நம் கண்முன்னே நம் நண்பர்கள், படித்த புத்திசாலிகள், நேர்மையானவர்கள், பண்பானவர்கள் இந்த தேசியவாத அலையில் அடித்துச் செல்லப்பட்டு ஒரே நாளில் மறைமுக பாஜக ஆதரவாளர்களாக மாறுவதைக் காண்பது ஒரு பெரிய கொடுமை. அதுவும் எனது கிறித்துவ நண்பர்கள் பலரும் அடுத்த தேர்தலில் பாஜகவுக்கே வாக்களிக்கப் போவதாக சொல்கிறார்கள். “பாஜகவின் வேறு கொள்கைகளை நான் ஏற்கவில்லை; அவர்களின் பல முடிவுகளை மறுக்கிறேன். ஆனால் காஷ்மீரின் சிறப்புத் தகுதி சட்டப்பிரிவை அவர்கள் நீக்கியதை ஆதரிக்கிறேன். இதற்காகவே அவர்களுக்கு அடுத்த முறை ஓட்டளிப்பேன்.” என்றார் ஒரு நண்பர். இது கூட பரவாயில்லை, சிறுபான்மையினரான அவர் காஷ்மீரிகள் இந்தியாவின் பணத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டு ராணுவத்துக்கு எதிராக கல்லெறிகிறார்கள் என ஒரு முழுமையான சங்கியாகவே மாறி பேசிய போது எனக்கு தலை சுற்றி விட்டது.
சட்டப்பிரிவு 370 ரத்தில் காங்கிரஸ் மட்டுமே தேசிய அளவில் எதிர்த்து பேசியது என்றாலும் அவர்களும் சேற்றில் ஒரு காலுடன் தான் நின்று அரைமனதுடன் கடமையை ஆற்றுகிறார்கள். காங்கிரஸில் பாதிக்கு மேல் தலைவர்கள் பாஜகவின் முடிவு சரி என நம்புகிறார்கள்; பேசுகிறார்கள்; புல்வாமா தாக்குதலுக்கு பிறகான போர்ச்சூழலின் போதும் காங்கிரஸ் “நானும் வரேன், நானும் வரேன்” என பாஜகவின் பிரச்சார வண்டியில் விடாப்பிடியாக ஏறிக் கொண்டது. இன்று தேசம் முழுவதும் இரண்டு வகையான அரசியல் முகாம்கள் உள்ளன. ஒன்று பாஜக ஆதரவாளர்கள்; மற்றொன்றும், பாஜக ஆதரவாளர்கள்.
பாஜகவையோ மோடியையோ விரும்பாமலே அவர்களின் அணியில் போய் நின்று கொள்பவர்கள் பாஜக உருவாக்கிய தேசியவாத அலையில் அடித்துச் செல்லப்படுபவர்கள். ஒருவர் தேசபக்தராக அல்லாத போது கிரிக்கெட் நடக்கும் போது இந்தியாவை ஆதரிப்பதில்லையா? இந்தியாவுக்காக கண்ணீர் வடிப்பதில்லையா? இந்த இரண்டாவது தரப்பினர் இப்படித் தான் கண்ணீரும் கம்பலையுமாக மோடியின் முகமூடியை அணிந்து கொள்கிறார்கள், அது அவர்களுக்கு பொருந்தவில்லை என்றாலும் கூட.
இந்த மாயமாலத்தை பாஜக எப்படி சாதித்தது?
முதன்முறையாக மோடி பிரதமர் ஆன போது அவரது ஆட்சியில் இந்தியாவுக்கு வரப் போகும் பாதகங்களைப் பற்றி நான் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில், வேறு பலரையும் போல, மதவாதம் காட்டுத்தீ போல பரவும், பல மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடக்கும், மேலும் பொருளாதாரமும் சீரழியும் என குஜராத்தில் மோடியின் ஆட்சியின் உண்மை நிலவரங்களை ஆதாரமாக" கொண்டு எழுதி இருந்தேன். நான் சொன்ன இரண்டாவது நிஜமானது, முதலாவது பொய்த்தது. (இரண்டுக்குமே நான் வருந்துகிறேன்.)
இந்துத்துவாவை நான் (வேறு சில நண்பர்களையும் போல) இந்து மத வெறி என எளிமையாக தவறாக புரிந்து கொண்டிருந்தேன். பிரதமர் ஆன பிறகு மோடி தனக்கு இந்தியாவின் சிறுபான்மையினரை “அணைத்துச் செல்வதில்” எந்த சிக்கலும் இல்லை எனக் காட்டிக் கொண்டார். பாஜக நாடு முழுக்க கலவரங்களை அவிழ்த்து விடவும் இல்லை. மாறாக பாஜக ஒரு பிரித்து ஆளும் சூழ்ச்சியை பின்பற்றியது.
முதல் மற்றும் இப்போதைய இரண்டாவது ஆட்சிகளில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுக்கையில் அல்லது அவர்களின் கட்சிக்காரர்கள் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட அதை வேடிக்கை பார்க்கையில் அதை தேசவிரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை என மக்களை நம்ப வைத்தனர். எந்தளவுக்கு என்றால் இன்று காஷ்மீரிய பண்டிட்டுகளுக்கு ஆதரவாக கிறித்துவர்களும் கொந்தளிக்கும் அளவுக்கு. நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான இஸ்லாமிய ஓட்டுகள் கிடைத்தன என ஒரு புள்ளிவிபரத்தை சமீபமாக பார்த்தேன். அது உண்மையோ பொய்யோ, வரும் நாட்களில் என் இஸ்லாமிய நண்பர்களும் சங்கிகளாக உருமாறினாலும் நான் பெரிதாக ஆச்சரியப்பட மாட்டேன். தேசியவாதம் அந்தளவுக்கு சக்திவாய்ந்த ஈர்ப்புவிசை.
தேசியவாதம் உருக்கொள்வதற்கு மற்றமை மீதான வெறுப்பு அவசியம் என அறிவோம். இந்துத்துவர்களுக்கு இந்த மற்றமை இஸ்லாமியர் என இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் அது உண்மையல்ல - கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசை (அல்லது மறைமுகமாக பிரதமரை, பாஜகவை) எதிர்க்கிறவர்கள் அனைவரையும் மற்றமையாக, தேசத்தின் விரோதிகளாக பாஜகவின் பிரச்சார எந்திரம் நம்மை நம்ப வைத்து விட்டது. அதாவது பாஜகவை எதிர்ப்பவர்கள் பிரதமர் மோடியை எதிர்ப்பவர்; பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள் தேசத்தையே எதிர்ப்பவர்கள். தேசத்தின் மற்றமை இஸ்லாமியர். ஆக தேசத்தை எதிர்ப்பவர்கள் இந்துக்களே என்றாலும் அவர்கள் “இஸ்லாமியர்” என நாம் நம்பத் தொடங்கி விட்டோம். இதன் விளைவாக, “இஸ்லாமியர்” இன்று வெறும் இஸ்லாமியர் அல்ல. “தேசவிரோதத்தில்” ஈடுபடுகிறவர்கள் அனைவரும் உடனடியாக “இஸ்லாமியர்” எனும் அடையாளத்தை பெற்று விடுகிறார்கள். நம்மால் இப்போது இஸ்லாமிய “சகோதரர்களை” வெறுக்காமலே “இஸ்லாமியர்களை” வெறுத்து விரோதிகளாக பாவிக்க முடிகிறது.
உதாரணமாக, பாஜகவின் ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், வேட்டையாடப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்ல என நாம் இங்கு கவனிக்க வேண்டும். காஷ்மீரியர்களின் தேசவிரோதத்தைப் பற்றி பேசுகிறவர்கள் கூடவே ஜெ.என்.யுவில் உள்ள அர்பன் நக்சலைட்டுகளையும் இந்த பட்டியலும் சேர்த்து கண்டிக்கிறார்கள்.
டிமானிடைசேஷன் நடந்த போது கள்ளப்பணம் வைத்திருந்தவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என சொல்லப்பட்டது. அவர்களை களையெடுக்கவே அந்த அதிரடி நடவடிக்கை என நம்பவைக்கப்பட்டது. அப்போது நம்மால் யாரையும் எதிர்க்கவோ இந்த நடவடிக்கையை விமர்சிக்கவோ முடியவில்லை. ஏனென்றால் அப்போது நாம் தேசவிரோதிகள் ஆகி விடுவோமே!
அதாவது நம்மை கறுப்புப் பணம் வைத்திருப்பவர் என குற்றம் சாட்டினால் அதை மறுப்பது எளிது. ஆனால் தேசவிரோத முத்திரையை நம்மால் எதிர்கொள்ளவோ தாங்கவோ முடியாது. மேலும் மோடியின் அரசு தேசவிரோதம் எனும் சொல்லாடலையே குழப்பமாக பயன்படுத்தி பனிமூட்டத்தை தோற்றுவிக்கும். அதில் நாம் மாட்டிக் கொண்ட பின் தொடர்ந்து “யார் தேசவிரோதி?” என நம் தோளுக்குப் பின்னால் சந்தேகமாக பார்த்துக் கொண்டிருப்போம்.
புல்வாமா தாக்குதலின் போது அது திட்டமிட்டு அரசின் அறிதலுடன் நடத்தப்பட்ட தாக்குதல் எனச் சொல்ல நாம் தயங்கினோம். தனிநபரை தீவிரவாதியாக அறிவித்து விசாரணையின்றியே கைது செய்து சிறையில் அடைக்கலாம் என மோடி அரசு புதிதாக சட்டம் இயற்றப்பட்ட போதும் இதுவே நடந்தது. தேசபக்தி - தேசவிரோதம் எனும் இருமையின் பூடகம், வரையறுக்கப்படாத தன்மை ஒரு பீதியை தோற்றுவிக்கிறது. இந்த பீதியில் இருந்து நாம், வேறுவழியின்றி, கண்மூடித்தனமான தேசபக்தியில் போய் விழுகிறோம்.