Skip to main content

தப்பியோட்டம்


Related image
என் வாழ்வின் கணிசமான பகுதியை நான் பிரியமானவர்களுக்காக செலவழித்திருக்கிறேன். ஆனால் அவர்களில் எத்தனை பேர் இப்போது என்னுடன் இருக்கிறார்கள்? உறவுகளின் அழகு அதன் நிரந்தரமின்மை எனத் தோன்றுகிறது.

எத்தனை எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறேன். அந்த வேலைகளில் இருந்தும் ஒன்றும் பெற்று விடவில்லை. சம்பாதித்த பணமும் தங்கவில்லை. இனிய, கசப்பான நினைவுகள் மட்டுமே எஞ்சுகின்றன. கடந்த 11 ஆண்டுகளாய் நான் எழுதியவை மட்டுமே அவ்வளவு விசுவாசமாய் என்னுடன் ஒரு நிழலைப் போல வருகின்றன.
 இதுவே எல்லா படைப்பாளிகளுக்கும் நேர்வது. எழுத்து நிரந்தரமானது. நிரந்தரமான ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வே தனிமையை ஏற்படுத்துகிறது. இந்த தனிமையின் அழுத்தம் நம்மை நிரந்தரமற்ற துர்பலமான உறவுகள், அனுபவங்களை நோக்கி தள்ளுகின்றன. நிரந்தரத்தின் அழுத்தத்தில் இருந்து, தனிமையில் இருந்து விடுபட மீண்டும் உறவுகள், வேலைகள் என ஒரு சுழற்சிக்குள் போய் விழுகிறோம். அவை எதுவுமே இறுதியில் எஞ்சாது என அறிந்து கொண்டே தான் செய்கிறோம்.
கலை வாழ்வுடன் அணுக்கம் வரும் போதெல்லாம் ஒருவன் மிக மிக சாதாரணமான கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், சூது, காமம், மது, பணம், அதிகாரம், புகழுக்காக அதிகமாய் அலைகழிகிறான். இவை அவன் அழியக் கூடியவன் என அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதுவே அவனுக்கு வேண்டும். அது அவனுக்கு நிம்மதி கொடுக்கிறது.
கணிசமான கலைஞர்கள் தேவையற்ற சர்ச்சைகளில், சிக்கல்களில் மாட்டி அழிகிறார்கள். மதுவில், நோய்மையில், அன்பில் அழிகிறார்கள். கலை உலகில் ஒரு இடம் பெறுவதை விடவும் இந்த அன்றாட உலகில் தம் இடத்தை அழிப்பதே அவர்களுக்கு உவப்பாக உள்ளது.
ஒரு எழுத்தாளன் எதிர்பாராமல் மரிக்கும் போது அவன் தன் எழுத்து உருவாக்கிய நித்தியத்துடன் இணைகிறான். அவன் அதற்கு மேல் எதையும் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அப்போது அவனது வாசகர்கள் பரிதவிக்கிறார்கள். அவன் எழுத்துலகம் அழியாத இடத்தில் இருப்பது அவர்களை பதற்றப்படுத்துகிறது. அவர்கள் அஞ்சலிக் கூட்டங்களுக்கு குவிகிறார்கள். அவனைப் பற்றின நினைவுகளை தொகுக்கிறார்கள். சக எழுத்தாளர்கள் அஞ்சலிக் குறிப்புகளாக எழுதித் தள்ளுகிறார்கள். மீண்டும் அவனை நிரந்தரத்தில் இருந்து நிரந்தரமின்மை நோக்கி இழுத்துப் போடுகிறார்கள். அவனை கையைப் பற்றி தம் அருகே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்த்தி, மாலை சார்த்தி, மூக்கில் பஞ்சு வைத்து, அவன் தம்முடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
நமது இந்த சின்ன வாழ்க்கை நிரந்தரத்தில் இருந்து நிரந்தரமின்மை நோக்கிய தப்பியோட்டமே!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...