Skip to main content

கலைஞரா கருணாநிதியா?


மின்னம்பலத்தில் வெளியாகி உள்ள எனது கட்டுரை “கலைஞரா கருணாநிதியா?” (https://www.minnambalam.com/k/2018/08/22/40) சமஸ் பட்டப்பெயரை அரசியலில் பயன்படுத்துவது குறித்து எழுதின குறிப்பின் மீதான எனது எதிர்வினை. பட்டப்பெயர்கள் பயன்படுத்துவதையும் ஜனநாயகத்தையும் எதிர்மைகளாய் நாம் காணக் கூடாது என இதில் பேசி இருக்கிறேன். இக்கட்டுரைக்கு பாராட்டுக்கள் வந்தவிதமாய் உள்ளன. கீழே சில கடிதங்கள்:

பத்திரிக்கையாளர் திரு.சமஸ் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரை சிறப்பாக இருந்தது.நன்றி வணக்கம் -
   
                   தோழமையுடன்
                 மசி.சுதேசி
அன்புள்ள மசி. சுதேசி
உங்கள் பாராட்டுக்கு நன்றி
ஆர். அபிலாஷ்
அன்பிற்கினிய அபிலாஷ் சந்திரன்,
தங்களுடைய கட்டுரையை மின்னம்பலத்தில் படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்.
* திரு. சமஸ், தனது உண்மையான பெயரான ஸ்டாலின் என்றே, அழைத்தால் மகிழ்வாரா...அல்லது சமஸ் என அழைத்தால் ஏற்பாரா?
* உறவுப் பெயர்கள் கூட, ஒருவரை மரியாதை நிமித்தமாக அழைக்க ஏற்படுத்தப்பட்டதே. அப்படி இருக்கையில், அவருடைய அப்பாவை சந்திரசேகர் என்றும், தாயை மலர் என்றும் அழைப்பாரா சமஸ். அதேபோல், மற்றவர்களும் அப்படி அழைத்தால் மிகவும் மகிழ்வாரா? என்பதை எல்லாம் சமஸ் சிந்தித்தாரா...என்று சொன்னால் சரியாக இருக்கும்.
* இதனை பொறுத்தவரை, அவர் கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து வந்தவர் என்பதால், இயல்பாக இருக்கக் கூடிய குழப்பம் இதிலும் இருப்பதாகவே எண்ணுகிறேன். கம்யூனிசத்தை மண்ணுக்கு ஏற்ப பொருத்திப்பார்க்காமல் தோற்பது போலவே, பெயர் என்பது வெறுமனே அழைப்பதற்காக... என்று வாதிடுவதாகவே எண்ணுகிறேன்.
தங்கள் தரப்பு வாதத்தை மிகச் சிறப்பாக எடுத்து வைத்திருந்தீர்கள் என்பதில் அய்யமில்லை.
நன்றி!
அன்புடன்
செழியன்.மா.
பத்திரிகையாளர்
அன்புள்ள மா. செழியன்
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
அதேவேளை நான் உங்கள் கேள்விகளுடன் முழுக்க உடன்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒருவர் பொதுவெளியில் தன்னை எப்படி முன்வைக்கிறாரோ அப்படியே அவரை அழைப்பதே நியாயம் என சமஸ் சொல்கிறார். அவர் தான் சமஸ் என அறியப்பட விரும்பினால் நாமும் அவரை அவ்வாறே அழைத்தல் வேண்டும். தாயை பெயர் சொல்லி அழைக்கலாம் என்றும் சமஸ் கோரவில்லை. இந்த வழமைகளை, மரபான முறைகளை அவர் மறுக்கவில்லை.
அரசியல் களத்தில் மட்டுமே பட்டப்பெயர்கள் மக்களிடம் இருந்து தலைவர்களை முழுக்க வேறுபடுத்தி, அவர்களை அரியணையில் அமர வைத்து, நம்மை மன்னர் ஆட்சிக் காலத்தை பின்னோட்டி செல்கின்றன என்பதே சமஸின் குற்றச்சாட்டு. ஜனநாயகத்தில் அனைவரும் சமம். ஆக, ஏன் ஒரு தலைவரை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது?
என் வாதம் இவ்வாறு நேரடியாய் புரிந்து கொள்ளக் கூடாது, பெயர் மட்டுமே ஜனநாயகத்தை உருவாக்கவோ அழிக்கவோ செய்யாது என்பதே. என் ஊரில் தொட்டில் குழந்தையின் ஆண் குறியை கிள்ளி விட்டு “செல்லத் தாயளி” என்பார்கள். அது வசை அல்ல. “உன்னையெல்லாம் போடணும்டா” என நண்பர்களிடையே பேச்சு அடிபடுவதைக் கண்டிருக்கிறேன். இந்த மிகைகளைப் போன்றே “கலைஞர்”, “அம்மா” மாதிரியான பட்டப்பெயர் பயன்பாடு இருக்கிறது என்பதே என் பார்வை.
கலைஞர் குறித்த சிறப்பு நீயா நானாவில் இமையம் பேசும் போது மனம் உடைந்து பேச முடியாமல் அழுததைத் கண்டேன். அந்த அழுகையை விட உன்னதமான மொழி உண்டா? ஒரு எழுத்தாளனாய் அவர் இன்னும் கராறாய் பகுத்தறிவு நோக்குடன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளை முன்வைத்திருக்க முடியும். ஆனால் ஒரு கண்ணீர்த் துளியின் கொதிப்புடன் தன் ஆழ்மன உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியதற்கு இணையாக தன் சொற்களைக் கொண்டு, தர்க்கத்தைக் கொண்டு பேசியிருக்க முடியுமா? முடியாது.
நாம் அவ்வப்போது பகுத்தறிவை கைவிட வேண்டும் என்பதே நான் சமஸிடம் சொல்ல விரும்புவது! (அதற்காய் கலைஞருக்கான அஞ்சலிக் கூட்டத்தில் அவரும் போய் அழ வேண்டும் என நான் கோரவில்லை.) மக்களை புரிந்து கொள்ளும் போது, மக்களிடம் உரையாடும் போது பகுத்தறிவே நமது முக்கிய தடை.
நன்றி
ஆர். அபிலாஷ்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...