Skip to main content

புதுமைப்பித்தனும் சாஹிர் நாயக்கும்


Image result for pudhumai pithan

நான் எழுத வந்த பதின் வயதில் முதலில் வாங்கிய சிறுகதைத் தொகுப்பு “புதுமைப்பித்தன் கதைகள்” – அதை கிட்டத்தட்ட ஒரு விவிலியம் போல் தினமும் வாசித்தது நினைவுள்ளது. புதுமைப்பித்தனிடம் வலுவான ஆசிரியர் குரல் ஒலிக்கும் – அவரது நையாண்டியும் சாட்டை சொடுக்குவது போன்ற கூர் சொற்களும் கசப்பேறிய பகடியும் கொண்ட குரல் ஒரு கட்டத்தில் நம்முடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்து விடும். புதுமைப்பித்தன் நமக்கு சிறுவயதில் இருந்தே நன்கு பழக்கமான உறவினர் எனும் உணர்வு ஒரு கட்டத்தில் வந்து விடுமாகையால் அவரை “நம்ம புதுமைப்பித்தன்” எனும் அணுக்கமின்றி யோசிக்கவே முடியாது.

இது எனக்கு மட்டுமல்ல, எல்லா பு.பி வாசகர்களுக்கும் பொருந்தும். பல்கலையில் என்னுடன் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்கள் புதுமைப்பித்தன் என்றாலே மறுநொடி முகம் மலர்ந்து விடுவார்கள். பெருந்தேவி பு.பியை தன் காதலன் என்றே குறிப்பிடுகிறார். அவரது அபாரமான ஸ்டைல், நகைச்சுவை உணர்வு, ஆழமான எழுத்து ஆகிய அம்சங்கள் தாண்டி அவரது இடையறாது பின் தொடரும் குரலும் இதற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.
 நான் அடுத்து வாங்கி வாசித்த சிறுகதைத் தொகுப்பு சுந்தர ராமசாமி சிறுகதைகள் – சு.ரா பு.பியை விட நளினமான கலைஞர் – ஆனால் அவர் தன் கதைகளில் சு.ரா கள்ளக் காதலன் போல நிழலோடு நிழலாக மறைந்திருப்பார். அவரை அலசி வடிகட்டினாலும் கண்டெடுக்க இயலாது. சு.ராவின் மொழியின் கலை நயத்தில் சொக்கிப் போனவர்களை, அவரது ஆளுமையின் ஆதிக்கத்தில் ஓய்வு கொண்டவர்களை நீங்கள் காணலாம் – ஆனால் சு.ரா என்றதுமே முகம் மலர்கிற, தானாகவே புன்னகைக்கிற வாசகர்களை காண இயலாது. சு.ராவின் குரல் ரொம்ப ரொம்ப அடங்கி ஒலிப்பது என்பது ஒரு முக்கிய காரணம்.
பு.பியின் வாழ்க்கைக் கதையை (ரகுநாதன்), பு.பி பற்றி அவரது மனைவி எழுதிய நினைவலைகள் ஆகியவற்றை ரசித்துப் படித்திருக்கிறேன். பு.பியை ஆளுமை பற்றி யார் எங்கே பேசினாலும் நான் என்னை மறந்து நின்று விடுவேன். நடுவே ராஜ் கௌதமன் பு.பியின் சாதியம் பற்றி எழுதிய கட்டுரை கிளப்பிய விமர்சன சூறாவளியின் போது நான் ஒரு மரக்கிளையை பற்றியபடி அச்சமுடன் வேடிக்கை பார்த்தது நினைவுள்ளது.
 இந்த இடைப்பட்ட காலத்தில் பு.பியை பலமுறை மீள மீள படித்திருக்கிறேன். அவர் ஒரு முழுமையாக மலராத மேதை எனும் எண்ணம் உறுதிப்படாத நாளில்லை. துப்பறியும் கதை, வேதாளக் கதை, தொன்மக் கதை, பகடி, சமூக விமர்சனக் கதை, வரலாற்று-அறிவியல் புனைவு, மீபொருண்மை தத்துவக் கதை இப்படி அவர் பயிலாத கதை வடிவம், பாணி, கருப்பொருள் இல்லை – அவரளவு இவ்வளவு வெற்றிகரமாய் பல்வேறு கதை வகைகளில் ஜொலித்தவர்களும் வேறில்லை. மௌனி, லாசாரா, சு.ரா, ஜெ.மோ என பல ஆளுமைகளிடம் பு.பியின் சாயல் உண்டு – சொல்லப் போனால் அவர்களின் கதை பாணிகளை பு.பி அப்போதே முயன்றி வெற்றி கண்டிருக்கிறார். நாம் அரைநூற்றாண்டாக பரிசீலித்த பல பரீட்சார்த்த அம்சங்களை அவர் அன்றே வெற்றிலை இட்டு மென்று துப்பி இருக்கிறார். அவசர அவசரமாய் பல ஆச்சரியங்களை சாதனைகளை நிகழ்த்தி விட்டு ஒரு கனவு போல் கலைந்து போனார் பு.பி.
புதுமைப்பித்தன் பற்றி இந்த நினைவுகளெல்லாம் இப்போது தோன்ற ஒரு காரணம் உண்டு. நாளை என் இந்திய இலக்கிய வகுப்பில் ஆங்கிலம் மட்டும் பேசும் மாணவர்களுக்கு புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்தப் போகிறேன். அதற்கு அடுத்த வகுப்பில் “சாப விமோசனம்” கதை (லஷ்மி ஹோம்ஸ்டுரோம் மொழியாக்கம்).
“சாப விமோசனம்” கதையை என் பதின் வயதில் முதலில் படித்தேன். எனக்கு அப்போது பு.பியின் சமூக பகடி, நகைச்சுவை, எதார்த்த கதைகள் அளவுக்கு இந்த மாதிரியான விமர்சன தொனி மிக்க கதைகள் பிடிக்கவில்லை. ஆனால் வகுப்புக்காக இப்போது திரும்ப படிக்கையில் எவ்வளவு அபாரமான கதை இதுவென புரிகிறது.
புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்துகையில் மிக மிக சுருக்கமாய் நமது அரைநூற்றாண்டு சிறுகதைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், முக்கியமான சிறுகதை ஆளுமைகள் பற்றி பேசலாம் என்றிருக்கிறேன். இப்படி ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு ஒருநாள் பு.பியை கற்பிப்பேன் என நான் சத்தியமாய் நினைக்கவில்லை. அந்தளவுக்கு இந்திய மொழியாக்க இலக்கியத்துக்கு, பிராந்திய படைப்பாளிகளுக்கு கல்விப் புலத்தில் இடம் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம் எனக்கு இப்படி ஒரு சோதனை வாய்க்கும் என்றும் நான் கற்பனை செய்ததில்லை.
பு.பியின் பெயரை முதன்முதலில் கேள்விப்படுகிற மாணவர்களிடம் அவரைப் பற்றி பேசப் போகிறேன். எனது ஆவேசம், உற்சாகம், உணர்ச்சிவேகம் கண்டு அவர்கள் சற்றே மிரளப் போகிறார்கள். எப்படி முயன்றாலும் என்னால் நிதானமாய் பு.பியைப் பற்றி பேச இயலாது என நினைக்கிறேன். இது சாஹிர் நாயிக்கை சங்கிகளின் கருத்தரங்கில் உரையாற்ற சொல்வது போல.
எம்.எஸ்.எஸ் பாண்டியனின் Brahmin and Non-Brahmin நூலில் சுதந்திரத்துக்கு முன்பான அரை நூற்றாண்டில் சென்னை பிராந்தியத்தில் செயல்பட்ட கிறுத்துவ போதகர்கள் பற்றி ஒரு சித்திரம் வரும் – சந்தையில் சற்றே உயரமான மேடையில் நின்று கொண்டு தன்னைக் கடந்து போகும் கூட்டமான மக்களை நோக்கி “ஆதியிலே தேவன் பூமியையும் வானத்தையும் சிருஷ்டித்தார்” என கூவியபடி போதிப்பார்கள் இந்த தேவனின் ஊழியர்கள். மக்கள் ஏதோ விசித்திர பாணியை வேடிக்கைப் பார்ப்பது போல் இவர்களை சூழ்வார்கள், ஆனால் அடுத்து உடனே ஆர்வம் இழந்து கலைந்து விடுவார்கள். ஆனால் நம் போதகரோ இதனால் மனம் தளர மாட்டார். அவர் பாட்டுக்கு தேவ கிருபை பற்றி பேசிக் கொண்டே போவார்.
பு.பியை பற்றின என் வகுப்பு இப்படி அமைந்து விடக் கூடாது ஆண்டவரே!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...