Skip to main content

சுஜாதாவும் சாருவும் – துள்ளுவதே இளமை


Image result for கணையாழி கடைசி பக்கங்கள்

அன்புள்ள அண்ணன்,
     நேற்று சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்கள் வாங்கினேன். டி என் பி சி எஸ் பரீட்சைக்கு டியூட்டி போட்டிருந்தார்கள். மனக்கசப்போடுதான் சென்றேன். ஞாயிற்றுக் கிழமை அதுவுமா இப்படி சாகடிக்கிறாங்களேன்னு நொந்து கொண்டேன். நானூறு ரூபாய் டியுட்டி பார்த்ததிற்கு கொடுத்தார்கள். வாக்கிக் கொண்டு எதாவது புத்தகம் வாங்கலாம் என்ரு பனுவல் புத்தகக் கடைக்குச் சென்றேன். முழுக்க அலசியும் ஒரு புத்தகம் கூட வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. கடைசியாக சுஜாதாவின் புத்தகம். சுஜாதாவின் நாவல்களை வாங்க தற்போதைக்கு மனம் இல்லை.இதுபோன்ற விசயங்களில் நான் கட்டுரைகளையே காசு கொடுத்து வாங்குவது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கணையாழி கண்ணில் பட்டது. இந்த புத்தகத்தின் விசேஷம் என்னவெனில் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணம் செய்த போது ஒரு வாலிபர் வெண்ணிற இரவுகள் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். இன்னும் நினைவில் இருக்கிறது. கருப்புக்கலர் சட்டை. அவர்தான் சுஜாதா புளியமரத்தின் கதையைப் பற்றி தன் கட்டுரையில் எழுதியிருப்பதாகச் சொன்னார். அன்றிலிருந்து அந்தப் புத்தகத்தை என்றைக்காவது வாங்க வேண்டும் என்று முடுவு செய்திருந்தேன். நேற்றைக்கு வாங்கி விட்டேன்.


    கல்லூரிக்கு போகும் போதே இரண்டு கட்டுரைகளை வாசித்துவிட்டேன். முன்னுரையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது மிகவும் இரசிக்க வைத்தது. “என் இந்த எழுத்துக்களை பதிப்பில் கொண்டுவர மனுஷ புத்திரன் பிறக்க வேண்டியிருந்தது. அதாவது அவர் பிறப்பதற்கு முன்னமே நான் எழுதிக் கொண்டிருந்தேன்”. அவ்வளவு வயதாகியும் நம் மத்தியில் அவர் ஒரு மார்டன் எழுத்தாளர் என்றுதான் பார்க்க முடிகிறது. அவரது எழுத்துக்களுக்கு வயதாகவே இல்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விசயம். எழுத்தை வாசித்து சுஜாதாவைப் பற்றி யோசித்தால் அவர் ஒரு வாலிபர் போன்ற நினைவைத்தான் அவர் எழுத்துக்கள் ஏற்படுத்துகின்றன

  எனினும் எனக்கு அவருடைய நாவல்களை வாசிப்பதற்கான வயது கடந்து விட்டது. இதையே ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதாவின் நாவல்களை பற்றி யாராவது படிக்க வைத்திருந்தால் அனைத்தையும் வாசித்திருந்திருப்பேன். நாட்கள் கடந்துவிட்டன. இப்போதைக்கு அவர் கட்டுரையே மிகச் சிறந்த புத்தகமாக என் வாசிப்புக்கு எடுத்துக் கொள்கிறேன்
இன்றைக்கு புளியமரத்தின் கதையைப் பற்றிய கட்டுரையை வாசிக்கப் போகிறேன்

நன்றி 
இரா. அருள் 

அன்புள்ள அருள்
இதைப் படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. சுஜாதா ஒரு அற்புதமான உரையாடல்காரர். நீங்கள் குறிப்பிட்ட இளமை சாருவின் எழுத்திலும் ஓரளவு உண்டு. அது வாழ்க்கையை உற்சாகமாக எதிர்கொள்வதில், சுமைகள் இன்றி கொண்டாடுவதில் இருக்கிறது. அவர்களது எழுத்தில் இந்த முனைப்பு வெளிப்படுகிறது. எனக்கு சுஜாதாவின் எழுத்தைப் படிக்கையில் கண்ணாடிக் குடுவையில் ஒரு மீன் குஞ்சு நீந்துவதை பார்ப்பது போலிருக்கும். மொழியை புத்துணர்வுடன் வைத்திருப்பது எப்படி என சுஜாதாவிடம் இருந்து நாம் தாராளமாக கற்கலாம். அப்புறம், சற்றும் எதிர்பாராத கோணத்தில் இருந்து ஒரு விசயத்தை எதிர்கொள்வது, சில ஆழமான விசயங்களை, போகிற போக்கில் கடந்து போகும் பெண்ணின் துப்பட்டா போல், தொட்டுப் போவது, எதையும் குறைவாய் கச்சிதமாய் ஆனால் அழுத்தமாய் சொல்வது சுஜாதாவின் தனிச்சிறப்புகள். கட்டுரைகளில் சில விசயங்களை இன்னும் விரிவாய் அவர் விவாதித்திருக்கலாமே எனத் தோன்றும். ஆனால் அது அவர் இயல்பு அல்ல
அன்புடன்
ஆர். அபிலாஷ்


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...