ஐபேடில் இல்லை - IOS இல் தமிழ் தட்டச்சும் இணைந்தே வருகிறது. ஆங்கிலத்தில் எழுதும் சுலபத்துடன் நீங்கள் தமிழிலும் புழங்கலாம்.

Word ~ Pages:
நீண்ட காலமாகவே மைக்ரோசாப்ட் வேர்டில் எழுதிப் பழகிய எனக்கு அது இல்லாமல் எப்படி இயங்குவது என தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது. வேர்ட் அடிக்கடி கிராஷ் ஆவதால் நான் கூகிள் டாக்ஸுக்கு நகர்ந்த நிலையிலும் கூட வேர்ட் மீதான என் மையல் மாறவில்லை. ஆனால் ஐபேட் வாங்கிய பிறகு நான் Pages எனும் செயலியை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தேன். வேர்டை விட மேலான, சுலபமான செயலி அது என புரிந்து கொண்டேன். ஒரு கோப்பை அதில் தயாரித்து வேர்ட் / PDF / EPUB ஆக மாற்றி அனுப்புவதோ, டிரைவில் சேமிப்பதோ ஒரே படியில் செய்து விடலாம். மேலும், அது பின்னணியில் தன்னை சேமிப்பதை நீங்கள் உணரவே முடியாது; திறப்பதும் மூடுவதும் ஏதோ வெண்ணெய் தொண்டையில் வழுக்கி செல்வது போல நடக்கும். நமது பெரும்பாலான எழுத்து வேலைகளுக்கான வசதிகள் அதிலேயே உண்டு. வெர்ட் அடிப்படையில் ஒரு வடிவமைப்பு செயலி. ஏகப்பட்ட ஆயுதங்கள் தரித்து, பெரிய கவசரம் ஏந்தி வரும் ராட்சஸ மனிதனைப் போன்றது வெர்ட். நமக்குத் தேவை ஒரு மெல்லிய எளிய வேலையாள். கேட்டால் உடனே வந்து நிற்கும் செயலர் என்றால் Pages போதுமானது, கச்சிதமானது.

இனி ஐபேடை புளூடூட் கீபோர்டுடன் பயன்படுத்தி என் அனுபவத்தை சொல்கிறேன். இவ்வாறு வாங்கி பயன்படுத்த விரும்புவோர் இதை அறிந்து கொள்வது முக்கியம்.

(தொடரும்)

  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...