Skip to main content

தேர்தல் முடிவுகள்


பாராளுமன்ற தேர்தல் முடிவுகளைப் பொறுத்தமட்டில், எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. இரண்டு விதமாய் மத்தியில் பாஜகவின் எதிர்காலம் ஊகிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்பான அலையில் இந்துத்துவா அரசியல் பெரிய எழுச்சி பெற்று பெருவாரியான வெற்றியை மோடி பெறுவார்  என்பது ஒன்றுஅடுத்து, மக்களுக்கு பரவலாக இந்த ஆட்சி மீதுள்ள ஏமாற்றத்தினால் பாஜக போன தடவை பெற்றதை விட குறைவான இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் அல்லது பலவீனமான அரசாக தொடரும். நான் இயல்பாகவே இரண்டாவது ஆருடமே நிகழட்டும் என ஏங்கினேன். ஆனால் பாஜக தென்னகம் தவிர தேசம் முழுக்க தனது ஆதிக்கத்தை நிறுவி உள்ளது


இந்த முடிவுகள் தந்துள்ள துணிச்சலினால் பாஜக அடுத்து என்னவெல்லாம் பண்ணும் எனும் அச்சம் பரவலாக எழுந்துள்ளது. .தா., அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுமா முழுமையான சர்வாதிகாரத்தை அவிழ்த்து விடுமா என என் நண்பர்கள் சிலர் பதற்றத்தோடு விவாதிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியும் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தானே! எப்படி காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததோ அதுவே பாஜகவுக்கும் நிகழும் என அரசியல் நோக்காளர்களும் பாஜகவினரும் கூறி வந்தது தானே. இப்போது நம்முள் உள்ள கேள்வி மூன்றாம் முறை பாஜக தொடர்ந்து வெற்றி பெறுமா என்பதே. அது நிச்சயம் நிகழாது என நம்ப விரும்புகிறேன்.

இந்த ஆட்சியில் மோடி என்னவெல்லாம் கொடுமைகள் செய்வார் என கற்பனை செய்ய நான் விரும்பவில்லை. முழங்கால் வரை நனைஞ்சாச்சு, மூழ்கி விடுவோமே என மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். மேலும் இப்போதைக்கு மத்தியில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை. ராகுலை இன்னும் ஒரு தலைவராக யாரும் ஏற்க தயாராக இல்லை. மற்றபடி மேற்கு வங்கம் உட்பட்ட மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள பெருவெற்றிகளை பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் அவர்கள் தேசம் முழுக்க வலுவாகவே (பாஜக அளவுக்கு இல்லையென்றாலும்) திகழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் வீழ்ச்சி துவங்கியதும் முழுமையாய் தடயம் இன்றி காணாமல் போகவில்லையா? இதுவே விரைவில் பாஜகவுக்கும் நிகழும்

இந்த கசப்பான முடிவுகளுக்கு மாற்றாய் ஆறுதலாக தமிழக முடிவுகள் உள்ளன. திமுகவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றிருக்கும் எழுத்தாள நண்பர்கள் தமிழச்சி, ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக முழுமையாக துடைத்து நீக்கப்படும் எனத் தெரிந்தும் பாஜக தொடந்து எடப்பாடிக்கு ஆதரவளிக்கப் போகிறதா? இதை மக்களின் விருப்பமாக ஏற்று அதிமுக அரசு ஆட்சி விலகுவதே நலம். மாநிலத்தில் திமுக விரைவில் ஆட்சியமைப்பதே தமிழகத்துக்கு விடியலைக் கொண்டு வரும். அல்லாவிடில், இந்த தேர்தல் வெற்றியால் என்ன பயன் பெரிதாக இருக்க முடியும்?


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...