Skip to main content

மனதுக்குள் கேட்கும் குரல்

Image result for silk smitha

இதைப் படிக்கும் போது உங்களுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறதே அது யாருடையது? உங்களுடையது தான். ஆனால் நீங்கள் தான் வாயே திறக்கவில்லையே? இது எப்படி நிகழ்கிறது. அறிவியல் ஒரு விளக்கம் கொடுக்கிறது. பேச்சுக்கான சில நரம்பணுக்கள் வாசிக்கும் போதும் செயல்படுகின்றன. அதனால் தான் ”குரல்” கேட்கிறது.

மேற்கத்திய இலக்கிய கோட்பாடுகள் குறித்து ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு அத்தியாயம் அமைப்பியல் பற்றி. அமைப்பியலின் பிதாமகர் சசூர். அவர் ஒரு சொல் எப்படி அர்த்தம் கொள்கிறது என விளக்குகிறார். சில்க் என்றதும் உங்களுக்கு எப்படி அர்த்தமாகும்? சில்க் ஸ்மிதா, பட்டாடை அல்லது பட்டின் மென்மை, ஏன் பட்டுப்புழு கூட மனதில் தோன்றலாம். முதலிடம் எப்படியோ சிலுக்குக்கு தான். சரி எப்படி இந்த அர்த்தப்படுத்தல் நிகழ்கிறது?
ஒரு சொல்லை சசூர் இரண்டு விசயங்களின் இணைப்பினால் உருவாகிற சங்கதி என பார்க்கிறார். அர்த்தப்படுத்தும் சங்கதி, அர்த்தப்படுத்தப்படும் விசயம். சில்க் என்றால் அவரது தோற்றம் அர்த்தப்படுத்தும் சங்கதி (signifier). சில்க் எப்படியானவர் (அதாவது ஒரு நடிகை) என்பது அர்த்தப்படுத்தப்படும் விசயம் (signified).
 இதை ஏன் ரெண்டாக பார்க்க வேண்டும்? ஒருவேளை சில்க் ஸ்மிதா தொடர்ந்து வாழ்ந்திருந்தால், அரசியலில் புகுந்து வென்று, ஒரு கட்சியின் தலைவி ஆகி முதலமைச்சர் ஆகி தனக்கென வேறு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்தால்… ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து சில்க் என கேட்டதும் உங்களுக்கு “தமிழினத் தலைவி”, “ஏழைகளின் காவலர்” என்பது போல் ஒரு அர்த்தம் கிடைக்கலாம். ஆக அர்த்தம் நிரந்தரம் அல்ல. இதை விளக்க ஒரு சொல்லையும் அர்த்தத்தை ரெண்டாய் பிரித்து பார்க்க வேண்டும் என்றார் சசூர். அதனால் அவர் சொல்லையே ரெண்டாக்கினார். அர்த்தத்தை சுட்டி நிற்கும் பொருள். அது சுட்டும் அர்த்தம்.
இதை விளக்கும் போது சசூர் sound image பற்றி சொல்கிறார். ஒரு சொல் நமக்குள் வேலை செய்ய அதற்கு ஒரு ஒலி பிம்பம் வேண்டும் என்றார். உதாரணமாய் மோடி என்று கேட்டதும், அதாவது படித்தால் கூட, மனதுக்குள் அவரது சித்திரம் எழ வேண்டும். அதற்கு நம் மனம் மோடி எனும் சொல் தனக்குள் ஒலித்து கேட்க வேண்டும் என்றார். அதாவது நீங்கள் சாலையில் ஒரு அழகான பெண்ணை பார்த்ததும் அவளைக் குறித்து யோசிக்கிறீர்கள். அந்த எண்ணங்களை, உங்கள் குரல் பின்னணியில் டப்பிங் செய்ய, மனதுக்குள் நீங்கள் அவளை பார்க்கும் அதே சமயம் கேட்கிறீர்கள் தானே? அப்படி கேட்காமல் அவளைக் குறித்து நீங்கள் யோசிக்கவே முடியாது.
எனக்கு இந்த இடம் வந்ததும் ஒரு சந்தேகம் எழுந்தது. பிறவியிலே செவிடான ஒருவருக்கு எந்த சொல்லுக்கும் ஒலி வடிவம் தெரியாது. அவர் வாசிக்கும் போது, யோசிக்கும் போது சொற்கள் அவருக்குள் ஒலிக்குமா? அவருக்குள் sound image இருக்காது தானே? அப்படி என்றால் சசூர் சொல்வது அவர் விசயத்தில் பொருந்தாது.
அது மட்டுமல்ல திடீரென ஒருவர் கத்தியை எடுத்து நம் கழுத்தில் வைத்தால் அந்த நொடி உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என துல்லியமாய் புரிந்து விடும். ஆனால் யோசிக்கவே மாட்டீர்கள். எண்ணமே எழாமல் புரிந்து கொள்வீர்கள். அப்போது கத்தி எனும் பிம்பத்தை அதன் ஒலி வடிவின்றி அறிந்து கொள்கிறோமே. இது எப்படி நிகழ்கிறது?

அதே போல வேகமாய் வாசிக்கையிலும் நம் மனம் சொற்களை உச்சரிப்பதில்லை. சசூரின் கோட்பாடே பிரக்ஞைபூர்வமான மனநிலையில் ஏற்படுத்தும் அர்த்தப்படுத்தல் பற்றியது என நினைக்கிறேன். பிரக்ஞை அற்ற நிலையில் நாம் புரிந்து கொள்ளும் போது சசூரின் ஒலி பிம்பம் செயல்படுவதில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...