Skip to main content

இணைய சமத்துவமும் பொதுமக்களும்

இன்று சன் நியூஸ் சண்டே ஸ்பெஷல் விவாத மேடை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் கலந்து கொண்டேன். தலைப்பு இணைய சமத்துவம் (net neutrality). Free Basicsஇன் அடிப்படை பிரச்சனைகளை நான் ஏற்றுக் கொண்டேன். அதேவேளை இது ஒரு லட்சியபூர்வமான பிரச்சனை மட்டுமே என குறிப்பிட்டேன். அதாவது நடைமுறையில் இது இணைய சமத்துவத்தை அழிக்கவோ பயனர்களை அடிமையாக்கவோ போவதில்லை. எதிர்காலத்தில் இதை முன்னுதாரணமாய் கொண்டு வேறு நிறுவனங்களும் தம்மை முன்னிட்டு மட்டுமே கட்டுப்பாடான இணைய வசதியை வழங்கினாலும் இன்னொரு பக்கம் சுதந்திரமான இணையமும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏனென்றால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு இணையத்துக்கான 100 ரூ உண்மையில் பெரிய செலவல்ல. எப்படி பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மக்களை பயன்படுத்துவதற்கு இது போன்ற திட்டங்களை கொண்டு வருகிறதோ மக்களும் இது போன்ற திட்டங்களை தமக்கு தேவையான படி பயன்படுத்திக் கொள்வார்கள்.

Free Basicsஐ பயன்படுத்தும் ஆரம்ப கட்ட பயனர்களுக்கு இணைய சுதந்திரம் என்றாலே என்னவென தெரியாமல் போய் விடும் என்பது புருடா. நாளை சன் குழுமத்தின் அலைவரிசைகளை மட்டும் ஒரு சேவையில் இலவசமாய் தருகிறார்கள் என்றால் மக்கள் சன் நியூஸை மட்டும் பார்த்து மூளை சலவை ஆவார்களா? இல்லை? செய்தி இன்று பல வித ஊடகங்கள் மூலம் மக்களை போய் சேர்ந்தபடியே உள்ளது. யாரும் அதை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. பார்வையாளர்கள் சன்மியூஸிக்குக்காகவோ சீரியல் பார்க்கவோ இந்த சேவையை பயன்படுத்துவார்கள். பலவித செய்தி அலைவரிசைகளை பார்க்க விரும்புகிறவர்கள் வேறு சேவையை பயன்படுத்துவார்கள். மக்களுக்கு இது போன்ற சலுகைகளை எப்படி தமக்கு தோதாக பயன்படுத்த வேண்டும் என தெரியும்.
போனில் புதிதாய் இணையம் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு கூட இணையத்தின் வரம்பு என்னவென தெரியும். அவர்கள் முட்டாள்கள் அல்ல.
இதன் மூலம் பேஸ்புக் பயனர்களை தனக்கு அடிமையாக்கும் என்பதும் மிகை தான். பேஸ்புக்கு ஏற்கனவே இல்லாத அடிமைகளா புதிதாக உருவாக போகிறார்கள்?
இதன் மூலம் பேஸ்புக் நம் இணைய பயன்பாட்டு பாணியை அறிந்து அதை வியாபாரத்துக்கும் லாபத்துக்கும் பயன்படுத்துமென்றால் அது தவறல்லவா? இது இன்றைய யுகத்தில் தவிர்க்க முடியாத சமரசம். நம் போனில் உள்ள கணிசமான செயலிகளுக்கு நமது பயண விபரம், இணைய பயன்பாட்டு விபரங்கள் தெரியும். கோர்ட்டானா, சிரி போன்ற விர்ச்சுவல் அஸிஸ்டெண்டுகளுக்கு அதை விட நுணுக்கமான தகவல்கள் நம்மைப் பற்றி தெரியும். பெரிய நஷ்டமில்லை, ஆனால் நிறைய பயன் நமக்குண்டு என தெரிந்தே அனுமதிக்கிறோம்.
பொதுவாக இது போன்ற விவாதங்களில் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் × சுரண்டப்படும் தனிமனிதன் எனும் எதிரிடையை பயன்படுத்துவது வழக்கம். கார்ப்பரேட்டுகளுக்கு நம்மால் எப்படி பயனுள்ளதோ அதே போல் நமக்கும் கார்ப்பரேட்டுகளால் பயன் உண்டு. சில இடதுசாரிகள் இதை ஒருதலைபட்சமான ஒடுக்குமுறையாக பார்க்கும் தேய்வழக்கான பார்வையை கைவிட வேண்டும். ஒரு பக்கம் தாராளமயமாதலால் பயன்பெற்றபடியே, தனியார் நிறுவனங்களில் கைநிறைய சம்பாதித்து அனைத்து நுகர்வு சார் வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு இன்னொரு பக்கம் ஏ கார்ப்பரேட் ஏகாதிபத்தியமே என பொருமுவது பாசாங்கு.
Free Basics ஒரு கருத்தியலாக தவறு தான். ஆனால் நடைமுறையில் அதனால் பிரச்சனைகள் அதிகமிருக்காது. மக்கள் தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள் என்றேன். உடனே மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சிந்தன் “ஒரு விசயம் லட்சியபூர்வமாய் தவறு என்றால் அது நடைமுறையில் மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்?” என்று கேட்டார்.
 லட்சியங்களுக்கும் நடைமுறைக்குமான தூரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். லட்சியம் என்பது அடைய முடியாது இலக்கு. உதாரணமாய் வணிக நோக்கே இல்லாமல் அனைவருக்குமான இணையம் என்பது லட்சியம். அது நடக்காது. வணிக நோக்குடன் அளிக்கப்படும் இணையத்தை தன் தேவைக்கேற்ப பயன்படுத்துவது நடைமுறை. இரண்டுக்குமான சமரசம் எதிர்காலத்தில் நடக்கும் போது வணிக நோக்கு குறைவான அதிக சுதந்திரமுள்ள இலவச இணையம் சாத்தியமாகலாம். இந்த சமரசத்துக்கான உரைகல் மட்டுமே லட்சியம். மற்றபடி லட்சியத்துக்கு பயனில்லை.
ஓட்டுக்கு பணம் வந்து விட்டதனால் ஜனநாயகம் அழிந்து விட்டதா? இல்லை. தேர்தல் செலவு அதிகமாகி விட்டது. ஊழல் பெருத்து விட்டது. ஆனால் மக்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு தமக்கு தேவையான கட்சியை தான் தேர்கிறார்கள். இல்லாவிட்டால் ஒரே கட்சி மட்டுமே நூறு வருடத்துக்கு ஆட்சியில் இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் தவறா என்றால் தவறே. ஆனால் நடைமுறையில் அது ஒரு பிரச்சனை அல்ல. சொல்லப்போனால் நாலு ஓட்டுகள் உள்ள வீட்டில் ஒரு மாத செலவுக்கு பணம் கிடைத்து விடுகிறது. அரசியல்வாதிகள் தம்மை பயன்படுத்துவது போல் தாமும் அரசியல்வாதிகளை பயன்படுத்துவோம் என மக்கள் நினைத்து பணத்தை வாங்குகிறார்கள். Free Basicsஉம் அப்படித் தான்.
இந்த ஞாயிறு இரவு விவாத மேடை ஒளிபரப்பாகிறது. பாருங்கள்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...