Skip to main content

எப்படி வாசிப்பது? (2)



5)   வாசிப்பு ஒரு பழக்கம். உடற்பயிற்சி போல. தினமும் குறிப்பிட்ட மணிநேரங்கள் படித்தால் சிரமம் தெரியாமல் படிக்க முடியும். ஆனால் அப்பழக்கம் விட்டுப் போனால் திரும்ப உட்கார்ந்து படிக்க முடியாது. கவனம் சிதறும். ஒரு நாளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசிப்புக்கென ஒதுக்குங்கள். அப்போது மட்டும் படியுங்கள். அப்போது படிப்பதை மட்டும் செய்யுங்கள்.

6)   வாசிப்புக்கு தனிமை அவசியம். அதாவது தனித்திருப்பதல்ல. (ரெண்டும் வேறுவேறு) தொடர்ந்து யாரிடமாவது உரையாட வேண்டும் என மனம் தவித்தால் வாசிப்பு தடைபட்டுப் போகும். பேஸ்புக்கில் தீவிரமாய் இருப்பவர்கள் தம்மால் புத்தகம் வாசிக்க இயலவில்லை என வருந்துகிறார்கள். இதற்காகவே பேஸ்புக்கை விட்டு வனவாசம் செல்கிறார்கள். திரும்ப வந்து தாம் வனவாசத்தின் போது இவ்வளவு நூல்களைப் படித்தோம் என கூறுகிறார்கள். நான் நீண்ட காலமாய் பேஸ்புக்கில் இருக்கிறேன். இதுவரை அது எனக்கு தொந்தரவாக இருந்ததில்லை. ஏனெனில் உறவுகளை உருவாக்கி தொடர, யாரிடமாவது அரட்டை அடிக்க நான் அதை பயன்படுத்துவதில்லை. பேஸ்புக்கை நான் ஒரு செய்தித்தாளை போல் பயன்படுத்துகிறேன். சமூக வலைதளமாக அல்ல. என்னால் இப்போதும் மணிக்கணக்காய் தனியாய் இருக்க முடியும். (என்னைச் சுற்றி மனிதர்களும் வேண்டும்.) இத்தனிமையை நான் ரசிக்கிறேன். இதை மேலும் ரசிக்க நான் புத்தக வாசிப்பை பயன்படுத்துகிறேன். பேசிக் கொண்டே இருப்பவர் வாசிக்க முடியாது. மனம் முதலில் ஓய வேண்டும். அதற்கு வாய் ஓய வேண்டும்.
7)    வாசிக்க வாசிக்க நமக்கென ஒரு ரசனை, தேர்வு, ஆர்வம், ஒருவித பட்டியல் உருவாகும். நமக்கென பிரியப்பட்ட எழுத்தாளர்கள் தோன்றுவார்கள். இப்போது நீங்கள் உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். புதுப்பிக்க வேண்டும். (அல்லாவிட்டால் வாசிப்பு தட்டையாகி விடும்.) உங்களுக்கு உவப்பிராது என நம்பும் ஒரு துறையில் இருந்து ஒரு நூலை வாங்கி படியுங்கள். நீங்கள் ஒரு இடதுசாரியா? அமெரிக்க ஏகாதிபத்யத்தை நியாயப்படுத்தும் ஒரு நூலை புரட்டிப் பாருங்கள். தத்துவம், இலக்கியம், கலைக்கோட்பாடுகள் மட்டும் படிக்கிறவரா? தோட்டக்கலை, சோதிடம், உடற்பயிற்சி, புவியியல், அறிவியல் நூல்களை தேடி படியுங்கள். ஆரம்பத்தில் கடுப்படித்தாலும் இந்நூல்களில் ஒன்று உங்களுக்கு சட்டென அபாரமான ஒரு மனவிரிவைத் தரும்.
8)   வாசிப்பு நம் அறிவு, நம்பிக்கைகள், நுண்ணுர்வு ஆகியவை ஏற்படுத்தின சட்டகங்களை நொறுக்குவதற்கான ஒரு காரியம். இவை உடையும் போது மனம் விரியும். அப்போது பரவசம் கிடைக்கும். இதுவே வாசிப்பின் இன்பம். ஒரு உதாரணம் தருகிறேன். இரண்டு வகையான பெண்ணிய எழுத்து உண்டு. ஒன்றில், பெண்கள் முழுக்க நல்லவர்களாகவும் ஆண்கள் ஒடுக்குமுறையில் ஈடுபடும் கொடூரர்களாகவும் இருப்பார்கள். அல்லது இப்பெண்களுக்கு உதவும் நல்லவர்களாகவும் சில சமயம் இருப்பார்கள். இந்த இருமை கொண்ட பெண் எழுத்து அம்பையுடையது. இதைப் படிக்கையில் ஒரு ஆரம்பநிலை பெண்ணியவாதி புளகாங்கிதம் அடையலாம். ஆனால் நம் கருத்தை இன்னொருவர் ஆமோதிக்கிறார் என்பதில் உள்ள ஒரு குழு அங்கீகார குதூகலிப்பு மட்டுமே இது. இன்னொரு வகையான பெண்ணிய எழுத்தில் பெண்ணுக்குள் இருக்கும் முரண்களும் பேசப்படும். சில்வியா பிளாத்தின் “தி பெல் ஜார்” (The Bell Jar) நாவலை சொல்லலாம். தன் உடல் மீது ஆணாதிக்க சமூகமும் குடும்பமும் செலுத்தும் அடக்குமுறையை இந்நாவலின் நாயகி எஸ்தர் கிரீன்வுட் சாடுகிறாள்; தன் தாய் அத்தகைய ஒரு அடக்குமுறையை தன் மீது ஏவுவதை அவள் எதிர்க்கிறாள். ஆனால் அதேவேளை உடலை சுதந்திரமாய் வெளிப்படுத்தி பார்ட்டி கொண்டாட்டம் என மகிழ்ச்சியாய் இருக்கும் மேற்தட்டு பெண்கள் மீது கடும் குரோதத்தையும் அவள் வெளிப்படுத்துகிறாள். அதாவது, எஸ்தர் தன் தாயிடம் இருந்து தப்பித்துச் செல்லும் அதே வேளை உள்ளுக்குள் தன் தாயாகவும் இருக்கிறாள். மனித மனம் எப்படி முரண்பாடுகளின் முடிச்சாக இருக்கிறது என்பதை சில்வியா பிளாத் தன் கவிதைகளில் தொடர்ந்து பேசுவதை இந்நாவலில் இன்னும் உக்கிரமாய் செய்கிறார். ஒரு பெண்ணியவாதிக்கு இந்நாவல் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளும் குழப்பங்களும் முக்கியமானவை. அம்பை இதை செய்ய மாட்டார். அம்பை உங்கள் பெண்ணிய கழுத்துக்கு மசாஜ் செய்வார். சில்வியா பிளாத் உங்கள் பெண்ணிய கழுத்தைப் பற்றி சடேரென உங்களை வாகனங்கள் விரையும் சாலை நடுவே தள்ளி விடுவார்.
நீங்கள் வாசிப்பது ஒரு நல்ல நூலா இல்லையா என அறிய ஒரே வழி தான்: அது உங்கள் கழுத்தை மசாஜ் செய்தால் நல்ல நூல் இல்லை; கழுத்தை உடைத்தால் மிக நல்ல நூல்.

அவ்வளவு தான்! இனி வாசியுங்கள்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...