Skip to main content

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (5)

(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for gautham menon movies

8. பெண் இயக்குநர்களின் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் பெண்மை குறைந்தவர்களாகவும், ஆண் கதாபாத்திரங்கள் பெண்மை நிறைந்தவர்களாகவும் இருப்பதை ஒரு கட்டுரையில் சுட்டியிருக்கிறீர்கள். உங்களுடைய வேறொரு புத்தகத்தில், "தைரியமான உறுதியான பெண்ணும், நெகிழ்ச்சியான கவித்துவமான ஆணும் நம் எதிர்கால சமூகத்தின் லட்சியப் பிரதிநிதிகளாக இருப்பார்கள்" என்று எழுதி இருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்கள்.

ஆர். அபிலாஷ்: ஒரு பாலினத்துக்கு இது தான் அடிப்படை சுபாவம் என்று முன்பு உறுதிப்பாடுகள் இருந்தன. இன்று அது மாறி விட்டது. இன்னும் நெகிழ்வான நிர்மையான உறவுகளே இன்று வெற்றி பெறுகின்றன. அதற்கு ஆண்கள் பெண்களின் இடத்தையும் பெண்களின் ஆண்களின் இடத்தையும் (இந்த இடங்களே கற்பனையான வரையறை தான்) எடுத்துக் கொள்ள தேவையிருக்கிறது. இது இன்றைய காதலை லகுவாக அழகாக கவித்துவமாய் மாற்றுகிறது.
 ஆனால் துரதிஷ்டவமாய் நம்மால் முழுக்க இப்படி இருக்க முடிவதில்லை. இன்றைய ஆண்களின் மனம் பாதிக்கு பாதி பழைய காலத்தில் உறைந்திருக்கிறது. பெண்களும் அவ்வாறே. இது உறவுக்குள் சிக்கலை, போராட்டங்களை, குழப்பங்களை உண்டு பண்ணுகின்றன. எதிர்கால லட்சிய ஆணும் பெண்ணும் எப்படி இருப்பார்கள் என்ற எனது கற்பனையே நீங்கள் மேலே குறிப்பிட்ட எனது மேற்கொள்.

9. கவுதம் மேனன் தன் திரைப்படங்களின் கதாநாயகர்களுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்தவர். அவருக்குப் பிறகு வந்த இயக்குநர்கள் அதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லத் தவறிவிட்டார்களா?

ஆர். அபிலாஷ்: ஆம் அது உண்மையே. அதற்கு ஒரு காரணமும் உள்ளது. நாம் மேலும் மேலும் நகர்வயப்படும் போது கௌதம் மேனன் பாணி படங்களை அதிகமாய் இயக்குகிற இயக்குநர்கள் தோன்றுவார்கள். இப்போதைக்கு அவர் சிறுபான்மை பார்வையாளர்களுக்கான இயக்குநரே. ஆனால் கௌதம் மேனன் சித்தரிக்கும் சட்டென உடைந்தழும், பெண்ணிடம் சுலபத்தில் சரணடையும் மென்மையான அந்த ஆண்கள் முக்கியமானவர்கள்.

10. ஆண்களுக்கு இடையேயான புரொமான்ஸ் தமிழ் சினிமாவில் எப்படிக் காட்டப்படுகிறது என்பதை விளக்கி எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு புறம், பெண்களுக்கு இடையேயான நட்பு ஏன் பரஸ்பரம் பொறாமை நிறைந்த ஒன்றாகச் சித்தரிக்கப் படுகிறது?

ஆர். அபிலாஷ்: திரையரங்கில் நுழைவுச்சீட்டு வாங்கி இடங்களை ஆக்கிரமிப்போர் இன்றும் அதிகம் ஆண்கள் தாம். இதுவே நாம் ஆண்களுக்கான படங்களை இங்கு அதிகம் எடுக்க காரணம். பெண்களுக்கு இடையிலான பிரியத்தை, நட்புணர்வை காட்டும் படங்களை இங்கு எடுப்பது மிக மிக சிரமம். மலையாளத்தில் அத்தகைய ஒரு படத்தை பத்மராஜன் எடுத்திருக்கிறார்: “தேசாடன கிளி கரயாறில்ல”.
தமிழில் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஆப்களுக்காய் படங்கள் எடுத்து வெளியிடப்பட்டால் பெண் தரப்புக்காய் பெண்களைப் பற்றி மட்டுமான படங்கள் வர வாய்ப்புண்டு. ஒருவேளை எதிர்காலத்தில் நிகழலாம்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...