Skip to main content

உன்னைப் பார்ப்பது புதிதாக இல்லை


 Related image
உன்னைப் பார்ப்பது
புதிதாக இல்லை
நீ நீண்ட காலமாய்
இருக்கிறாய்
என்னுடன்
ஆனால்
உன்னை
 இதோ இப்போது தான்
சந்தித்தேன்
விரல்களை கோர்த்துக் கொண்டு
அடர்ந்த நிழல்களின் மீதாய்
நடந்தோம்
உதிர்ந்த மஞ்சள் பூக்கள்
நம் காலடியில்
கசங்கி விழித்து பார்த்து உயிரிழப்பதைக் கண்டோம்
எனக்கு என் குரலையே கேட்பது போலிருக்கிறது
என்றேன்

நமது தேர்வுகள்
நமது ரசனைகள்
முன்முடிவுகள்
ரகசிய கோபங்கள்
விசித்திர துக்கங்கள்
பிரதியெடுத்தவை போன்று இருந்தன
எனது கண்ணாடி பிம்பம் நீ என்று நானும்
எதேச்சையாய் நான் உன் சாயலில் இருக்கிறேன் என நீயும்
கோரிக் கொண்டோம்
அடுத்து நான் எப்படி சற்றே மாறுபட்டவன் என்று
உனக்கு புரிய வைத்தேன்
நீயும் அதையே
எனக்கு வலியுறுத்தினாய்
மீண்டும் நாம் எப்படி
இந்தளவு பரஸ்பரம் மாறுபாடின்றி இருக்கிறோம்
என வியந்து கொண்டு
முரணை மறந்து சிரித்து வைத்தோம்
அப்போது தான் நான் சொன்னேன்
“அன்பே
உன்னைப் பார்ப்பது
புதிதாக இல்லை
நீ நீண்ட காலமாய்
இருக்கிறாய் என்னுடன்.
மேலும்…”
நீ குறுக்கிட்டு
“ஏனென்றால் நீ தான் கவனிக்காமல் இருந்தாய்
ஆனால்
நான்
இத்தனை நாளும்
உனக்கு வெகு அருகாமையில்
மூச்சு படும் தொலைவில் தான் இருந்தேன்”
உடனே நீ அந்த
பஞ்சு மிட்டாயை என்னிடம் நீட்டினாய்
இருவரின் வாயும்
கோமாளியுடையதைப் போல் மாறி இருப்பதை சொல்லி சிரித்தோம்


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...