Skip to main content

வலியும் பரிவும்


வலியை எனது இரண்டாம் பிரக்ஞை என்பேன். அது எனக்குள் ஒற்றைக்கண்ணாய் சதா திறந்திருக்கிறது. புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்ததுமே பலருக்கும் அங்கு பார்க்கப்போகும் அபாரமான நூல்கள், எதிர்கொள்ளப் போகும் நண்பர்கள், கூட்டத்தின் சலசலப்பு, அழகிய இளம்பெண்கள், குதூகலம் குறித்து ஒரு சித்திரம் கண்முன் எழும். எனக்கு நேர்மாறாக இவ்வளவு தூரம் நடந்தால் கால் எவ்வளவு வலிக்கும், உடம்பில் எப்படியான அசதி ஏற்படும் எனும் எண்ணமே முதலில் ஏற்படும். அது குறித்த அலுப்புடனே முதல் அடியை எடுத்து வைப்பேன். அங்கு போக வேண்டும் என திட்டமிட்டவுடனே என் உடல் அலுத்துக் கொள்ளும் வலியை கற்பனை பண்ணிக் கொள்ளும். ஆனால் உள்ளே சென்று வேடிக்கை பார்க்க துவங்கியதும் மனம் குதூகலத்தில் எல்லாவற்றையும் மறந்து விடும்.

இன்றைய நாளும் அப்படித் தான் அமைந்தது. காலையில் எழுந்ததுமே கை மணிக்கட்டில் மாட்டு ஊசியை நுழைத்து தைத்து இழுப்பது போன்ற வலி. ஒரு பாரம். இறுக்கம். நான் கையை ஊன்றித் தான் படுக்கையில் இருந்து எழுந்து என் சக்கர நாற்காலியில் அமர முடியும். இன்று எழுந்த பின் ஒரு மணிநேரம் எப்படி படுக்கையில் இருந்து எழுந்து அமர்வது என புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பசிக்கிறது, தயாராகி ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். ஆனால் கையை ஊன்றினால் உயிர்போகும் வலி. எப்படி சமாளிப்பது? கடைசியில் பல முயற்சிகளுக்கு பிறகு படுக்கையில் திரும்பி அமர்ந்து பின்னால் நகர்ந்து சக்கர நாற்காலியில் தாவிக் கொள்ளும் ஒரு வழியை கண்டுபிடித்தேன். அடுத்து தயாரானேன். ஆனால் மூன்று மாடிகளை இறங்க வேண்டும். கைப்பிடியை பற்றி ஊன்றாமல் இறங்க முடியாது. எப்படி வலியை தாங்கி இறங்குவேன்? சரி, இறங்கி விட்டால், எப்படி திரும்ப ஏறுவேன்? இதை நினைத்ததுமே என் வலியை ஒற்றைக் கண் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. சோர்ந்து போனேன்.
ஆனால் இறங்க ஆரம்பித்து வெளியே போனதும் வலியை மறந்து போனேன். நான் எதிர்பார்த்ததை விட எளிதாகவே இருந்தது. வலி உடம்பில் இருக்கிறதா அது மனதின் கற்பனையா?
வலியை மறக்க முடிந்ததற்கு நண்பர் இளவேனிலுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை இதற்கு முன் தெரியாது. இன்று தான் முதன்முறை பேசுகிறேன். அவர் தன் உறவினர் ஒருவருடன் வந்து என்னை ஆஸ்பத்திரி அழைத்து சென்றார். எனக்காய் ஒரு பாதி நாளை செலவழித்தார். நான் அவரைப் போல் என் வேலை நாளை இது போல் மற்றொருவரின் தேவைக்காக எங்கும் செலவழித்தது இல்லை. இப்படியான மனிதர்கள் துன்பங்களை மறந்து மீண்டும் வாழ்வை உற்சாகமாய் எதிர்கொள்ள ஒரு பாதையை திறக்கிறார்கள். அவர் என் தோழி ஆர்த்தி வேந்தனின் துணைவர் என்றறிய மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு சுத்தமாய் முன்பழக்கம் இல்லாத எனக்காய் அவர் இவ்வளவு அக்கறை கொள்வார் என்றால் கூட வாழ்பவருக்காய் இதை விட அதிக அன்பை, பரிவை கொடுப்பார் என தோன்றியது.

இன்றைய நாள் இவ்வாறு கடும் வலியில் துவங்கி மகிழ்ச்சியான மனநிலையில் முடிந்தது. 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...