Skip to main content

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (1)



 90களின் தமிழ் சினிமா / 90galin Tamil Cinema (Tamil Edition) by [ஆர். அபிலாஷ் / R. Abilash]

(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)
1.   ஒரு புனைகதை எழுத்தாளராக இருந்துகொண்டு சினிமாவைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கிறது?

ஆர். அபிலாஷ்: நான் முழுநேர சினிமா விமர்சகன் அல்ல. நான் ஆர்வம் கொள்ளும் பல்வேறு துறைகளில் சினிமாவும் உண்டு. ஒரு எழுத்தாளனாய் நான் மாறுபட்ட கோணங்களை, புதிய மொழி ஒன்றை, எனக்கான உணர்வுநிலையை சினிமா விமர்சனத்துக்குள் கொண்டு வருவதாய் நம்புகிறேன். உதாரணமாய், தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் முற்பகுதி வரையிலான படங்களில் ஒருவித ஒடுக்கப்பட்ட ஆண்மை சித்தரிக்கப்பட்டதை, புரொமேன்ஸ் பேசப்பட்டதை, சொல்ல முடியாத காதலின் அவஸ்தையை நம் சினிமா காட்சிப்படுத்தியதைப் பற்றி என் சினிமா கட்டுரைகளில் விவாதித்திருக்கிறேன். அதாவது, என் சமூக, பண்பாட்டுக் கட்டுரைகளில், புனைவுகளில் பேச முடியாத சில விசயங்களை சினிமாவை மையம் கொண்டு என்னால் பேச முடிந்திருக்கிறது.

 
2. ஏதோவொரு கலைவடிவம் மக்களிடையே பிரசித்தி பெற்றதாக இருந்து வந்துள்ளது. இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு கலையாகச் சினிமா இருப்பது பற்றிய உங்கள் கருத்து?

ஆர். அபிலாஷ்: இது சினிமா ஊடகத்தின் காலம். நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் இயக்குநர் ராமை சந்தித்த போதுஇனிமேல் படைப்புச்செயல்கள் காட்சி ஊடகம் வழியாகவே நிகழும். எழுத்து பின்னுக்கு நகர்ந்து விடும்என்றார். ஓரளவுக்கு அவர் சொன்னதே இன்று நடந்து வருகிறது. என் கல்லூரியில் இளம் எழுத்தாளர்களை விட இளம் இயக்குநர்களை, இளம் புகைப்பட கலைஞர்களையே அதிகம் காண்கிறேன். மேலும் இன்றைய தலைமுறைக்கு காட்சிபூர்வமாய் சிந்திப்பது இயல்பாகவும் வருகிறது.
 இன்னொரு பக்கம், தமிழகம் என்றுமே சினிமாவை கொண்டாடிய மாநிலமே. இங்கு சினிமாவில் இருந்து அரசியல் ஆளுமைகள் மற்றும் தலைவர்கள் தோன்றுவது இன்றும் தொடரும் ஒரு பாணி. கமல், ரஜினி, விஜய், பாரதிராஜா, அமீர், ராம் என நிர்வாக அரசியல், தமிழ் தேசிய அரசியல் என பேசுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு சிறு சொல்லும் இங்கே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. சினிமாவில் வலுவான இடம்பெற்றிராத, இரண்டாம் நிலை நடிகையாய் சில காலம் தொடர்ந்த கஸ்தூரி அரசியல் பேசினால் கூட கோடிக்கணக்கானோர் காதுகொடுத்துக் கேட்டு முகநூலில் சர்ச்சிக்கிறார்கள்.
ஏன் இந்தளவு சினிமா மோகம் நம்மவர்களுக்கு என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இதன் ஒரு நல்விளைவு கடந்த பத்தாண்டுகளில் நம் சினிமா தொழில்நுட்ப ரீதியாய் பல முக்கிய திரை கலைஞர்களை, படைப்புகளை கொடுத்துள்ளது. மலையாளத்தில் ஒரு பி.ஸி ஸ்ரீ
ராமோ மணிரத்னமோ மிஷ்கினோ ராமோ இல்லை. அவர்களின் சந்தோஷ் சிவன் கூட அதிகமும் வெளிமாநிலங்களிலே வேலை செய்திருக்கிறார். நல்ல திரைமொழியை கொண்டிருந்த பத்மராஜனுக்கு கூட அங்கு வழித்தோன்றல்கள் இல்லை. நாடகத்தை வித்தியாசமான கதை அமைப்புடன் எடுப்பதே இன்றும் மலையாள சினிமா. அதில் உளவியல் நுணுக்கங்கள் உண்டு; வாழ்க்கைப் பார்வை உண்டு. ஆனால் சினிமா மொழி இல்லை. “மகேஷிண்டே பிரதிகாரம்ஆர்வமூட்டும் கதை ஆழம் கொண்ட படம் தான். ஆனால் அது சினிமா இல்லை. வசனங்களை விடுத்து கதை சொல்ல இன்றும் மலையாளிகளுக்குத் தெரியாது.
ஆக, தமிழரின் சினிமா வெறி சில நல்ல விளைவுகளைத் தந்திருக்கிறது.



Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...