Skip to main content

அஞ்சலி அஞ்சலி

 Image result for obituary cartoon
ஞாநியின் மறைவை ஒட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் குறிப்புகள் நம் பேஸ்புக் டைம்லைனில் தோன்றி கண்ணீர் சிந்தின, மெல்ல அழுதன, கையைப் பற்றி அழுத்தின. நான் ஒரு நண்பரிடம் ஞாநி ஏற்படுத்தியுள்ள சமூகத் தாக்கத்தை, அபாரமான நட்பு வலையை, அவர் சம்பாதித்த நற்பெயரைப் பற்றி வியந்து பேசிக் கொண்டிருந்தேன். அந்நண்பர் சில நொடிகள் அமைதியாகி விட்டு சட்டெனக் கேட்டார்: “இவ்வளவு நாளும் இந்த அஞ்சலிக் குறிப்பாளர்கள் எங்கிருந்தார்கள்? அவர் உயிருடன் இருந்த போது அவரைப் பற்றி மிகக் குறைவான பாராட்டுரைகளே எழுதப்பட்டன. அதிகமும் அவரை விமர்சித்தும் கண்டித்தும் எதிர்த்துமே எழுதினோம். அவர் இல்லாமல் ஆன பின் எவ்வளவு ஆயிரமாயிரம் சொற்களை மாலை மாலையாய் அவர் பிம்பத்தின் மேல் சூட்டுகிறோம். ஏன் இந்த பாசாங்கு? ஏன் மரணத்தில் மட்டுமே ஒரு மனிதன் மதிப்பு பெறுகிறானா?”
 எனக்கு சட்டென விக்கித்து விட்டது. நானும் இப்பட்டியலில் சேர்வேன். ஒரு மனிதர் மறைந்த பின்னர் எல்லா கசப்புகளையும் அல்லது தயக்கங்களையும் கடந்து அவரை பாராட்டி அன்பைப் பொழிவது எளிதாகிறது. தமிழில் வாழ்ந்து மறைந்த அத்தனை ஆளுமைகளுக்கும் இது பொருந்தும். ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றி சொற்களை உருவாக்க நம் விரல்கள் கீபோர்டில் நர்த்தனமிட தொடங்குகின்றன. இது ஏன்?

நண்பர் போனைத் துண்டித்த பின்னரும் வெகுநேரம் இதைப் பற்றியே சிந்தித்த படி இருந்தேன். இதற்கு இரு காரணங்கள் தோன்றின. அஞ்சலிக் குறிப்பெழுதும் நம் மனநிலையை நான் இரு விதங்களில் புரிந்து கொள்கிறேன்.
ஒருவர் இருக்கும் போதை விட இறந்த பின்னரே அவரைப் பற்றி பேசுவதற்கான தேவை நமக்கு அதிகமாகிறது. இதில் பாசாங்கு ஏதும் இல்லை. அஞ்சலிக் குறிப்புகள் நமது அன்றாட அமைதிக்கு அவசியமானவை. எப்படி என சொல்கிறேன்.
1)   மனிதர்கள் எப்படி நம் வாழ்வில் இடம் பெறுகிறார்கள்? புனைவின் வழி. ஒவ்வொரு மனிதனும் பொதுவாழ்விலோ அந்தரங்க உலகிலோ தனது உரையாடல்கள் வழி தன்னை ஒரு பாத்திரமாக உருவாக்கிக் கொள்கிறான். அவனது அடிப்படையான குணாதசியம், அவனது உடன்மொழி, கையசைவு, குரல், நம்பிக்கைகள், உணர்வுநிலை என ஒவ்வொன்றாய் நம் நினைவடுக்குகளில் சேர்ந்த பின் அவன் நம் வாழ்வில் நீங்கா இடம் பிடிக்கிறான். அப்போது அவன் தன்னைப் பற்றி ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பான் (இதை கோட்பாடுகளில் கதையாடல் என்கிறார்கள்).
 அதாவது நமது அன்றாட வாழ்வு பல் வேறு சினிமாக்களின் தொகுப்பே. டிவியில் பார்க்கும் மனிதர்கள், பண்பலை வானொலியில் நாம் கேட்பவர்கள், சாலையில் எதிர்வருபவர்கள், அலுவலகத்து நண்பர்கள், உயரதிகாரி ஆகிய ஒவ்வொன்றும் ஒருவித சினிமா. நம் குடும்பம் நாமும் பங்கு பெறும் நாம் மட்டுமே பார்க்க முடிகிற ஒரு அந்தரங்க சினிமா. நம் மனம் இப்படித் தான் மனிதர்களையும் அவர்கள் தொடர்பான அன்றாட நிகழ்வுகளையும் புரிந்து கொள்கிறது. ஞாநியைப் போன்று ஒருவர் இறக்கும் போது என்னவாகிறது? ஒரு படத்தில் சட்டென ஒரு காட்சியில் ஒரு பாத்திரம் மட்டும் மறைந்து போனால் என்னவாகும்? அவருடன் பேசும் மற்ற பாத்திரங்கள் காட்சியில் தம் பாட்டுக்கு இயங்குகிறார்கள். ஆனால் இவரை மட்டும் காணவில்லை. எவ்வளவு அபத்தம்! இதை எப்படி எதிர்கொள்வது?
நான் சிறுவனாய் இருக்கும் போது வி.சி.ஆர் எனப்படும் வீடியோ காசெட்டை போட்டு படம் பார்க்கும் கருவி இருந்தது. ஏதாவது ஒரு விடுமுறையின் போது அதை வாடகைக்கு எடுத்து நாங்கள் படம் பார்போம். ஒருமுறை “கேப்டன் பிரபாகரன்” பார்த்துக் கொண்டிருந்தோம். நான் அப்போது தீவிர கேப்டன் விசிறி. என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த அண்டை வீட்டு பையன்களும் தாம். படம் பாதியில் இருக்கும் போது மின்சாரம் போய் விட்டது. இரண்டு நாட்கள் மின்சாரம் வரவில்லை. நாங்களும் வாடகைக் காலம் முடிந்ததால் காசெட்டையும் வி.சி.ஆரையும் திரும்ப கொடுத்து விட்டோம். படத்தின் மிச்சக் கதை என்ன? அடுத்து என்ன ஆகியிருக்கும் எனும் கேள்வி எங்களை அலைகழித்தது. பரபரப்பு தாங்காமல் நாங்கள் பையன்கள் சேர்ந்து மிச்ச படத்தின் கதையை ஊகித்து ஒரு விளையாட்டாக மாற்றினோம். ஆளாளுக்கு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மிச்ச கதையை நாங்களே பேசி நடித்து விளையாடினோம். உண்மையில் அதை படத்தை விட நல்ல சுவாரஸ்யமான அனுபவமாய் இருந்தது. மின்சாரம் இருந்திருந்தால் நிச்சயம் இப்படி விளையாடியிருக்க மாட்டோம்.

ஒவ்வொரு ஆளுமை நம் புலன்களில் வெளியில் இருந்து மறையும் போது நாமும் இப்படியே கற்பனை செய்து விளையாடுகிறோம். அந்த விளையாட்டு தான் அஞ்சலிக் குறிப்புகள் எழுதுவது. இதன் வழி இல்லாமல் போன ஞாநியை மீட்டுக் கொணர்கிறோம். அவரது குரலை அவருக்கு மீள அளிக்கிறோம். அவரை நம் கண்முன் நிகழ்த்திப் பார்க்கிறோம். எழுத்தின் அபாரமான ஆற்றல் அது நிறுத்தாமல் கனவுகளை உற்பத்தி செய்யக் கூடியது என்பது. லூப்பில் ஒரு காட்சியை பார்ப்பது போன்றது இது.
 எழுத்தின் பதிவாகும் நினைவுகள், கனவுகள், நம்பிக்கை சித்திரங்கள் மரணமுறாது. ஆக, அஞ்சலிக் குறிப்பின் வழி நாம் ஞாநியை மரணமற்றவராய் மாற்றி நம் அருகே வைத்துக் கொள்கிறோம். அவர் சட்டென போய் விட்டாரே எனும் அதிர்ச்சி தரும் பதற்றத்தை இப்படிப் போக்குகிறோம். இந்த வாழ்வு அநிச்சயமானது என எந்த ஆளுமையின், பிரியமான நபரின் மறைவும் நமக்கு உணர்த்தும். அஞ்சலிக் கட்டுரையும் நிச்சயம் அதை உறுதிப் படுத்துகிறது. அதேவேளை முரணாய் இவ்வாழ்வு நிச்சயமானது என்பதையும் அஞ்சலிக் குறிப்பு உணர்த்துகிறது. அஞ்சலிக் குறிப்பு ஒருவிதத்தில் கர்த்தர் கல்லறையை திறந்து “லாசரஸ்! வெளியே வா” என அழைத்ததைப் போன்றது.

2)   அடுத்த காரணம் பண்பாட்டு ரீதியானது. நமது நாட்டுப்புற தெய்வங்கள் பெரும்பாலும் உண்மையாய் வாழ்ந்து மறைந்த மனிதர்களே. இம்மனிதர்கள் எப்படி தெய்வமாகிறார்கள்? தொன்மக் கதைகள், அவற்றை ஒட்டின சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் வழி. மனிதர்களை இப்படி தெய்வமாக்குவது நமது தொன்று தொட்டு இருக்கிற பழக்கம்.
இதில் ஆர்வமூட்டும் விசயம் இத்தொல் கதைகள் நேற்று உருவாகி உறைந்து போகிறவை அல்ல. எங்கள் ஊரில் உள்ள பூதத்தான், மாடன் ஆகிய சாமிகளின் தோற்றம் பற்றி உள்ள கதைகளை விட அச்சாமிகள் தம் வாழ்வில் எதிர்பட்டதைப் பற்றி எளிய மக்கள் கூறும் நடுங்கச் செய்யும் கதைகளே அதிகம். என் நண்பன் பூதத்தான் சாமியின் சலங்கை ஒலியை ஓரிரவு கேட்டதாய் என்னிடம் உணர்ச்சிபூர்வமாய் விவரித்த போது நானும் நம்பினேன். இன்னொரு நண்பன் மாடசாமி தன்னை முதுகில் அறைந்த அழைத்ததைச் சொல்லி சட்டையை அவிழ்த்து சிவந்து தடித்த தடம் ஒன்றையும் காட்டினான். இவர்கள் யாரும் மனம் பிறர்ழ்ந்தவர்கள் அல்ல. சாமிகள் இப்படித் தான் நம் வாழ்வில் நீடிக்கிறார்கள்; இப்படித் தான் நம் கை பிடித்து அவர்கள் உலவுகிறார்கள். அஞ்சலிக் குறிப்பெழுதுவதும் இந்த தொல்மரபின் ஒரு நீட்சியாக இருக்கலாம். நாம் ஓரளவுக்கு மேல் தோளில் கையிட்டு அணுக்கமாய் பழக முடியாத ஆளுமைகளை நம் கையில் அமரும் பட்டாம்பூச்சியாய் மாற்றி வைத்துக் கொள்ள அஞ்சலிகள் உதவுகின்றன.

ஆகையால் அஞ்சலிக் குறிப்புகள் நம் பாசாங்கின், போலித்தனத்தின் வெளிப்பாடு அல்ல. மரணத்தை ஏற்கவும் நிராகரிக்கவும் செய்வதற்கு நம்மிடம் உள்ள ஒரு அற்புதக் கருவியே அஞ்சலிகள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...