Skip to main content

ஐரோம் ஷர்மிளா: துரோகமா சிந்தனை முதிர்ச்சியா? -

Irom Sharmila  

ஐரோம் ஷர்மிளா சில வருடங்களுக்கு முன்பும் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து சகஜ வாழ்வுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். அவருக்கு திருமணம் செய்ய விருப்பம் என்று கூட கூறப்பட்டது. ஆனால் அப்போது அவரைச் சுற்றியுள்ள போராளிகள், அரசியல் ஆர்வலர்கள் நெருக்கடி கொடுத்து அவரை தொடர செய்தனர்.
இப்போது 16 வருடங்களுக்கு பின் அவராகவே தன் விரதத்தை முடித்து விட்டார். மையநீரோட்ட அரசியலுக்கு திரும்ப ஆசைப்படுவதாய் கூறுகிறார். மணிபூர் முதல்வராகப் போவதாய் தெரிவிக்கிறார். இதை ஒரு நேர்மறையான திருப்பமாகவே பார்க்கிறேன். ஆனால் அவரது ஊரிலுள்ள இடதுசாரி சாய்வுள்ள அரசியல் போராளிகள் இப்போது ஷர்மிளாவை ஒரு துரோகியாய் சித்தரிக்க துவங்கி விட்டார்கள். தமக்காய் 16 வருடங்கள் உணவின்றி பட்டினி கிடந்து போராடியவரை இரண்டு இடங்களில் மக்கள் ஏற்க மறுத்து திரும்ப அனுப்பி இருக்கிறார்கள். ஷர்மிளா பற்றி தமிழில் உள்ள “போராளி”, “கலகவாதி” பிம்பமும் மெல்ல மெல்ல இனி சரியத் துவங்கும். ஏன் அவரது இத்தனை வருட பங்களிப்பை மறுத்து அவரை துரோக்கி ஆக்குகிறார்கள்?

ஷர்மிளாவை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர் அவர் ஜனநாயக அரசியலில் நுழைவதை விரும்பவில்லை, அது அவரை சீரழிக்கும் என கூறுகிறார்கள். இந்திய தேசியவாதத்தை ஏற்காத, தனிநாடு கோரும் மக்கள் இவர்கள். ஆனால் ஒரு தனிநாடாக மணிப்பூரால் தன்னை தக்க வைக்க முடியுமா? சீனாவுடன் இணைவார்களா? சீனா ஏற்கனவே திபத்தியர்களை எப்படி நடத்துகிறது என அறிய மாட்டார்களா? சீனா இந்தியா அளவுக்கு கூட எதிர்ப்பரசியலை அனுமதிக்காத நாடு என அறிய மாட்டார்களா?
எனக்கு முக்கியமாய் படுகிற கேள்வி இது: ஷர்மிளா ஒரு தனிமனிதராக போராட முடிவெடுக்கிறார். பிறகு அவர் தன் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து வேறு வகை பாதையை தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு அந்த உரிமை இல்லையா? எதிர்ப்பரசியலை கையில் எடுப்பவர்கள் மாற்று கருத்துக்களை, எதிர் நிலைப்பாடுகளை ஏன் திறந்த மனதுடன் ஏற்க தயாராக இல்லை? ஏன் அவர்கள் ஷர்மிளா தன் விரதத்தை தொடர வேண்டும் என்கிறார்கள்? அவர் ஒருவேளை உடல்நலமிழந்து இறந்தால் ஒரு நல்ல உயிர் தியாகி கிடைப்பார் எனும் கனவா? அவர்களுக்கு தேவை உயிருடன் உள்ள ஐரோம் ஷர்மிளாவா அல்லது ஐரோம் ஷர்மிளாவின் பிணமா?
உலகில் பெரும்பாலான இடங்களில் இடதுசாரி இயக்கங்கள் போராளிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களை நடத்தும் விதம் இப்படியாகத் தான் இருக்கிறது. எந்த தனிமனித பார்வைக்கும் இடம் தர மாட்டார்கள். சுயமாய் முடிவெடுக்கிறவர்களை துரோகி என முத்திரை குத்தி வேட்டையாடுவார்கள். இது ஏன்? ஆரம்ப கால மார்க்ஸியம் தான் காரணம்.
 ஆரம்ப கால மார்க்ஸியம் சமூக இயக்கத்தை புரிந்து கொண்ட விதம் சற்று பிழையானது. முதலாளித்துவ அமைப்பு – தொழிலாளிகள் என்று இருமையாக அது சமூக இயக்கத்தை கண்டது. இரு தரப்புக்குமான உற்பத்தி உறவு தான் சமூக இயக்கம் என அது குறுக்கிக் கொண்டது. இந்த தத்துவத்தில் மனம், மூளை, உணர்ச்சி, சிந்தனை, கற்பனைக்கு இடமே இல்லையா? உண்டு. ஆனால் உற்பத்தி உறவை தக்க வைக்கும் ஒரு கருவியாக மட்டுமே இவை பார்க்கப்பட்டது. அரசியல், கலாச்சாரம், சிந்தனை ஆகியவற்றை முதலாளித்துவம் தொழிலாளிகளை ஒடுக்க பயன்படுத்துவதாகவும் பூர்ஷுவா எனப்படும் நேரடியாய் உற்பத்தியில் ஈடுபடாத மத்திய வர்க்கம் முதலாளித்துவத்திற்கு சாதகமாய் கலாச்சாரம், சிந்தனை ஆகியவற்றை பரப்புவதாய் மார்க்ஸ் கருதினார்.
 இந்த ஆரம்ப கால மார்க்ஸியத்தில் மனித மனம் இடது – வலது என ஒரே சீராய் அன்றி முன்பின் முரணாய் யோசிக்க கூடியது எனும் புரிதல் இல்லை. உலக அறிவியக்கத்தில் தெரிதா, லகான் போன்றோரின் சிந்தனைகள் புகுந்த பின்னர் தான் மனித மனம் எப்படி தான் நம்புகிற ஒன்றுக்கு நேர் எதிராய் கூற சிந்திக்கலாம், தன் சிந்தனைக்கு நேர் எதிராய் செயல்படலாம் எனும் புரிதல் ஏற்பட்டது. மனிதன் தர்க்கரீதியானவன் அல்ல எனும் எண்ணம் வலுவானது. அப்படி என்றால் அவனை வெறும் உற்பத்தி உறவின் நீட்சியாய் மட்டுமே காண இயலாது. அவன் முதலாளித்துவத்தின் கருவியும் அல்ல, புர்ஷுவாவும் அல்ல. அவனுக்கு என்று ஒற்றைபட்டையான நிலைப்பாடுகள் இல்லை. அவன் முற்போக்கோ பிற்போக்கோ அல்ல அவன் ஒரு கலவை எனும் பார்வை வலுப்பட்டது. அல்தூசரின் சிந்தனைகள் மார்க்ஸியத்தில் இருந்த இறுக்கத்தை தளர்த்த உதவின.
 ஆனால் இன்றைய இடதுசாரி அமைப்புகள், கட்சிகள் இந்த பின்நவீனத்துவ பார்வையை ஏற்பதில்லை. அவர்களுக்கு ஒன்று நீங்கள் முதலாளித்துவத்தின் பிரச்சாரக் கருவி அல்லது இடதுசாரிகளின் பிரச்சார ஒலிபெருக்கி. இரண்டும் அன்றி, இரண்டுக்கும் இடைப்பட்டதாய், தனிமனித சிந்தனை கொண்டவராய் நீங்கள் இருக்க முடியும் என்றே ஏற்க மாட்டார்கள். ஐரோம் ஷர்மிளா தான் சுயநிலைப்பாடு கொண்டவர், தான் யாருக்கும் பிரச்சார கருவியல்ல என காட்ட முனையும் போது அவர் இடது முகாமில் இருந்து கடும் எதிர்ப்பை சந்திப்பது இதனால் தான்.
இந்த ”முற்போக்கு” சிந்தனையாளர்கள் மிஷல் பூக்கோவின் சிந்தனைகளை கற்க வேண்டும். அவர் அதிகாரத்தை அதிகாரம் கொண்டு மட்டுமே எதிர்க்க முடியும் என்றார். அரசியலை அரசியலால் மட்டுமே வெல்ல முடியும்! ஜனநாயக அதிகாரத்தை அதைக் கொண்டு மட்டுமே மணிபூர் மற்றும் பிற வடகிழக்கு மக்கள் எதிர்கொள்ள முடியும். அவர்கள் தம் வளர்ச்சிக்கு இந்திய மையநீரோட்ட அரசியிலில் பங்கு பெற்று, அதிகாரம் பெற்று, இங்குள்ள கலாச்சார இயக்கங்களில் செல்வாக்கு செலுத்துவது அவசியம். ஷர்மிளா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதை தான் மணிப்பூர் பிரிவினைவாதிகளால் தாங்க முடியவில்லை. ஆனால் ஷர்மிளாவினுடையது துரோகம் அல்ல. சிந்தனை முதிர்ச்சி. அது பாராட்டத்தக்கது!

நன்றி: கல்கி

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...