Skip to main content

தில்லியின் ஒரு கலைந்த நினைவு - ஆகா ஷாஹித் அலி

Image result for agha shahid ali

1948இல் நான்
 பிறந்திருக்கவில்லை; பெயரற்ற ஒரு சாலையில்
அப்பேருந்து திரும்புகிறது

அங்கே தன் சைக்கிளில்
என் அப்பா
என்னை விட இளமையாய்

ஓக்லாவில் இறங்கிக் கொள்ளும் நான்
ஜமுனா நதியோரமாய் ஓய்வாய் நடக்கும்
என் பெற்றோர்களை கடந்து போகிறேன்


என் அம்மா ஒரு புது மணப்பெண்
சித்திர வேலைப்பாடுகள் புடைத்த அவளது சேலை
வெள்ளித் துகள்கள் வகிடெடுத்த அவளது கூந்தல்

அவள் என்னை கவனிக்கவில்லை
அவள் கொலுசொலிகள்
லாந்தர் விளக்குகளால் ஒளியேற்றப்படும் டீக்கடைகளின்
பீங்கான் ஒலிகள் போல தொலைதூரமாய் ஒலிக்கும்
மேலும், நட்சத்திரங்கள் தம் கண்ணாடி நாவுகளால்
ஒலியெழுப்பியபடி வெளிவருகின்றன.

எப்போதும் குடும்ப ஆல்பத்தில்
மங்கிப் போய் தெரியும்,
ஆனால் இப்போது, மச்சில் நான் உடைந்து போய் கண்டெடுத்த, அகல்விளக்கால் ஒளியேற்றப்பட்ட
அவ்வீட்டுக்குள் அவர்கள் போகிறார்கள்

நான் உங்கள் மகன்
என அவர்களிடம் எனக்கு சொல்ல வேண்டும்
வயதாகிய அவர்களை விட அதிக வயதாகிய மகன்
நான் தொடர்ந்து கதவை தட்டுகிறேன்

ஆனால் அவர்களுக்கோ இவ்விரவு
அமைதியானது
இது எனது இருப்பின் இரவு
அவர்கள் கேட்க மாட்டார்கள்,

அவர்களால் முடியாது நான் கதவைத் தட்டும் ஒலியில்
நட்சத்திர நாவுகள் மூழ்கி மறைவதை
அவர்களால் கேட்க இயலாது
(தமிழில் ஆர். அபிலாஷ்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...