வெற்றி என்பது முன்பு இவ்வளவு பொருண்மையாக, தகவல்பூர்வமாய் புரிந்து கொள்ளப்பட்டதில்லை. இன்று நான் ஒரு கட்டுரையை பிரசுரித்ததும் அதை எத்தனை பேர் பார்வையிட்டார்கள், அதற்கு எத்தனை பேர் விருப்பக்குறி தந்தார்கள், பகிர்ந்து கொண்டார்கள் எனும் தகவல்கள் கேட்டோ கேட்காமலோ எனக்கு அளிக்கப்படுகின்றன. எழுத்தின் நோக்கம் பாராட்டு மட்டுமல்ல என்பதில் இருந்து கவனம், பாராட்டு, ஏற்பு, பரவலான கவனம் என தலைகீழாக இன்று மாறி உள்ளது. ஒரு பக்கம் இளம் எழுத்தாளர்கள் சமூகவலைகளை பயன்படுத்தி பிரபலமாவதை, பின்னர் அது தரும் அழுத்தம் பொறுக்காமல் விலகி, சில நேரம் முழுக்க இணையத்தில் இருந்து விலகி வாழ்வதை, பின்னர் “மனம் திருந்தி” சமூக வலைதளங்களுக்கு திரும்புவதைப் பார்க்கிறோம். இப்படி எழுதும் தளங்களில் இருந்து படைப்பாளிகள் விலகி திரும்பும் சந்தர்பங்கள் முன்பு மிக மிக குறைவு - சு.ரா சற்று காலம் எழுத்தில் இருந்து விலகி இருந்து தன் வணிகத்தை கவனித்தார்; ஜெயகாந்தன் ஒரேயடியாய் எழுதுவதை கைவிட்டு நீண்ட காலத்துக்குப் பின் திரும்பினார். ஆனால் இன்றைய எழுத்தாளனால் அப்படி ஒரு முடிவை சுலபத்தில் எடுக்க முடியாது. இன்று நாம் எழுதும் ஒவ்வொரு சொல்லும் மதிப்பிடப்படுகிறது, ஒவ்வொரு சொல்லும் நம் கைக்குவளையில் கனக்கிறது. இன்று எழுதுவதே ஒரு பாரமாய் மாறி விட்டது. இந்த பாரத்தின் அழுத்ததில் இருந்து விடுபட நாம் சதா சுயபகடியில் ஈடுபடுகிறோம், மிகையாய் உணர்ச்சிகளை கொட்டுகிறோம், சுயமிகளை தொடர்ந்து பதிவேற்றுகிறோம், வடிவேலுவின் வசனங்களுக்குள் நம் முகங்களை மறைத்துக் கொள்கிறோம். நம்மைப் போன்ற சின்ன மீன்களே இவ்வளவு தத்தளிக்கும் போது தோனியை போன்ற ஒரு திமிங்கலம் இந்த கார்ப்பரேட் கழுத்தறுப்பு கலாச்சாரத்தில் சுலபத்தில் பலியாகாது தப்பிக்க முடியுமா சொல்லுங்கள்?
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் சற்றே விட்டேந்தியான விளையாட்டுத்தனமான அணுகுமுறையை பின்பற்றியவர். தோனி தலைவரான பின், ஒருநாள், அணி வீரர்களுக்கான பேருந்தை தானே ஜாலியாக ஓட்டிச் சென்றதை வி.வி.எஸ் லஷ்மண் தன் சுயசரிதையில் ஆச்சரியமாய் குறிப்பிடுகிறார். உறுதியான தலைவராக இருந்தாலும் தோனி அந்த உறுதிப்பாட்டை இறுக்கமாக, உச்சிகோபுரத்தில் குடியிருக்கும் அதிகார மமதையாய் மாற்றாதவர். அந்த “கூல்” மனப்பாங்கே அவரது ஆதார இயல்பு - ஆரம்பத்தில் இருந்தே அவர் அப்படித் தான். தினேஷ் கார்த்திக்கும் தோனியும் ஆரம்பத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்துக்கான போட்டியில் இருந்தார்கள். வங்கதேசத்தில் இந்திய அணி ஆடிக் கொண்டிருக்கையில் கார்த்திக் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் தோனி கார்த்திக்குக்கு பவுலிங் செய்கிறார். தனது போட்டியாளர் பயிற்சி செய்து மெருகேற தான் உதவலாமா எனும் கேள்விகளுக்கெல்லாம் தோனியின் உலகில் பிரசித்தமில்லை. அவருக்கு பரஸ்பர போட்டி கூட ஜாலியான விளையாட்டு தான். தன் மீதான அபார தன்னம்பிக்கையை அவர் கைவிடாததற்கு காரணம் கிரிக்கெட்டை அவர் ஒரு விளையாட்டாக மட்டுமே கண்டார் என்பது - ஒரு தொழிலாக, கலையாக, தன் உயிருக்கும் மேலான ஒன்றாக அவர் கிரிக்கெட்டை பார்க்கவில்லை. அவருக்கு பைக், பேருந்து ஓட்டுவது, ராணுவத்தில் பயிற்சி பெறுவது, பிளே ஸ்டேஷன் விளையாடுவது, நண்பர்களுடன் ஜாலியாக இருப்பது போன்று தான் கிரிக்கெட் ஆடுவதும். எல்லா விசயங்களிலும் சீரிஸாக இருப்பார், கிரிக்கெட் ஒரு தொழிலும் கூட என்பதால் அதற்காக தோனி கூடுதலாய் உழைப்பார். ஆனால் கிரிக்கெட் தனக்கு எந்த விதத்திலும் நெருக்கடி அளிக்க அனுமதிக்க மாட்டார். இந்த அணுகுமுறையை அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக பிற வீரர்களுக்கும் பகிர்ந்தளித்தார். அதனாலே அவருக்குக் கீழ் மூத்த மற்றும் இளம் வீரர்கள் மிகச்சிறப்பாய் ஆடினார்கள். கிரிக்கெட்டை எப்படி மீண்டும் விளையாட்டாக காண்பது என அவர் தன் சகவீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
“தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வதும், ஒரே தவறை திரும்ப செய்யாதிருப்பதும் முக்கியம். நடந்ததை மாற்ற முடியாது.”
“மக்கள் என்னை ஒரு நல்ல மனிதனாக நினைவு கொள்ள வேண்டும், நல்ல கிரிக்கெட் வீரராக அல்ல.”
“என் வீட்டில் மூன்று நாய்கள் உண்டு. ஒரு தொடரையோ ஆட்டத்தையோ நான் இழந்து விட்ட பின்னரும் என் நாய்கள் என்னை வித்தியாசமாய் நடத்துவதில்லை.”
“வாழ்க்கையில் சில மோசமான நாட்கள் வரும். அப்போது நாம் ஊக்கத்தை கைவிடாமல் நினைவில் கொள்ள வேண்டும் - படம் இன்னும் முடியல நண்பா”
போன்ற தோனியின் மேற்கோள்கள் அவரது இந்த அணுகுமுறையை அழகாய் காட்டுவன. இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானது இது: தோனியின் கீழ் இங்கிலாந்தில் தொடர்ந்து கேவலமாய் இந்திய அணி டெஸ்ட் ஆட்டங்களை ஒன்றுக்குப் பின் இன்னொன்றாய் இழந்த பின் ஊடகங்கள் கேட்டன - “இந்த தொடர் தோல்வியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? உங்கள் ஆட்டவாழ்வில் எவ்வளவு மோசமான தோல்வி இது?” தோனி சொன்னார், “நீங்கள் சாகும் போது சாவீர்கள். அவ்வளவு தான். எப்படி சிறப்பாக சாவது என யோசிக்க மாட்டீங்க தானே?”
வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை இவ்வளவு நிதானமாய், நிர்தாட்சண்ணியமாய், விலகி நின்று தோனி எதிர்கொள்வதை நாம் மிகவும் ரசித்தேன். நான் மட்டுமல்ல தோனியின் ரசிகர்கள் பலரும் இதற்காகவே அவரை கொண்டாடினர்.
அதேநேரம் இது தோனியின் அணுகுமுறை மட்டுமல்ல என லஷ்மணின் சுயசரிதை நமக்கு சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆட்டத்திலோ ஆட்டத்தொடரிலோ ஒரு வீரரோ அணியோ ஆடுவதைக் கொண்டு அவர்களை மதிப்பிடக் கூடாது, ஒரு வீரரோ அணியோ மேம்பட்டு உச்சத்தை அடைய அவர்களை நீண்ட காலம் வாய்ப்பளித்து ஊக்கப்படுத்துவது முக்கியம், அணியின் பண்பாடே அதன் வெற்றி தோல்விகளை விட முக்கியம் என்கிறார் லஷ்மண். தோனியும் இந்திய அணியின் பயிற்சியாளராக அப்போது திகழ்ந்த கேரி கிர்ஸ்டனும் இப்படியான ஒரு பண்பாட்டையே இந்திய அணிக்குள் அப்போது ஸ்தாபித்தனர்.
ஆனால் இன்று ஐ.பி.எல்லில் இது சாத்தியமே இல்லை. நீங்கள் ஒரு சில ஆட்டங்களில் சொதப்பினால் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு கட்டத்தில் உங்களை யாருமே ஏலத்தில் எடுக்காத நிலை ஏற்படும். ஒரு அணி தொடர்ந்து தோல்வியுற்றால் பார்வையாளர்கள், ஊடகம், உரிமையாளர்கள் என அனைத்து தரப்புமே அவ்வணியை கைவிட்டு விடுவார்கள்; கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்குவார்கள். நீண்ட கால பொறுமையும் ஆதரவும், வெற்றி தோல்வியை கடந்த அங்கீகாரமும் ஐ.பி.எல்லில் சாத்தியமே இல்லை. கையில காசு வாயில தோசை என்பதே ஐ.பி.எல்லின் தாரக மந்திரம்.
ஆக, இந்த சூழலில் ஒருவரது / ஒரு அணியினது செயல்முறை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு, உழைப்பு, திறமை ஆகியவற்றுக்கு மதிப்பில்லை. ரன்கள், விக்கெட்டுகள், ரன்ரேட், வெற்றி புள்ளிகள் ஆகியவை குறித்த நிர்தாட்சண்ணியமான தகவல்களே நீங்கள் அடுத்த முறை டிவியில் காட்டப்படுவீர்களா, உங்களுக்கு விளம்பர வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை தீர்மானிக்கும். விராத் கோலியின் பெங்களூர் அணி தொடர்ந்து சில ஆட்டங்களில் தோற்றால் “கோலிக்கு தலைமைப் பண்பு இல்லை” என தயங்காமல் எல்லா விமர்சகர்களும் கூறுவர். ஆனால் இதே கோலி இந்திய அணியின் தலைவராய் சில தொடர்களை இழந்தால் கூட இத்தகைய விமர்சனங்களை சந்திக்க மாட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆக, இப்படியான கார்ப்பரேட் சூழல் கிரிக்கெட்டுக்குள் ஐ.பி.எல் வழி இந்தியாவில் கடைவிரித்த வரலாற்று சந்தர்பத்தில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவராகிறார். அத்துடன் அவர் மெல்ல மெல்ல தன்னை அறியாது மாறுகிறார். அவரது ஆளுமையையே அது அசைக்கிறது.
2013இல் ஏற்பட்ட சென்னைக்கு எதிரான சூதாட்ட சர்ச்சை ஒரு உதாரணம். அது வெறும் சர்ச்சை, அதை சீரியசாய் எடுத்துக் கொண்டு நம்மை உருக்குலைக்க அவசியம் இல்லை என தோனி கருதவில்லை. மாறாக அவர் அதனால் பாதிக்கப்பட்டார். அவர் உணர்ச்சிரீதியாய் அதில் தன்னை பிணைத்துக் கொண்டார். சென்னை அணியின் நிர்வாகத்திற்கு எதிரான சொற்களை தனக்கு எதிரானவையாய் கண்டார். அதனால் தான் அவர் வெளிப்படையாகவே ஸ்ரீனிவாசன் மற்றும் குருநாத் மெய்யப்பனை ஆதரித்தார். தன் அணியுடன் சம்மந்தப்பட்ட ஒரு குற்றத்தை தன்னை மீறின ஒன்றாய் வழக்கமான முந்தைய தோனி கண்டிருப்பார். ஆனால் இன்றைய தோனியால் அப்படி விட்டேத்தியாய் யோசிக்க முடியாது. கார்ப்பரேட்டுகள் அதை அனுமதிக்காது. ஊழியர்கள் ஒட்டுமொத்தமாய் ஒரு நிறுவனத்தில் அத்தனை சிக்கல்களையும் தம் தலையில் சுமந்து போராட வேண்டும் என்பதே நவீன கார்ப்பரேட் மேலாண்மை தத்துவம் - இதற்கு தேன் தடவி ஊழியர்களை stakeholders என அழைக்கிறார்கள். கார்ப்பரேட்டில் நீங்கள் இன்று பணி செய்பவர் அல்ல, நீங்கள் வியாபாரத்தை பெருக்க வேண்டியவர்கள், வியாபாரத்தின் அத்தனை ரிஸ்குகளையும் சமாளிக்க வேண்டியவர்கள் என்பதே ஸ்டேக்ஹோல்டர் எனும் பதத்தின் பொருள். தோனியை போன்ற ஒரு கிரிக்கெட் கலைஞனும் ஒரு கார்ப்பரேட்டுக்கு ஒரு பெப்ஸி / கோக் முகவருக்கு இணையானவர் தான். இன்றைய தனிமனிதனின் அத்தனை நெருக்கடிகளும் இங்கிருந்து தான் பிறக்கின்றன.
கார்ப்பரேட் கலாச்சாரத்தின் குறியீடாகவே ஐ.பி.எல் திகழ்கிறது. அங்கு ஒரு வீரரை ஒரு அணி நிர்வாகம் ஏலத்தில் வாங்கிய பின் அணியும் நிர்வாகவும் அந்த வீரரும் இரண்டல்ல. தோனி சென்னை அணியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு stake holder ஆகிறார். அவர் இந்திய அணியிடம் கொண்டதை விட அதிகமான ஒரு ஈடுபாட்டை சென்னையிடம் கொள்கிறார் - ஆபத்தான பாதகமான அளவுக்கு. ஹாட்ஸ்டார் ஆவணப்படமான Roar of the Lionஇல் பேசிய தோனி 2007 உலகக்கோப்பையில் இந்திய அணி படுமட்டமாய் ஆடி வெளியேறிய போது தான் அடைந்த மன அழுத்தத்தை விட 2013இல் நடந்த சூதாட்ட சர்ச்சை அளித்த அழுத்தமும் காயமும் அதிகம் என்கிறார். இந்திய அணியுடனான உறவை விட சென்னை அணியுடனான உறவை பலமடங்கு உயரத்தில் வைக்கிறார். “பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்துடன்” அதை ஒப்பிடுகிறார். அதாவது சென்னை சூப்பர் கிங்க்ஸ் நிர்வாகத்தின் ஒரு “மணமகளாக” தன்னைப் பார்க்கிறார் (அவர் வெளிப்படையாக பால்நிலையை குறிப்பிடாவிட்டாலும் கூட). கணவரிடம் என்ன குறை ஏற்பட்டாலும் தாலியை கண்ணில் ஒற்றிக் கொள்ளும் மனைவி அவர். இந்த ஒப்பீட்டை மேலும் அலசினால் தோனியின் இப்போதைய மனநிலையை நாம் நுணுக்கமாய் அறிந்து கொள்ளலாம். ஒரு மனைவி தன் கணவனை, குடும்பத்தை, குழந்தைகளை, உறவினர்களை தன்னில் இருந்து வேறுபடுத்திப் பார்க்காதவள். அவள் உலகமே கணவன் தான்.
ஆக சென்னையின், கார்ப்பரேட் கிரிக்கெட்டின், மனைவியாகுமுன், தோனி ஒரு ஜாலியான பெண், கல்லூரி மாணவி, இந்திய கிரிக்கெட்டுடன் டூயட் பாடும் நாயகி. ஆனால் கார்ப்பரேட் அவரை வாங்கிய பின் அவர் தாலி பந்தத்தால் பிணைக்கப்பட்ட பின் அவரால் அப்படி விட்டேந்தியாய் இருக்க முடிவதில்லை. இன்றைய கார்ப்பரேட் ஊழியர்கள் பலரையும் போல ஒவ்வொரு வேலை நாளும், ஐ.பி.எல் ஆடுகளத்தில் ஒவ்வொரு ஆட்டமும் அவருக்கு யுத்தகள மோதலாய் மாறி விட்டது. செயல்முறையே (process) முக்கியம், விளைவுகள் அல்ல என்று கூறிய தோனி இன்று இல்லை. ஏனென்றால் கார்ப்பரேட் அடிதடி நெருக்கடி சூழலில் நீங்கள் அப்படி கீதாபதேசம் பண்ண முடியாது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் நடுவருடன் அவர் மோதியது இந்த மனப்பான்மை மாற்றத்தின் ஒரு அறிகுறி மட்டுமே!
நாம் எவ்வளவு சீரழிவான ஒரு காலத்தில் வாழ்கிறோம் பாருங்கள். தோனியை போன்ற ஒருவரையே பைத்தியமாக்கும் காலம் இது. நீங்களும் நானும் எம்மாத்திரம்?