Skip to main content

பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (2)


Image result for bigg boss sendrayan
பிக்பாஸின் அடுத்த பருவத்திற்கு தயாராகும் போட்டியாளர்கள் ஒரு பாடத்தை நன்றாய் கற்றிருப்பார்கள்: இங்கு ஜெயிக்க சதா ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி ஷோவுக்கு ஒரு பொழுதுபோக்கு சாத்தியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதே நேரம், யாரையும் அதிகம் துன்புறுத்தவோ புண்படுத்தவோ செய்யாமல் இருக்க வேண்டும். வீட்டுக்குள் யாருடனும் இசைவாக இருப்பது நிலைப்புக்கு உதவாது. ரேட்டிங் ஏற உதவினால் மட்டுமே நீங்கள் நீடிக்க இயலும்.


கார்ப்பரேட்டில் இன்றுள்ள சூழலும் இதுவே: அனைவருக்கும் இணக்கமான, நட்பார்ந்தவர்களிடம் அனைவருமே அன்பாக இருப்பார்கள். ஆனால் அது ஒரு போட்டிக் களம் என்பதை உணர்ந்து, தன்னை தக்க வைத்துக் கொள்ள, யாரையும் காலை வாரி விட துணிந்து செயல்பட வேண்டும். போட்டியுணர்வே இணக்க சுபாவத்தை விட முக்கியம். ரம்யா வெளியேற்றப்பட வைஷ்ணவியும் மும்தாஜும் காப்பாற்றப்படுவது இதனால் தான்.
நான் முன்பு ஒரு நிறுவனத்தில் ஒரு பைலட் புரோஜெக்டில் வேலை செய்தேன். மூன்று மாதங்களில் புரோஜக்ட் சொதப்ப, எங்களை ஒவ்வொருவராக வீட்டுக்கு அனுப்பினார்கள். வெளியேற்றத்தின் போதான நேர்முகத்தின் போது புரோஜெக்டை காப்பாற்ற இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என கேட்டார்கள். எனக்கு அது என் இறுதி நாள் எனத் தெரியாது. நான் என் சக ஊழியர் ஒருவரை பாராட்டிப் பேசினேன்: அவருக்கு அத்துறையில் சில நல்ல தொடர்புகள் உண்டென்றும், அதைக் கொண்டு நிச்சயம் புரோஜெக்டின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் சொன்னேன். என் நோக்கம் உண்மையில் எப்படியாவது புரோஜக்டை இறுதி சுவாசம் அளித்து தேற்ற வேண்டும் என்பது. மனித வள மேலாளர் மிகுந்த கரிசனத்தோடு என்னை கவனித்துக் கேட்டார். என் கருத்துக்களை பாராட்டி கைகுலுக்கினார். ஒரு மாதத்தில் என்னை வெளியேறக் கேட்டு அடுத்த நாள் மின்னஞ்சல் வந்தது. என் நண்பர் மட்டும் கூடுதலாய் மூன்று மாதங்கள் தங்கினார். நல்ல நண்பனாய் இருக்க முயன்றதாய் நான் தோற்றேன். என் நண்பரோ அடுத்த நாள் நடந்த அவரது நேர்முகத்தின் போது தன் நண்பனான என்னைப் பற்றி மேலாய் பேச வேண்டும் என்றெல்லாம் பிரயத்தனப்படவில்லை. மாறாக, நான் அவரைப் பற்றி உயர்வாக சொன்னதை வைத்து அவர் தன் பிம்பத்தை கூடுதலாய் ஊதிப் பெருக்கி மேதாவித்தனமாய் பேசி தப்பித்தார்.
பாலாஜி, டேனியல், மஹத், செண்டிராயன் எல்லாம் என் நண்பரைப் போன்று ஷோவில் தம் இடத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதிலே ஆவேசமாய் இருப்பவர்கள்; அதற்காய் அற்ப சண்டைகளில் ஈடுபட, தன்னிரக்கம் தொனிக்க பேச தயங்காதவர்கள்.
ஷோவில் இன்றைய அத்தியாயத்தில் (23 ஜூலை) செண்டிராயன் தனக்கு ஐந்து வருடங்களாய் குழந்தை இல்லை என்றும், அதனால் தத்தெடுக்கப் போவதாயும் பேசியது பச்சை நாடகத்தனம் மற்றும் அயோக்கியத்தனம். இதனால் தன் மனைவியின் மனம் புண்பட்டிருக்கும் என்பதைப் பற்றி அவர் கவலை கொண்டாரா? எப்படியாவது தன்னிரக்கத்தை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிம்பத்தை பெருக்கவே அவர் விரும்புகிறார். (அவர் நிச்சயம் தத்தெடுப்பார் என எனக்குத் தோன்றவில்லை.) ரம்யா சொல்வது போல் அந்த வீட்டில் ரொம்ப அப்பாவியாய் நாடகம் போடும் வேஷதாரி செண்டிராயன் தான்.
நாம் வாழும் கார்ப்பரேட் உலகம் பாலாஜி, டேனியல், மஹத், செண்டிராயன்களின் உலகம்! இங்கு நாம் அனைவரிடம் நட்பார்ந்து, சமூகமாக்கல் செய்து இணக்கமாய் இருக்க வேண்டும் என ஆரம்பத்தில் கோருவார்கள்; நாமும் அப்படி இருந்தால் நம்மை அனைவரும் பாராட்டுவார்கள்; ஆனால் ஒருநாள் “உங்க வேலைத்திறன் போதாதுங்க” என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்; ஒரு அணியில் பிறரை விட உங்களை மேதாவி என்றும், அதிக திறமையானவர் என்றும் நீங்கள் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அணியில் அதிகம் நேசிக்கப்படாதவராய் இருந்தாலும் நீங்கள் உங்களைப் பற்றி உருவாக்கும் போட்டி பிம்பத்தினாலே நீண்ட காலம் நீடித்து பதவி உயர்வும் பெறுவீர்கள். பிக்பாஸும் இதே பண்பாட்டைத் தான் பிரதிபலிக்கிறது.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...