Skip to main content

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (3)



பாஷோவின் ஜென்

 Image result for basho
ஹைக்கூ நம் சிந்தனையை ரத்து செய்ய கோருவது. அது நம்மை சிந்தனையற்ற, நீர் வளையங்கள் அற்ற ஒரு பரப்பிற்கு நகர்த்தும் ஒரு இலக்கிய வடிவம். உதாரணத்திற்கு, பாஷோவின் இந்த மிகப்பிரபலமான கவிதையை பாருங்கள். இதற்கு ஏகப்பட்ட மொழியாக்கங்கள் உள்ளன. நான் டியோன் ஒடொனோல் என்பவரின் மொழியாக்கத்தை எடுத்து அதை தமிழாக்கி தருகிறேன்.


ஒரு பழைய அமைதியான குளம்
தொன்மையான நிச்சலத்தின் கண்ணாடி அது
ஒரு தவளை-குதிக்கும்-தொபுக்கடீர்

அமைதியான குளமொன்றில் தவளை சட்டென குதிக்கிறது; நீர் தெறிக்கிறது; ஒலி எழுகிறது. மீண்டும் ஒலி அடங்கி, குளம் நிலைபெற்று அமைதி திரும்புகிறது. இது தான் காட்சி. இது தனக்கு என்ன சொல்கிறது என்பது பாஷோவுக்கு முக்கியமில்லை. தவளை குதிக்கவில்லை; தவளை எழுப்பும் அந்த ஒலியே தவளையாக அவருக்குத் தெரிகிறது. இது ஏன் அப்படி எனக் கேட்டால் விளக்கமில்லை. ஒரு குழந்தைத்தனமான மனநிலை இது. நவீன கவிதை சிலநேரம் இதே மனநிலையை ஒரு முதிர்ச்சியுடன் முன்வைக்கும். ஆனால் ஹைக்கூ அதே குழந்தைமையுடன் அதை வெளிப்படுத்தும். நவீன வாழ்க்கை தரும் புரிந்துணர்வு, சமூக பொறுப்புணர்வு, விழிப்புணர்வு, அறைகூவல், கேள்வி கேட்கும் விருப்பம், விமர்சிக்கும் நோக்கு, அவதானிக்கும் மனப்பாங்கு ஆகியவற்றுக்கு ஹைக்கூவில் இடமில்லை. 

மற்றொரு ஹைக்கூவில் பாஷோ இருக்கும் குடிசையின் கூரை எரிந்து போகிறது. அட, இப்போது பௌர்ணமி நன்றாய் தெரிகிறது என பாஷோ களிப்படைகிறார். இதை நேர்மறையான அணுகுமுறை என கருத முடியாது. ஏனெனில் நிலவையாவது காண்கிறேனே என மகிழ்வது நேர்மறை எனில் அதன் பின்னால் கூரை எரிந்து விட்டதே எனும் கசப்பை காணாமல் தவிர்க்கும் புத்திசாலித்தனம் மறைந்திருக்கிறது. பாஷோவிடம் இப்படி எந்த அணுகுமுறையும் இல்லை. பேதையாய் வாழ்வின் சின்ன சின்ன அதிசயங்களை கண்டு வியப்பது, எதிலும் தர்க்க விளக்கங்களை நாடாதிருப்பது அவரது உளவியல். இது ஒரு ஜென் மனநிலையுமே. இதிலென்ன ஜென் உள்ளது?

தவளை நீருக்குள் குதிக்கிறது என சொன்னால் யாரும் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஒருவேளை தவளை குதிக்கும் போது, அதாவது அது தாவி எழும்பி காற்றில் அரை நொடி மிதந்து செல்கையில், நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அது நீரை நெருங்கி அமிழ்ந்து நீர்ப்பரப்புக்குள் மறைவதை பார்க்கவில்லை. அதற்குள் மிக வேகமாய் தவளை மறைந்து விட்டது. ஆனால் தவளை குதித்ததை அது குதிப்பதை முழுக்க பார்க்காமலே எப்படி கண்டீர்கள்? அந்த தொபுக்கடீர் எனும் ஓசை தவளை குதித்து மறைந்த காட்சியின் இடத்தில் அந்த ஒலி வந்து அமர்கிறது. தவளைக்கு பதில் ஒலி குதிக்கிறது; நீர்ப்பரப்பை கிழித்து தவளை எழுப்பும் ஒலி தோன்றி மறைகிறது. இப்படியும் பார்க்கலாம் (சாரி கேட்கலாம்) தானே? இந்த இடத்தில் பார்ப்பதும் கேட்பதும் ஒன்றாகிறது.
கூரை எரிந்து விட்டது எனும் போது சட்டென புலனாகும் ஆகாயத்தை நாம் பார்க்க தவறுகிறோமே எனும் இரண்டாவது ஹைக்கூ முதல் சாத்தியத்தை மறுக்கவில்லை. கூரை எரிந்ததும் உண்மையே; அதே போல வானம் அப்போது வெகு சிலாக்கியமானது என்பதும் உண்மையே. நாம் ஒன்றை மறுத்து இன்னொன்றை விடாப்பிடியாய் கவனிப்பது அபத்தம் என்கிறது இக்கவிதை. இப்படி சொல்கிறது என்று கூட சொல்லக் கூடாது. இப்படியும் பார்க்கும் ஒரு மனநிலையை நமக்கு சித்தரிக்கிறது.




Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...