Skip to main content

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (5)


 Image result for haiku basho
ஹைக்கூவில் எப்படி கருத்து சொல்வது கூடாதோ அப்படியே ஒப்பீடு, உருவகம் ஆகியவற்றுக்கும் இடமில்லை. எந்த தரப்பையும் எடுக்காமல், எதையும் வலியுறுத்தாமல், நியாயப்படுத்தாமல், விளக்காமல் தர்க்க மொழியில் இடமில்லாத ஒரு தூய காட்சியை அல்லது ஒரு படிமத்தை சித்தரித்து விட்டு இடத்தை காலி பண்ணுவதே ஒரு சிறந்த ஹைக்கூவின் பண்பு.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜம்ஸித்தின் ஹைக்கூ கவிதைகளுக்கு இப்போது வருவோம். அவர் எனக்கு அனுப்பித் தந்த ஹைக்கூக்களில் கச்சிதமானவையும் உண்டு; நவீன கவிதையின் குறைகள் உடையனவும் உண்டு, முதலில் அவரது சிறந்த ஹைக்கூக்களை பார்ப்போம்.

சிறந்தவை:

கோடை மதியம்
 குளிர்ச்சி தந்தது
 தூண்டில் ஊசி

*இக்கவிதை ஒரு விளக்க முடியாத அனுபவத்தை தருகிறது. நீருக்கடியில் மீனின் வாய் வந்து கவ்வுவதற்காக காத்துக் கிடக்கும் தூண்டிலா அல்லது கவிதைசொல்லி கையில் வைத்து உணர்கிற தூண்டிலா? நமது அகத்தின் அதர்க்கமான, பகுத்தறிவை மீறிச் செல்கிற பரிமாணத்தை சுட்டுகிறது என்பதைத் தாண்டி இதை நாம் விளக்க இயலாது. இதன் சர்ரியல் அனுபவத்தை ரசித்தேன்.

பாதி அப்பிள்
ஒரு சிலந்தி ஏறி
 இரவுக்குள் இறங்கும்

·       மிக காட்சிபூர்வமானது இக்கவிதை. பாதி கடித்த ஆப்பிள் பகலின் ஒரு துண்டு போல் தெரிகிறது. அங்கிருந்து சிலந்தி இருளுக்குள் இறங்குகிறது. ஆனால் சிலந்தி இரவில் தான் இருக்கிறது. இரவில் இருளுக்குள் தான் பயணிக்கிறது. ஆயினும் அது பகலில் இருந்து இரவுக்குள் காலடி எடுத்து வைக்கிற சித்திரம் வருகிறது இங்கு. பகலைப் போன்ற பாதி கடித்த ஆப்பிள் எனும் மறைமுகமான ஒப்பீடு இதில் வருவது ஒரு சிக்கல் தான் எனினும் அவ்வளவு உறுத்தலாய் அது இல்லை. முதல் கவிதையைப் போன்றே இதிலும் ஒரு முரண் வருவதை நீங்கள் கவனிக்கலாம். இது ஹைக்கூவில் முக்கியமானது.
வறள் சேற்று நிலம்
வரிசையாக அடிமாடுகளின்
 கால் தடம்
·       தமிழக வறட்சியை நினைவுறுத்தும் சித்திரம். அடிமாடுகள் எங்கே செல்கின்றன? அதுவும் வரிசையாக? கசாப்புக்காக கேரளா நோக்கியா? ஆனால் சத்தமான சமூக விமர்சனம் இல்லை என்பது பாராட்டத்தக்கது. இது ஒரு கச்சிதமான ஹைக்கூ அல்ல. ஆனாலும் இதன் மௌனம் என்னை கவர்ந்தது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...