Skip to main content

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (2)


 Image result for நகுலன்
Image result for மனுஷ்ய புத்திரன்

ஹைக்கூவின் தத்துவம்
ஹைக்கூ இவ்வாறு ஜப்பானுக்கும் ஜென் பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் மட்டுமே உரித்தானதாய் இருப்பது அதை ஐரோப்பிய கவிதைப் பரப்பில் இருந்து துண்டு பட வைத்தது. நமது தமிழ் நவீன கவிதை ஐரோப்பிய நவீன கவிதையின் ஒன்று விட்ட தம்பியாக இருப்பதனால் அதற்கு ஜென் பௌத்த சாயலோ ஹைக்கூவின் தொடர்போ பெரிதாய் இல்லை. யுவன், மனுஷ்யபுத்திரன், தேவதச்சன் ஆகியோர் ஜென் தாக்கம் கொண்ட நவீன கவிதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஹைக்கூ கோரும் மனநிலையில் இருந்து இக்கவிதைகளின் மனநிலை மாறுபட்டது. அது என்ன வித்தியாசம்?

ஹைக்கூவுக்கும் நவீன கவிதைக்குமான வித்தியாசம்

நவீன கவிதை ஒரு தனித்த பார்வையை, சிந்தனையை, ஒருவித திறப்பை நோக்கி வாசகனை செலுத்துவது. உதாரணமாய், நகுலனின் இந்த பிரசித்தமான குறுங்கவிதையை பாருங்கள்:
ராமசந்திரா என்று கேட்டேன்
ராமசந்திரன் என்றார்
எந்த ராமசந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
ஒரு பெயரை ஒருவரது பெயராக சுலபத்தில் எடுத்துக் கொள்வதன் அபத்தத்தை பகடி செய்கிறது இக்கவிதை. இது முழுக்க சிந்தனையின் தளத்தில் நிகழ்கிறது. ஆனால் அன்றாட சிந்தனையை கடந்த ஒரு தனித்த பார்வையும் இது அளிக்கிறது.
அடுத்து மனுஷ்யபுத்திரனின் சிறு கவிதை ஒன்று.

சிவப்புப் பாவாடை

சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி

இதுவும் மொழியின் அபத்தம் பற்றின கவிதையே. சிவப்பு எனும் நிறத்தைக் காட்ட அவள் ஏன் குறிப்பாய் தொண்டையை அறுப்பதாய் நடிக்க வேண்டும்? ஆனால் அப்படி நிகழ்கிறது அங்கு பெருகும் பாவனை ரத்தம் அன்றாட வாழ்வில் வன்முறை எவ்வளவு சாதாரணமான யாரையும் உறுத்தாத ஒன்றாய் வெளிப்பட்டு மறைகிறது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாய், அது எப்படி நம் மொழியில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, அதை இயல்பாய் நாம் எடுத்துக் கொள்வதில் எவ்வளவு அபத்தம் உள்ளது என இக்கவிதை பேசுகிறது. நகுலனின் கவிதை போல இக்கவிதை சிந்தனை வடிவிலானது அல்ல; காட்சிபூர்வமானது; ஆனாலும் இதுவும் நம் சிந்தனையை தூண்டுகிறது. இது நவீன கவிதையின் ஒரு மாறாத சுபாவம்: ஜராசந்தனைப் போல அதை எப்படித் தான் பிய்த்துப் போட்டாலும் அது நம் சிந்தனையை தூண்டியபடி இருக்கும்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...