Skip to main content

முன்பு நீங்கள் இப்படி விசாரிக்கவில்லை


 “உங்க படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்குமா?” அல்லது “கிடைப்பதில்லையா?” இக்கேள்வியை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறார்கள். நான் இருக்கும் இடம் ஒரு காரணம். இங்கு யார் தமிழில் படிக்கிறார்கள்? ஒருவிதத்தில் இப்படி ஓரிடத்தில் அந்நியமாய் வாழ்வது எனக்கு பிடித்திருக்கிறது. இங்கு இப்படி இருப்பதில் ஒரு அந்தரங்க உணர்வு உள்ளது. பரண் மீது சொகுசாக அமர்ந்து மீசையை நக்கும் பூனையைப் போல.

ஆனால் இக்கேள்விகள் நான் சென்னையில் இல்லை என்பதையும் நினைவுபடுத்தி விடுகின்றன. அங்கு ஒருவர் கூட இப்படிக் கேட்டதில்லை. அங்கு தமிழில் படிக்காத ஒருவருடன் கூட நான் உரையாட நேர்ந்ததில்லை என்பதை யோசிக்கவே வியப்பு தோன்றுகிறது.
நான் முன்பு பணி செய்த அலுவலகத்தில் “நீங்க எழுத்தாளரா?” என விசாரித்து யாராவது என் கணினி அருகே வந்து நிற்பார்கள்.
“எப்படித் தெரியும்? யார் சொன்னாங்க? எங்காவது படிச்சீங்களா?”
“நேத்து டிவியில சேனல் மாத்தும் போது உங்க முகம் பார்த்தேன். கொஞ்ச நேரம் கவனிச்சா “எழுத்தாளர்னு” போட்டிருந்தது.”
அதன் பிறகு “நீங்க என்ன எழுதியிருக்கீங்க” என்று கேட்கவா வேண்டாமா என நாணிக் கோணி விட்டு ஒரு அசட்டுப் புன்னகையை பதிலுக்கு தந்து விட்டு கிளம்பி விடுவார்.
ஒருவர் என்னை “நீங்க கவிஞரா?” என்று என்னிடம் வந்து விசாரித்தார். நான் “இல்லீங்க” என்றேன். ஆனாலும் எப்போது பார்த்தாலும் “வாங்க கவிஞரே” என்பார் வாஞ்சையாக. நானும் தலையாட்டி விட்டு ஏற்றுக் கொள்வேன்.
என்னைக் கண்டதுமே தூய தமிழில் பேசுபவர்கள், என்னிடம் கவிதை நோட்டு கொண்டு நீட்டுகிறவர்கள், குறுநாவல் எழுதி வந்து படித்து கருத்து கேட்பவர்கள் என பலரும் என்னை குறுக்கிட்டதுண்டு.
இங்கு “எழுத்தாளர்” என்ற சொல்லை கேட்டே நாளாகிறது. இங்கு என்னிடம் விசாரிப்பதெல்லாம் “உங்களை யாரும் மொழிபெயர்ப்பதில்லையா?” என்பதையே. (என்னை அப்படியே மொழிபெயர்த்தாலும் அவர்கள் படிக்கப் போவதில்லை என்பது வேறு விசயம்.) சென்னையின் அந்த விளியை, விசாரிப்புகளை, அன்பொழுகும் தமிழ்த்தன்மையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.
 திரும்ப திரும்ப காலையும் மாலையும் அதே இடத்தில் அதே ஆட்களை பார்த்து சங்கடமாய் புன்னகைக்க நேரும் அந்த இலக்கிய கூட்டங்கள், டீக்கடை அரட்டைகள், ரெண்டு நிமிடம் பேசுவதற்காக நான்கு மணி நேரம் சேலவழித்து கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சிகள், அலுவலகத்தில் என்னைத் தேடி வரும் இலக்கிய நண்பர்கள், மணிக்கணக்காய் போய் அமர்ந்து உரையாட மனுஷ்யபுத்திரனின் அலுவலக வீடு, அந்த புழுக்கம், எரித்துக் கொல்லும் வெயில், அரசியல் சுவரொட்டிகள், கூவி அலறும் ஸ்பீக்கர் பக்தி, கூழூத்தி சாலையை மறிக்கும் கோயில்கள், ஆயிரமாயிரம் நினைவுகள்.
ஒருநாள் திரும்ப ஓடி வந்து விடுவேன் என நினைக்கிறேன் என் இரண்டாம் வீட்டுக்கு.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...