Skip to main content

வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்!

Image result for வண்ணதாசன்

தமிழ் கவிதைக்கான மொழி. இங்கு மிகச்சிறந்த புனைகதையாளர்கள் குறைவு. ஆனால் மிகச்சிறந்த கவிஞர்கள் ஏராளம். ஒரு கவிதை மூலம் தமிழனின் மனதை தொட்டு விடுவது போல் உரைநடையினால் முடியாது. கவிதை நம் உயிர்நாடி. அதனாலே ஒரு நவீன கவிஞருக்கு சாகித்ய அகாதமி எனும் போது தித்திக்கிறது. மேலும் வண்ணதாசனுக்கு எனும் போது கூடுதல் இனிக்கிறது.

 நம் பால்யத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி வண்ணதாசன். வாழ்க்கையை நுண்வியப்புகளால் ஆனதாய் நாம் உணரும் பருவத்தில் வண்ணதாசன் நம் தலை கோதும் நீளமான விரல்களாய் இருந்தார். ஒவ்வொன்றையும் இன்னும் இன்னும் நுணுகி லயித்து அணுக கற்றுத் தந்தார்.
 வண்ணதாசன் ஒரு வித்தியாசமான கலவை – ரொமாண்டிக்கான, நெகிழ்வான, ஒவ்வொரு சொல்லையும் நுண்பெருக்கியாய் மாற்றும் எழுத்து. கூடவே வாழ்க்கையின் நெருடலான, அதிர்ச்சியான, கசப்பான எதார்த்த உலகையும் அவர் சித்தரித்தார். ஒரு விகாரத்தை கூட ரொமாண்டிக்காய் அழகாய் பார்ப்பவர் அவர். அவரது கதையொன்றில் வீட்டுக்கு வரும் உறவினர் ஒருவருக்கு ஆறாவதாய் ஒரு விரல் இருக்கும். கதைசொல்லியின் நினைவுகளில் முழுக்க அந்த ஆறாவது விரல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஒரு அழகான பெண்ணின் மூக்கின் மேலுள்ள மருவையும் ஒரு மனிதனின் கையில் துருத்தித் தெரியும் ஆறாவது விரலையும் வண்ணதாசன் ஒன்றாகப் பார்ப்பார். வானம்பாடிகளில் இருந்து வண்ணதாசனை மாறுபடுத்திக் காட்டுவது இந்த ஆறாவது விரல் தான். நெருடலான, ஜீரணிக்க முடியாத, வெறுமையான உலகை அவர் ஒரு சிலாகிப்பான, மிகையுணர்ச்சி நிரம்பிய வாழ்க்கைபார்வையுடன் அணுகினார். இந்த ரொமாண்டிக் வண்ணமூட்டல் இல்லாவிட்டால் வண்ணதாசன் கலாப்ரியா, சுகுமாரன் போல் ஆகி விடுவார்.
 வண்ணதாசனின் சிலாகிப்பு என்பது வெறும் ஒரு அணுகுமுறை மட்டுமல்ல. அது நெல்லை மாவட்ட மண்ணின் குணம் என தோன்றுகிறது. நெல்லையின் கணிசமான எழுத்தாளர்களிடம் இந்த தாவணி காற்றில் பறக்கும் மொழிநடை உள்ளது. பாகாய் உருகுவார்கள். ஆனால் இனிப்பு உள்நாக்கில் பட்டதும் ஒரு கசப்பு உறைய ஆரம்பிக்கும். ஒரு சிறந்த உதாரணம் போகன் சங்கர். போகனின் கதைகள் ஜெயமோகன் மற்றும் வண்ணதாசனின் ஒரு அபூர்வமான கலவை. நெகிழ்விலும் கண்ணீர் மல்கலிலும் வண்ணதாசனையும், உடல் விகாரங்கள், சீரழியும் இச்சைகளை பேசுவதில் ஜெயமோகனையும் அவர் எடுத்துக் கொள்கிறார். போகன் என ஒரு உதாரணத்திற்கு தான் சொன்னேன். நெல்லை மண்ணில் இருந்து தோன்றும் எந்த புதுப் படைப்பாளியிடமும் வண்ணதாசனின் குரலை கேட்க முடியும். புதுமைப்பித்தன், அழகிரிசாமி, கி.ரா, விக்கிரமாதித்யன் ஆகியோரின் பாணியை பின்பற்றும் எழுத்தாளர்களை கூட அதிகம் காண முடியாது. ஆனால் வண்ணதாசனுக்கு எனும் நதிக்கு கிளைகள் ஆயிரம். நெல்லை பண்பாட்டின் ஒரு முக்கியமான கூறை வண்ணதாசன் பிரதிபலிக்கிறார். வண்ணதாசனை வாசிக்காத இளம் எழுத்தாளர்களின் மொழியில் கூட அவரது மொழியை, ஆளுமையை, அந்த தனி வாசனையை நாம் அடையாளம் காண முடிகிறது. அது தான் காலம் அவருக்கு அளித்த மகத்தான பரிசு. இது இரண்டாம் பரிசு! அவருக்கு மீண்டும் என் வாழ்த்துக்களும் அன்பும்!

வண்ணதாசனைத் தொடர்ந்து விக்கிரமாதித்யன், கலாப்ரியா, சுகுமாரன், தேவதச்சன், தேவதேவன், யுவன், மனுஷ்ய புத்திரன் போன்று மேலும் முக்கிய கவிஞர்களை சாகித்ய அகாதமி கௌரவிக்க வேண்டும். உரையநடை எழுத்தாளர்களை தேவைக்கு அதிகமாய் கொண்டாடி விட்டோம். இனி வரும் சில பத்தாண்டுகள் கிரீடத்தை தமிழ்க்கவிஞர்களின் தலையில் வைத்து அழகு பார்ப்போம்! உண்மையில் அது அவர்களுக்கு உரியதே!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...