Skip to main content

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (1)

Image result for crowd tamil theatre
இது ஒரு கோழியா முட்டையா என்பது போன்ற சிக்கல் என உங்களுக்கு தோன்றலாம். ஆனாலும் இக்கேள்விக்கு என்னிடம் தெளிவான விடை ஒன்று உள்ளது. மேலும் இக்கேள்வி வெகுசுவாரஸ்யமானது என்றும் எனக்குத் தோன்றுகிறது.
மனிதனின் தேவைகள் ஒரு பண்டத்தை உற்பத்தி பண்ணத் தூண்டுகிறதா அல்லது நேர்மாறா? சமீபத்தில் ஒரு சமூகவியல் வகுப்பில் ஒரு மாணவி மார்க்ஸிய கோட்பாடு பற்றி பேசும் போது இவ்விசயத்தை குறிப்பிட்டாள். தேவையே பொருட்களின் உற்பத்தியை நேரடியாய் தீர்மானிக்கிறது என்றாள். நான் அவளிடம் கேட்டேன், “ஒரு அழகிய சுரிதார் பார்த்ததும், ஒரு புது போன் சந்தையில் வந்ததும் உங்களுக்கு அதை வாங்கத் தோன்றுகிறது. அங்கே தேவையா அல்லது அப்பொருள் நமக்குள் தூண்டும் ஆசையா நம்மை வாங்க வைக்கிறது? அதே போல ஒரு புதுப்படம் வெளியாகி அதைப் பற்றி மீடியாவில் பரபரப்பாய் பேசினால் போய் பார்க்கத் தோன்றுகிறது. நாம் பார்க்க ஆசைப்பட்டதனால் அப்படம் வெளியானதா அல்லது அப்படம் வெளியானதால் நமக்கு பார்க்க ஆசை தோன்றியதா?

 அத்தியாவசிய பொருளான மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப் படும் ஒவ்வொரு மின்சாதனப் பொருளும் நமது மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கின்றன. இப்பொருட்களை கொடு என நான் சந்தையிடம் கேட்கவில்லை. ஆனால் சந்தை இப்பொருட்களை தட்டில் வைத்து என்னிடம் நீட்ட நீட்ட எனக்கு கூடுதல் மின்சாரம் தேவையாகிறது. எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு பிக்சர் டியூப் டிவி போதும். நூறு ரூபாய்க்கு கேபிள் கனெக்‌ஷன் போதும். ஆனால் இரண்டுமே இனி கிடைக்காது என ஆகும் போது நான் பத்தாயிரம் ரூபாய்க்கு எல்.சி.டியும் மூவாயிரத்துக்கு செட் ஆப் பாக்ஸும் வாங்க நேர்கிறது. சில வேளைகளில் நமது ஆசை தூண்டப்பட்டு தேவையை சந்தையே உருவாக்கிறது.
 சில சந்தர்பங்களில் ஒரு தேவை நம் மீது திணிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபட்ட சூழல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான சந்தையை உருவாக்குகிறது. கார்ப்பரேட்மயமாக்கல் ஒரு நகரப்பகுதியின் நில மதிப்பை பல மடங்கு செயற்கையாக ஏற்றி விடுகிறது. அங்கு வசிப்பவர்கள் மிகையான வாடகைக்கும் சேர்த்து சம்பாதிக்க நேர்கிறது. அதற்காக கூடுதல் உழைக்கிறார்கள். வீடு வாங்க வேண்டும் என்பதையே ஒரு கனவாக வளர்க்கிறார்கள். அதற்காக இருபது வருடங்கள் உழைத்து வங்கிக் கடன் செலுத்தி போராடி இறுதியில் வீடு எனும் லட்சியத்தை அடைகிறார்கள். ஆனால் வீட்டின் விலையை சந்தை செயற்கையாய் ஏற்றவில்லை என்றால் (அல்லது ஒரு நகரத்தில் இருந்து மென்பொருள் நிறுவனங்கள் வெளியேறினால்) நீங்கள் அதே வீட்டை பத்து வருடங்களில் வாங்கி இருக்க முடியும். வீட்டின் மதிப்பு மேலும் குறைந்தால் உங்களுக்கு வீடு வாங்கும் ஆசையே ஏற்படாது.
 ஆக செயற்கையான பரபரப்பு, போட்டி மனப்பான்மை, பொருள் மீதான இச்சையை கார்ப்பரேட் சந்தை உண்டு பண்ணுகிறது.”
இதை ஒட்டி ஒரு சுவாரஸ்யமான விவாதம் வகுப்பில் நடைபெற்றது. எனக்கு Fast Food Nation எனும் புத்தகத்தில் Eric Schlosser துரித உணவு பண்பாடு எப்படி அமெரிக்காவில் திணிக்கப்பட்டது என விளக்கியிருந்தது நினைவு வந்தது. அறுபதுகளில் ரயில் பாதைகள் அகற்றப்பட்ட தேசத்தை முழுக்க இணைக்கும் சாலைகள் அமெரிக்கா எங்கும் அமைக்கப்பட்டன. ரயில் பாதைகளே அதுவரையிலும் அமெரிக்காவின் ரத்த தமனிகளாய் இருந்தன. குறைவான கட்டணத்தில் மக்கள் இந்த பொதுபோக்குவரத்தை பயன்படுத்தி சௌகர்யமாய் இருந்தனர். அப்போது அறிமுகமாகத் துவங்கின கார்களை விற்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரயில் சேவை முக்கிய தடையாக இருந்தன. அதனால் அவை அரசை லாபி செய்து ரயில் பாதைகளை அகற்றினர். பதிலுக்கு சாலைகளை (மக்கள் செலவில்) பரவலாய் அமைத்தனர். அடுத்து கார்களின் தேவையை, வசதியை மக்களுக்கு இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்தினர். மக்களுக்கு இப்போது கார்கள் அவசியமாய் போயின. ரயிலை விட இதுவே சௌகர்யம், இதுவே முன்னேற்றத்தின் அறிகுறி என நம்பத் தலைப்பட்டனர். ஆனால் சந்தை இத்துடன் நிற்கவில்லை. சாலையில் பயணிப்போருக்கு அவசரமாய் வண்டியை நிறுத்தி வாங்கி கொறிக்க துரித உணவு தேவைப்பட்டது. அப்படி சாலை ஓரங்களில் பர்க்கர் கடைகள் அறிமுகமாகி மெக்டொனால்ட்ஸ், கெ.எப்.ஸி போன்றவை பெரும் வணிக வெற்றி பெற்று அமெரிக்க உணவில் இருந்து பிரிக்க முடியாத வஸ்துக்களாகின. ஆனால் ரயில் பாதைகள் அகற்றப்படாவிட்டால் மெக்டவல்ஸ், கெ.எப்.ஸி எல்லாம் முளைத்திருக்காது.

(தொடரும்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...