Skip to main content

நம் முகத்தில் காறித் துப்பும் மீடியா

Image result for police burning auto + chennai violence

நேற்று ஒரு வங்காளப் பத்திரிகையில் இருந்து ஒரு சப்-எடிட்டர் அழைத்து ஜல்லிக்கட்டு பற்றி கட்டுரை கேட்டார். அதை வங்காளத்தில் மொழியாக்கி வெளியிட அவர்களுக்கு உத்தேசம். ஆனால் ஒரு நிபந்தனை. ஜல்லிக்கட்டின் கலாச்சார பக்கம் – இலக்கியத்தில், கலைகளில், பண்பாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என – பற்றி மட்டும் எழுத வேண்டுமாம். அவரே எனக்கு எடுத்துக் கொடுத்தார். “உங்க சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பு உள்ளதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றி எழுதுங்கள். சமீபத்தில் ஒரு நாவல் சாகித்ய அகாதமி பரிசு வாங்கியதே. அதில் கூட ஜல்லிக்கட்டு பற்றி வரலாற்று குறிப்பு உள்ளதாய் சொன்னார்கள்”

”காவல்கோட்டமா?”
”ஆமா ஆமா. அதைப் பற்றியும் எழுதுங்கள். ஏனென்றால் இங்கே வங்காளத்தில் யாருக்கும் ஜல்லிக்கட்டு பற்றி தெரியாது.”
என்னிடம் யாராவது எழுத வழிமுறைகள் சொன்னால் கடுப்பாகி விடுவேன். ஆனாலும் அவர் எந்த அளவுக்கு போகிறார் என அறிந்து கொள்ள விரும்பினேன். ஜல்லிக்கட்டு வெறும் பண்பாட்டு அடையாளம் அல்ல, அதன் அரசியல் சமூக பரிமாணங்களை தவிர்த்து பேச முடியாது. மேலும் மக்களின் உணர்வுகள் திரண்டு வெளிப்பட அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்ததே அன்றி அது தமிழரின் ஒட்டுமொத்த அடையாளம் அல்ல என்றேன். அவர் கேட்டு விட்டு “உங்க விருப்பப்படி எழுதுங்கள். நாங்கள் எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கு குறுக்கே நிற்க மாட்டோம். ஆனால் சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றி அதிக கவனம் செலுத்துங்கள்” என்றார். இவர் என்னடா தேய்ந்த ரெக்கார்டாக இருக்கிறாரே என வெறுத்துப் போனேன். போனை வைத்தேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியபடியே இருந்தார். வங்காளத்தில் லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகை தம்முடையது என்று தற்பெருமை வேறு. நான் பிடிவாதமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் ”சரி உங்க விருப்பப்படி எழுதுங்கள்,” என்றார். ஆனால் என்ன நடந்ததோ சற்று நேரத்தில் அழைத்து “நாங்கள் இந்த வாரம் ஜல்லிக்கட்டில் கவனம் செலுத்தப் போவதில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். அதனால் எழுத வேண்டாம்” என்றார். நல்லது, விட்டது சனியன் என நினைத்துக் கொண்டேன்.
இதை எதற்கு குறிப்பிட்டேன் என்றால் ஜல்லிக்கட்டு அரசியல் பற்றி இந்திய மீடியாவும் இந்திய அறிவுஜீவிகள், மனித உரிமை போராளிகளும் அறியாமையில் இருப்பதாய் நான் நம்பவில்லை. அவர்கள் அப்படியான ஒரு பாவனையை கொடுக்கிறார்கள். இந்த போராட்ட அரசியல், அதன் மீது அரச பயங்கரவாதம் செலுத்தும் ஒடுக்குமுறை பற்றி வேண்டுமென்றே பாராமுகமாய் இருக்கிறார்கள். இவர்கள் தான் இப்படி என்றால் நம் தமிழ் வெகுஜன மீடியா தமிழர்களை ஒட்டுமொத்தமாய் அவமதித்து விட்டது.
பெரும்பாலான பத்திரிகைகள், சேனல்கள் போராட்டத்தின் முடிவில் மக்கள் மீது காவல்துறை அவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறையை மீடியா சித்தரித்த விதம் கடும் ஏமாற்றத்தை, கசப்பை ஏற்படுத்தியது. எப்போதும் முற்போக்காக தன்னை எப்போதும் காட்டிக் கொள்ளும் ஆங்கில ஹிந்து பத்திரிகை போலீஸ் துறையை பாதிக்கப்பட்ட தரப்பாக சித்தரித்தது. காவல்துறையினர் ஆட்டோவை கொளுத்தும் படத்தை பெரும்பாலான பத்திரிகைகள் மட்டுமல்ல ஆங்கில செய்தி இணையதளங்கள் கூட வெளியிடவில்லை. தமிழில் ரிப்போர்ட்டர், தந்தி போன்ற பத்திரிகைகள் காவல்துறை கலவரங்கள் நடத்தும் முன்னரே “தேசவிரோத கும்பல் காவல்துறை மீது தாக்குதல்” என தலைப்பு செய்தியை தயாரித்து விட்டன. காவல்துறையின் திட்டமிட்ட வன்முறை அம்பலமான பின்னரும் தம் பழைய திரைக்கதையை கைவிட பத்திரிகை முதலாளிகள் தயாராகவில்லை. இப்பத்திரிகைகளில் பணி செய்பவர்களே இதையெல்லாம் நமப மாட்டார்கள் என சொல்வேன். அப்படியென்றால் யாரை நம்ப வைக்க, ஏமாற்ற இப்படியொரு நாடகம்? மீடியா மக்களையே செருப்பால் அடிக்கலாமா?
மனித உரிமைகள் மீதும், சிவில் சமூகம் மீது நம்பிக்கை கொண்டோர் மீது இந்த மீடியா காறித் துப்பி விட்டது. நீங்கள் இந்த அளவுக்கு சென்றிருக்க வேண்டாம். சோரம் போகலாம். ஆனால் அம்மணமாக தெருவில் ஓட வேண்டிய தேவையில்லை!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...