Skip to main content

ராஜன் குருக்கள்

Image result for rajan gurukkal



ராஜன் குருக்கள் ஒரு முக்கியமான வரலாற்றாசிரியர்; ஆய்வாளர்; சமூக விஞ்ஞானி.
ராஜன் குருக்கள் சன்னமாய் புன்னகைத்தபடி மிக மென்மையாய், அதிராமல் பேசும் பேச்சாளர். புதியவர்களுடன் சட்டென ஸ்நேகம் பாராட்டும் ஆசிரியரின் குணநலன் கொண்டவர். எங்கள் (கிறைஸ்ட்) பல்கலையில் பேராசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடல் மூன்று-நாள் நிகழ்ச்சி கடந்த வாரம் நிகழ்ந்தது. அதன் இறுதி நாள் சிறப்புரை வழங்கவே ராஜன் குருக்கள் வருகை புரிந்தார்.

ராஜன் குருக்களை போல் அவ்வளவு சுவாரஸ்யமாய், அறிவார்த்தமாய் பேசுகிற மற்றொருவரை நான் கல்விப்புலத்தில் இதுவரைக் கண்டதில்லை. காலை முதல் மாலை அவர் கிளம்பும் வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். பங்கேற்பாளர்கள் சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். இப்படி பேசும் இன்னொரு நபர் இருக்கிறார் என்றால் அது நமது எஸ். ராமகிருஷ்ணன் தான்.
இரண்டு விசயங்கள் அவரிடம் ஈர்ப்பை ஏற்படுத்தின. ஒன்று, அசராது அவர் அளிக்கும் புதுப் புது தகவல்கள். ஒவ்வொரு விசயத்தைப் பற்றி பேசுகையிலும் அது சம்மந்தமாய் அவர் தன் மந்திரத் தொப்பியில் இருந்து எடுத்துக் காட்டும் ஒரு கதை, வரலாற்று நிகழ்வு ஒன்று பற்றின குறிப்பு, மேற்கோள்கள்.
நமது பெரும்பாலான எழுபதுகளின் அறிவுஜீவிகளைப் போல ராஜன் குருக்களும் ஒரு மார்க்ஸியவாதி. ஆனால் கட்சி அறிவுஜீவி அல்ல. எந்த கருத்தியல் ஹேங் ஓவரும் இல்லாத, சமூக வரலாற்று பிரச்சனைகளுக்கு கலந்தாய்வின் பொருட்டு தன் மனதுக்குள் உறைநிலையில் இருக்கும் கார்ல் மார்க்ஸை அவ்வப்போது தோளைத் தட்டி எழுப்பி உரையாடுபவர். மார்க்ஸியம் ஒரு நிறுவனமாய், கட்சியாய் மாறும் போதே அது உடனே படிநிலைகளைப் பெற்று, சமூகத்தின் பல ஆதிக்க சக்திகளின் சமரசக் களமாய் மாறி விடும்; கட்சியாக மாறின பின் கம்யூனிஸ்ட் கட்சியே கம்யூனிசத்துக்கு எதிராக செயல்படத் துவங்கும் என அன்று துணிச்சலாய் சாடினார். கேரளாவின் நில சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப் பட்ட போது நடந்த பேரங்களை, அநீதியை, அப்போது பாட்டாளி மக்கள் கைவிடப் பட்டதை குறிப்பிட்டார். யாருக்கும் எதற்கும் வக்காலத்து வாங்கும் அவசியம் அற்றவனே ஒரு சுதந்திர அறிவுஜீவி. ராஜன் குருக்கள் அப்படியானவர். இது என்னை மிகவும் கவர்ந்தது.
வரலாறு எவ்வளவு ஆர்வமூட்டும் துறை என அன்று நான் உணர்ந்தேன். வரலாற்றில் இருந்து நிகழ்வுகளை கோர்த்தெடுக்க தெரிந்த ஒரு பேச்சாளர் அதைக் கொண்டு மக்களை திகைக்க வைக்க முடியும். ராஜன் குருக்கள் கோட்பாடுகளிலும் தேர்ந்தவர். ஆகையால், அவர் அன்று நவீனத்துவத்தில் இருந்து பின்நவீனத்துவம் எப்படி உருப்பெற்று வந்தது எனப் பேசும் போது அதை கோட்பாட்டு விவாதமாக அன்றி ஒரு வரலாற்றுச் சித்திரமாய் மாற்றிக் காட்டினார்.
உலகம் தர்க்க ஒழுங்குக்குள் அடங்குவது என நவீனத்துவவாதிகள் நம்பினர்; ஆனால் பின்நவீனத்துவர்கள் அதை ஏற்பதில்லை. இக்கருத்தை அவர் இயல்பியலில் ஏற்பட்ட பல மாற்றங்களைச் சுட்டிக் காட்டி விளக்கினார். ஒரு சிக்கலான தத்துவக் கருத்தை இப்படி பௌதிகமான வடிவில் காண்பதும் புரிவதும் எளிதாக இருந்தது.
ராஜன் குருக்கள் அன்று துறையிடை (interdisciplinary) படிப்பு பற்றி பேச உத்தேசித்திருந்தார். ஒரு துறையில் மட்டும் விற்பன்னனாய் ஒருவர் இருப்பது ஒரு நவீனத்துவ வழமை. இன்று பின்நவீனத்துவம் வந்த பின் நாம் பல துறைகளில் ஆர்வம் கொண்டு அவற்றின் அரவணைப்பில் புது சிந்தனைகளை, ஆய்வுமுடிவுகளை, பார்வைகளை வந்தடைவதை இன்று முக்கியமாய் நினைக்கிறோம். இப்படி துறையிடை ஆய்வுகளை அவர் ஒரு பின்நவீனத்துவ பாய்ச்சலாய் காண்கிறார். இதைப் பற்றி பேசும் முன் நவீனத்துவ-பின்நவீனத்துவ வேறுபாடுகளை விளக்கவே வரலாற்று ரீதியான பல சம்பவங்களை அவர் சித்தரித்தார். ஆனால் பேச்சார்வத்தில் அவர் நேரம் கடந்ததையே உணரவில்லை. தன்னுரையின் சிறு பகுதியையே அவர் அன்று பேசினார் என நினைக்கிறேன். இப்படி ஒருவர் தன்னை மறந்து லயித்து பேசுவதே ஒரு அற்புத அனுபவம். ஒரு நல்ல உரை திட்டமிட்டபடி கராறாய் இருக்கலாம். அது ஒரு வகை. இது இன்னொரு பாணி. அரேபிய இரவுகள் மாதிரியான உரை. இதுவும் வெகு சுவாரஸ்யமே.
அன்றைய நாள் முடியும் போது, இப்படி ஒரு மனிதர் என் ஆசிரியராக இருக்கவில்லையே அல்லது இவர் என்னுடன் பணி புரியவில்லையே எனும் ஏக்கம் என்னைத் தழுவிக் கொண்டது. “தங்க மீன்கள்” படத்தில் நாயகன் வெள்ளிப் பாத்திரங்களை பாலிஷ் செய்யும் பட்டறையில் வேலை செய்வான். அங்கு அவனுக்கு வருமானம் சொற்பமே. என்றாலும் வேலைநாள் முடியும் போது உடம்பெல்லாம் வெள்ளித் துகள்கள் ஒட்டிக் கொள்ள அவன் மினுமினுத்தபடி தெரிவான். ஒரு வெள்ளி மனிதனாய் மாறுவான். அப்போது தன்னை முழுக்க வேறொரு மகத்தான மனிதனாய் அவன் உணர்வான். ராஜன் குருக்களை (அல்லது ஜெ.மோ, எஸ்.ரா) மாதிரியான ஆளுமைகளுடன் ஒரு நாளை செலவிடும் போது நாமும் அப்படியே உணர்கிறோம்.
என்ன ஒரு அலாதியான நாள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...