Skip to main content

கெ.என் சிவராமனின் விஷமத்தனமும் சில விளக்கங்களும்


நான் காலச்சுவடிற்கு நகர முயல்கிறேனா என கெ.என் சிவராமன் ஒரு விஷமத்தனமான கேள்வியை எழுப்பி இருக்கிறார். நான் பிரம்மராஜனை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியது தான் காரணம். அவருக்கு கூறிக் கொள்வது என்னவென்றால்:

1. நூல்களை பிரசுரிக்க பதிப்பகம் நாடி தெருத்தெருவாய் அலையும் அவல நிலையில் நான் இதுவரை இல்லை.


2. கடந்த எட்டு வருடங்களில் பல முறை நான் என் பதிப்பாளருடன் இலக்கிய விவாதங்களில் முரண்பட்டிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறேன். ஆனால் எங்கள் இடையே உறவு அதனால் கசந்ததில்லை. அப்போதெல்லாம் நான் புது பதிப்பகத்தை நாடுகிறேனா என உங்களுக்கு ஐயம் ஏற்படாதது ஏன்? ஒரு சம்மந்தமில்லாத விசயத்தில் நான் காலச்சுவடு நோக்கி போவதாய் உங்களுக்கு சந்தேகம் எழுவது விசித்திரம் தான். நான் சுதந்திரமாய் சிந்திப்பவன். எழுதுபவன். என் கருத்துக்கள் சிலநேரம் எதேச்சையாய் சிலருக்கு ஆதரவாக்வும் சிலருக்கு எதிராகவும் மாறும். அது திட்டமிட்டு செய்வதல்ல. எனக்கு குழிபறிக்கும் / முதுகை வருடும் அரசியலில் ஆர்வமில்லை. என்றும் அதை செய்ததில்லை.



3. உயிர்மையில் மட்டுமே என் நூல்கள் வெளியாகி உள்ளன. உயிர்மையில் வெளியான நூல்களுக்காகவே நான் யுவ புரஷ்கார் மற்றும் பாஷா பரிஷத் விருதுகள் பெற்றேன். உயிர்மையில் தான் நான் எழுத்தாளனாக அறிமுகமானேன். அடையாளம் பெற்றேன். இவ்வளவு ராசியான ஒரு இடத்தை நான் ஏன் விட்டு விலக வேண்டும்? உங்களுக்கு நான் அங்கு இருப்பது உறுத்துகிறது என்றால் கூலிப்படை வைத்து தூக்கி விடுங்கள்.

4. உயிர்மை என் நூல்களுக்கான ராயல்டி தொகையை வழங்குகிறது. எனக்கு அப்பதிப்பகத்துடன் எந்த பிணக்கும் இல்லை. கோபதாபங்கள் இல்லை.

5. இன்னொரு முக்கியமான விசயம்: சிவராமன், நீங்கள் ஒரு எழுத்தாளர் அல்லாததால் இந்த பரிமாணத்தை நீங்கள் அறியாதிருக்கலாம்: ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளனுக்குமான உறவு தாம்பத்யம் போன்றது. அது one night stand அல்ல. ஏன் இமையம் கிரியாவில் மட்டுமே தன் நூல்களை தொடர்ந்து பிரசுரிக்கிறார் என யோசித்திருக்கிறீர்களா? எஸ்.ராவுக்கு உயிர்மையுடனும் ஜெயமோகனுக்கு தமிழினியுடனும் உள்ள நீண்ட கால உறவின் உணர்ச்சிகரமான, படைப்பூக்கம் சம்மந்தமான பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளன் தொடர்ந்து படைப்பூக்கத்துடன் இயங்க அவனை ஊக்குவிக்கும், நம்பி ஆதரவு அளிக்கும் ஒரு இயக்கம் வேண்டும். இலக்கியத்தில் ஒரு நல்ல பதிப்பகமே அப்படி ஒரு இயக்கமாக இருக்கும். அதன் பகுதியாக இருந்தே எழுத்தாளன் வளர முடியும். மேலும் இது அன்பு, நம்பிக்கை, அர்ப்பணிப்பு சம்மந்தப்பட்ட விசயம். கடந்த இருபதாண்டுகளில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களை கவனித்தாலே இது புரியும். தமிழில் ஏன் உலக இலக்கியத்தில் கூட எடிட்டர் / பதிப்பாளருடனா கூட்டுறவின் அடிப்படையில் தான் பல எழுத்தாளர்கள் சாதித்திருக்கிறார்கள். உயிர்மையுடன் இருந்த போது சாரு எவ்வளவு எழுதினார், பிரிந்த பிறகு அவரது புத்தகங்களின், கட்டுரைகளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தது என்பதை அறிவேன். சாருவுக்கு பதிப்பிக்க ஆள் இல்லாமல் இல்லை. அவரை தொடர்ந்து ஊக்குவித்து அரவணைத்து எழுத தூண்ட ஒரு ஆள் வேண்டும். அது தான் அவருக்கு இல்லாமல் போனது. எழுத்தாளன் தனியே நின்று இயங்குவதில்லை. அவனுக்கு பின்னால் கண்மூடித்தனமாய் அவனை நம்பும் ஒரு இயக்கம் உள்ளது. அந்த இயக்கத்துடனான அவனது உறவு உணர்ச்சியின், அன்பின், பிரியத்தின், நம்பிக்கையின் அடிப்படையிலானது. வாழ்க்கையில் இந்த உணர்வுகளுக்கு இடமளிக்காதவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளன் ஒரு பதிப்பகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கிறான் என புரியாது. எனக்கு யார் மீது நேசமுள்ளதோ அவர்களுடனே நான் செயல்பட முடியும். நேசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது.


6. எப்படியாவது எனக்கும் உயிர்மைக்கும் ஒரு புகைச்சலை உண்டு பண்ணி பார்த்து ரசிக்கலாம் என உங்கள் நோக்கம் புரிகிறது. உங்களுக்கு சிண்டு முடிய வராது சிவராமன். அந்த சாமர்த்தியம் உங்களுக்கு போதாது. வழக்கம் போல் யுவகிருஷ்ணாவை தூண்டி விட்டு எனக்கு எதிராய் எழுத வையுங்கள். அல்லது புதிதாக அவரைப் போல் ஒருவரை உருவாக்குங்கள். நான் எழுதுகிற வேறு பத்திரிகைகளின் எடிட்டர்களிடம் சென்று என்னைப் பற்றி புகார் செய்யுங்கள். அது போன்ற ரகசிய சதியாலோசனைகள் தான் உங்களுக்கு நன்றாக கைவரும். வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...