Skip to main content

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா? (2)

Image result for dostoevsky
தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் இரட்டைக் கொலைகளைச் செய்த ரஸ்கோல்நிக்கோவின் நெருக்கடிக்கான தீர்வு – திறக்காத பூட்டின் சாவி – சோனியா என்னும் இளம் பாலியல் தொழிலாளியிடம்தான் உள்ளது. அவள் உடல் குற்றத்தில் ஈடுபட்டாலும் அவள் மனம் அதில் சற்றும் படாமல் தூய்மையாய் இருக்கிறது. வளர்ந்த உடலில் மாசற்ற குழந்தை அவள். எந்த தீங்கையும் மிதமிஞ்சிய கருணையால் அன்பால், நம்பிக்கையால் எதிர்கொள்கிறாள். முழுக்க முழுக்க முரண்களின் வலி நிரம்பிய உலகில் அவள் இம்முரண்களைப் பரீசீலனை இன்றி ஏற்று அவற்றின் சிக்கலைக் கடக்கிறாள்.

அவளது அப்பா தன் குடும்பத்தின் மீது மிகுதியான அன்பு கொண்டவர். ஆனால், இந்த அன்புக்கு இணையாய் அவர் அன்பற்றவராகவும் இருக்கிறார். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தான் உழைக்க வேண்டும்; பொறுப்பாய் இருக்க வேண்டும் என அறிந்தாலும் அவரால் அப்படி இருக்க முடிவதில்லை. சம்பாதித்த பணத்தைக் குடியில் இழக்கிறார். இப்படிப் பொறுப்பற்று இருக்கிறோமே எனும் கவலையில் அவர் மேலும் குடிக்கிறார்; மீதமுள்ள பணத்தை மேலும் தொலைக்கிறார்.
அவரது மகள் சோனியா குடும்ப வறுமையை சமாளிப்பதற்காய் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். ஆனால், தன் குடும்ப அவலத்துக்குக் காரணம் என்ன எனச் சிந்தித்து அவள் கண்ணீர் விடுவதில்லை; குடியைத் தனிப்பட்ட ஒழுக்கக் கேடாய்க் காண்பதோ, பாலியல் தொழிலை இந்த ஒழுக்கக் கேட்டினால் தன் மீது திணிக்கப்பட்ட ஒரு சமூகக் கேடாய்க் காண்பதோ இல்லை. தன் மீது பாசம் மிக்க அப்பா எப்படித் தனது வாழ்க்கை சீரழிவுக்குக் காரணமாகலாம் என அவள் வினவுவதில்லை; தன்னைப் பாதுகாக்க வேண்டிய சமூகம் எந்த அக்கறையுமின்றித் தன்னை ஒரு குழந்தைத் தொழிலாளியாக மாற்றிச் சுரண்டுவது குறித்து அவள் கொதிப்பதில்லை. “வாழ்க்கையே இப்படித்தான்” எனத் தத்துவம் உதிர்த்து தனக்குள்ளே முடங்குவதும் இல்லை. எதிர்த்துக் கலங்குவதோ அதைக் கண்டு பயந்து பின்னோடுவதோ அவள் இயல்பு இல்லை.
மாறாக இந்த முரண் இயல்பே மனிதனின் ஆதார பிரச்சனை என உணர்ந்து இந்த அவலத்துக்காய் அவள் வருந்துகிறாள்; முரண்பட்டுத் தவிக்கும் மனிதனுக்காய் அவள் கண்ணீர் விடுகிறாள். இதன் வழி அவள் முரணுக்கு வெளியே தன்னை வைக்கிறாள். முரணுக்குள் இருந்தாலும் அவள் அதனால் பாதிக்கப்படாதவள் ஆகிறாள். அவளது மிகையான அன்பு, மிகையான பாசம், மிகையான அபத்தமான கருணை, இந்த அவலமான வாழ்வின் மீது அவள் வைக்கும் அபாயகரமான, அதர்க்கமான நம்பிக்கை அவளைக் காப்பாற்றுகிறது. முரண் எனும் பாரத்தை உணர்ச்சிகளின் தோள்களில் ஏந்தி அவள் கல்வாரி மலையில் சுலபமாய் ஏறுகிறாள். தீமையின் கறைகளைத் தன் கண்ணீரால் கழுவுகிறாள். அவளை உச்சபட்சமான ஒரு பாத்திரமாய், எந்தத் தீமையும் தீண்டாத பரிசுத்த உருவாக தாஸ்தாயேவ்ஸ்கி (ரஸ்கோல்நிக்கோவ் வழி) காண்கிறார்.
முரணுக்குள் மாட்டிக்கொண்டாலும் பிரச்சினை இல்லை. அதற்குப் பொறுப்பாய் தன்னை உணர்ந்து தவிக்காமல் இருந்தால் போதும்; இந்தப் பொறுப்புணர்வே, அது தரும் அகங்காரமே மனிதனின் அடிப்படைப் பிரச்சினை என்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி.
ரஸ்கோல்நிக்கோவ் சோனியாவை எதிர்கொள்ளும் தருணத்தில் தனது பிரச்சினையின் ஆதாரப் புள்ளியையும் அறிகிறான். அவன் அவளிடம் தஞ்சம் அடைகிறான்; மன்னிப்பு கோருகிறான். அவள் அவனைக் காவல் துறையிடம் சரணடையச் சொல்கிறாள். சட்டத்தின் பொருட்டல்ல, அவன் மனநிம்மதி பெறுவதற்கு. தண்டனையை ஏற்பதே மீட்சிக்கான முதல் படி என அவள் உள்ளூர உணர்ந்திருக்கிறாள்.
ரஸ்கோல்நிக்கோவ் தன்னை அறியும் இடம் இந்நாவலில் முக்கியமானது. அவன் தன்னைப் பலவித முரண்களின் (சரி செய்ய முடியாத) முடிச்சு என உணர்கிறான். ஒரு முடிச்சை நாம் அவிழ்க்க முதலில் அதை மேலும் முடிச்சாக்காமல் இருக்க வேண்டும். இளக விட்டு ஒவ்வொரு முடிச்சாகத் தானே அவிழ அனுமதிக்க வேண்டும். நாவலின் முடிவில் ரஸ்கோல்நிக்கோவ் இதையே செய்கிறான். தன்னை அறியும் நொடியில் அவன் தானற்றுப் (முரண்களற்று) போகிறான். அவனது ஜுரம் சரியாகிறது. ஜன்னி தீர்ந்து அவன் இயல்பாகிறான்.

மேலும் படிக்க…
https://www.minnambalam.com/k/2019/04/27/20


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...