Skip to main content

வினோத் மிஸ்ராவின் குறும்படம்

நண்பர் வினோத் மிஸ்ரா தான் எடுத்த “குறியீடு” குறும்படத்தின் இணைப்பை எனக்கு பார்ப்பதற்கு அனுப்பி இருந்தார். சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த குறும்படமாய் அது இருந்தது. Spaghetti Western ஸ்டைலில் எடுத்திருந்தார். களம் நம்மூர் கிராமம் ஒன்று. நிறைய வெட்டவெளி, கடும் வெயில் படம் முழுக்க வருகிறது. கீழிருந்து மேலாக வானைக் காட்டும் ஷாட்கள், வட்டமிடும் பருந்து, அதன் அச்சுறுத்தும் ஒலி என படம் முழுக்க வருகிறது. படம் பார்க்க துவங்கி கொஞ்ச நேரத்தில் எனக்கு பரதனின் “தாழ்வாரம்”, The Good, the Bad, and the Ugly நினைவுக்கு வந்தன.


படத்தில் வசனமே இல்லை. அதாவது பேசுகிறார்கள். அதை பின்னணி இசை மூலம் மறைத்து விடுகிறார்கள். வசனம் இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை கொண்டு போகிறார். ஒரு காதல் ஜோடி, அவர்களை பிரித்து கொல்ல முயலும் பெண்ணின் அம்மாவும் உறவினர்களும், அவர்களுக்கு என்னாகிறது என்பது தான் ஒற்றை வரி. கதைக்குள் மூன்று காலங்களை கோர்த்திருப்பது என்னை கவர்ந்தது. படம் துவங்கும் போது காதலனுக்கு தான் தன் காதலியின் வீட்டாரால் தாக்கப்பட்டு அவளும் கொல்லப்படுவதாய் கனவு வருகிறது. அவன் பதற்றமாய் தூங்கி விழிக்கிறான். காதலியை தேடிப் போய் அவளை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊரை விட்டு தப்பிக்க முனைகிறான். பிறகு எல்லாம் கனவில் போன்றே நடக்கிறது. ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன். இதே போல் பெற்றோரால் காதலன் கொல்லப்பட்ட ஒரு பெண் அந்த பாழடைந்த வெளியில் பைத்தியமாய் திரிகிறாள். அவள் இந்த ஜோடியிடம் தன் வாழ்கைகதையை நடித்துக் காட்டும் இடம் அபாரமாய் வந்திருக்கிறது. எனக்கு ஷோபா ஷக்தியின் ”பாக்ஸ் கதைப்புத்தகம்” நினைவு வந்தது. கனவு, அந்த ஜோடி, அந்த பைத்தியப் பெண் என மூன்று காலங்கள் ஊடுபாவும் இடம் நன்றாய் வந்திருந்தது. படத்தின் முடிவு மட்டுமே அதிருப்தியாய் இருந்தது.

வினோத் மிஸ்ராவுக்கு காட்சிபூர்வ ஆளுமை இருக்கிறது. கதையினூடே இயக்குநர் தெரிகிறார். இது முக்கியம். அவரால் வெகுஜன ஊடகத்திலும் வெற்றி பெற முடியும் எனத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...