Skip to main content

தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்தால் ஜுரம் வருமா? (1)

Image result for insulted and humiliated
“எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்ததுமே ஜுரம் அடிக்கத் தொடங்குகிறது” என்றார் எனது நண்பர் ஒருவர். இதை அவர் சொல்லி சில மாதங்கள் இருக்கும். நேற்று தாஸ்தாயேவ்ஸ்கியின் Insulted and Humiliated நாவலையும் விபூதிபூஷன் பந்தோபத்யாயின் அபராஜிதோ நாவலையும் மாற்றி மாற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். Insulted and Humiliated எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவூட்டியது. அப்போதுதான் நண்பர் என்ன சொல்ல வந்தார் எனப் புரிந்தது.

ஜுரம் விட்ட மறுநாள் ஒரு புத்துணர்வு - சோர்வுடன் கலந்த புத்துணர்வு, ஒரு துடிப்பு - கவனம் கவனம் என மனம் எச்சரித்துக்கொண்டே இருக்க, ததும்பும் உடலின் முனைப்பு தோன்றும். சிறகுகள் முளைத்தது போன்ற உணர்வும் அதனோடே கைகால் முட்டிகளில் மெல்லிய வலியும் தோன்றும். ஜுரம் விட்டாலும் ஜுரம் விடாத இந்தப் புத்துணர்ச்சியே விபூதிபூஷனின் நாவலின் தொனி. அபாரமான தன்னம்பிக்கையும் மறுநொடியே இந்த வாழ்க்கை சிதைந்துவிடலாம் எனும் எச்சரிக்கை உணர்வும்.

Image result for insulted and humiliated
மரணம், இழப்பு, ஏமாற்றம் என ஒன்றன் பின் மற்றொன்றாய் வருகையில் சோர்ந்து விழும் அப்பு தன் முன்னால் ஒரு சின்ன நம்பிக்கை கீற்று தோன்றினாலே அதன் ஒளியில் நிமிர்ந்து நிற்கக்கூடியவன். கணவனை இழந்து வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்ட அவனது தாயார் சரபோஜெயா இதே ஜுரத்தனமான துணிச்சலை அமைதியாய் வெளிக்காட்டுகிறார். அபராஜிதோ முழுக்க இந்த முரண் மனநிலையே பளிச்சிடுகிறது.
தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் ஜுர நிலை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது. நாவலாசிரியனே மையப் பாத்திரம் பற்றிச் சொல்லும்போது அடிக்கடி குறிப்பிடுவது அவனது ஜுரத்தைப் பற்றியாகவே இருக்கும். குற்றமும் தண்டனை நாவலின் ரஸ்கோல்நிக்கோவ், The Doubleஇன் கொல்யாட்கின் போன்றோர் உதாரணம். உடல்நிலை மிக மோசமாகி கிட்டத்தட்ட சித்தம் கலங்கிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். தாஸ்தாயேவ்ஸ்கியின் சிறப்பு என்னவெனில் அவரது கதைசொல்லல் பாணியிலேயே இந்த ஜுர வேகம் வந்துவிடும். கதைசொல்லி தன்னைப் பிரதான பாத்திரத்திலிருந்து வேறுபடுத்திக்கொண்டு நோயாளியைக் கவனிக்கும் மருத்துவர் போல ஆகி சித்தரிக்க மாட்டார். ஒருகட்டத்தில் நோயாளியே டாக்டர் எனும் உணர்வு நமக்கு ஏற்பட்டுவிடும். இதனால் வாசகனுக்கும் ஜுர உணர்வு ஏற்பட்டுவிடுகிறது (கரமஸோவ் சகோதரர்கள் நாவல் சற்றே விதிவிலக்கு).
தாஸ்தாயேவ்ஸ்கியின் மற்றொரு சிறப்பு என்னவெனில் அவரது மைய பாத்திரம் ரஸ்கோல்நிக்கோவ் கடும் துயரத்தில் கொந்தளிப்பில் மாட்டிக்கொண்டிருந்தாலும் அது கசப்பாக, வாழ்க்கை மீதான வெறுப்பாக உருப்பெறாது. அவன் கசப்பில் விழுந்துவிடாமல் அதனுடன் தொடர்ந்து போராடுகிறவனாக இருப்பான். அவனது கொந்தளிப்பு ஏன் ஏற்படுகிறது? அவன் ஏன் ஒட்டுமொத்தமாய் வாழ்க்கை மீது கசப்பு கொள்ளாமல் இருக்கிறான்? இதற்கான விடை அவன் எதிர்கொள்ளும் உள்முரணில் இருக்கிறது.

மேலும் படிக்க… https://www.minnambalam.com/k/2019/04/26/15

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...