Skip to main content

தனிமனிதன் எனும் பிரமை (5)

Image result for endhiran black sheep scene
Who is the black sheep?

என் மொழி எப்படி முழுக்க முழுக்க வாசகருடனான உரையாடலால், மோதலால், அவர்களை சென்று சேரும் எனது முனைப்பால் மாறியது, மாறுகிறது, எப்படி எனது எழுத்து முற்றிலும் நான் எதிர்பாராத விதங்களில் வாசகர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது, உணரப் படுகிறது என நான் எழுத்தாளனாய் மலர்ந்த காலத்தில் உணர்ந்து கொண்டேன்.
 எழுத்து என்னையே மீறிச் செல்லும் இடங்களை உணர்ந்தேன். எத்தனையோ பேர்களின் கருத்துக்கள் என் சிந்தனைக்கு செறிவூட்டுகின்றன. நான் யோசிப்பதும், எழுதுவதும் எந்தளவுக்கு என்னுடையவை எனும் ஐயம் இப்போது எனக்கு வலுவாக எழுகிறது. என் எழுத்தில் நான் மிக மிகக் குறைவாகவே “நானாக” இருக்கிறேன்.
 என் தரப்புகள், நம்பிக்கைகள், பிடிவாதமான அபிப்ராயங்கள், பிடிப்புகள் நிலைப்பதில்லை. நான் ஓடும் நதி போல் மாறிக் கொண்டே இருக்கிறேன். அப்படி என்றால் இந்நதியின் பரப்பில் தோன்றும் ஆயிரமாயிரம் அலைகளில் எந்த அலை நான்?

 மேலும் வாசகன் என்று ஒரு புள்ளியை கற்பனை செய்யாமல் ஒரு வார்த்தையை கூட என்னால் எழுத இயலாதே? நான் மற்றும் வாசகன் எனும் இரு எல்லைகள் நடுவே ஒரு சிலந்தி பின்னும் வலை தான் என் எழுத்து. இந்த எண்ணங்கள் தாம் எனது ஆரம்ப கட்ட தனிமனிதவாதத்தை உடைத்து நொறுக்கின.
நான் ஆதர்ஷிடம் கேட்டேன்: “தனிமனிதன், சுயம் என்பவையெல்லாம் கற்பிதங்கள் இல்லையா?” இக்கேள்வி அவனை அதிர வைத்தது. அது எப்படி முடியும் என்றான். தனிமனிதன் என்றால் யார்? தனித்தவன். தன்னில் இருந்து பிறப்பவன். இது சரி என்றால் தனிமனிதனால் தன்னை மட்டும் கொண்டு தன்னை விளக்க இயல வேண்டும்.
 “உன்னால் தனியாக நீ யார் என கூற இயலுமா? இன்னொருவருடன் தொடர்புறுத்தாமல் இதை செய்ய வேண்டும். முயன்று பார்” என்றேன். அதாவது “நான் இப்படியானவன்” என இன்னொருவரிடம் சொல்லாமலேயே அல்லது அப்படி சொல்வதாய் பாவனை செய்யாமலே விளக்க வேண்டும். அதாவது சூனியத்தில் நின்று அவன் தன்னையே விளக்க வேண்டும்.
 சற்று நேரம் யோசித்து விட்டு முடியாது என்றான்.
 தனிமனிதன் எனும் உணர்வே மொழியில் தான் அமைந்துள்ளது. மொழி என்பது ஒன்றுக்கு மேற்பட்டோரின் கருத்துக்களும் எண்ணங்களும் உணர்வுகளும் நம்பிக்கைகளும் ஊடுபாவும் ஊடகம். எத்தனையோ பேர் பரஸ்பரம் உரையாடும் வெளி. மொழிக்குள் நீங்கள் “தனித்து” செயல்படவே இயலாது. மொழிக்குள் ஒருவர் “கூட்டாய்” மட்டுமே யோசிக்கவும் பேசவும் எழுதவும் இயலும். கூட்டாய் செய்யும் எதுவுமே உங்களை “தனித்திருக்க” அனுமதிக்காது.
அடுத்து, ஒருவர் தான் இப்படியானவர் என விளக்கவே ”தான் இப்படியெல்லாம் இல்லை” என கூற வேண்டும். மற்றமையுடன் தொடர்ந்து முரண்பட்டுத் தான் தனிமனிதன் உருவாகிறான். மற்றமை இல்லை என்றால் தனிமனிதனும் காணாமல் போய் விடுவான்.
தனிமனிதனே இல்லை என நான் கூறவில்லை. ஆனால் தனிமனிதன் என்பது தொடர்ந்து மாறும், உறுதியற்ற ஒரு நிலை. இந்த நிலையின் துவக்கப் புள்ளி தான் “நான் வித்தியாசமானவன்” எனும் பிரமை என்கிறேன்.
 இந்த பிரமையில் காலூன்றி நின்று தான் நாம் நம் சுயத்தை உருவாக்குகிறோம். ஆனால் இந்த துவக்கப் புள்ளி நம் ஆதார நிலை அல்ல. ஒரு விமானம் ரன்வேயில் ஓடி டேக் ஆப் ஆகிறது. இந்த ரன் வே தான் “நான் தனியானவன்” எனும் எண்ணம். விமானம் தான் நமது “சுயம்”. நாம் பல சமயங்களில் ரன் வே தான் விமானம் என குழப்பிக் கொள்கிறோம். பறக்கும் விமானம் தனித்தில்லை. அது பல்வேறு இயல்பியல் விதிகளுக்கு உடன்பட்டு தன்னை காற்றில் தக்க வைக்கும் உறுதியற்ற, நிலையற்ற ஒன்று. நம் சுயமும் அப்படியே.
சரி, நம் உடல் நம் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது? இது நம்மை “தனிமனிதனாக” ஆக்கவில்லையா? இக்கேள்வியை எப்படி விவாதித்தோம் என இறுதிப் பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...