Skip to main content

வாடாமல்லி




இம்மாத தீராநதியில் கண்மணி குணசேகரனின் சிறுகதை “வாடாமல்லி” வாசித்தேன். கொஞ்சம் பிசகினால் “முதல் மரியாதை” போல் நாடகீயமாகி விடக் கூடிய கதை. ஆனால் தடுமாறாமல் நூல் பிடித்தாற்போல் கதையை கொண்டு போகிறார். மல்லிகா பன்னீர் எனும் கிராமத்து ரோமியோவை காதலிக்கிறாள். இருவரும் சேர்ந்து ஓடிப் போகும் போது ஊர்க்காரர்கள் பிடித்து பிரித்து வைத்து விடுகிறார்கள். இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணம். வெறுப்பில் சக்கரை குடிகாரனும் பொறுக்கியும் ஆகிறான். மல்லிகா தன் கசப்பையும் ஏக்கத்தையும் வைராக்கியமாய் மாற்றிக் கொள்கிறாள். எதுவுமே பாதிக்காதத்து போல் குடும்ப வாழ்க்கையை சிறப்பாய் நடத்துகிறாள். குழந்தை, கணவன் என நிறைவான வாழ்க்கை. அப்போது பன்னீர் இறந்து போன சேதி வருகிறது. அதுவரை அவன் தன் வாழ்க்கையில் இல்லாதது போல் நடந்து கொண்டவள் இப்போது சட்டென கலங்கி நிற்கிறாள். ஊர் என்ன சொல்லுமோ என அஞ்சாமல் அவனை இறுதியாய் பார்க்க கிளம்புகிறாள். ஆளுயர மாலையை வாங்கிப் போய் அவன் உடம்பில் போடுகிறாள். அவளைப் பார்த்து ஊர் அதிர்ந்து நிற்கிறது. கடும் அழுத்தத்துடன் காதலை மறைத்து வாழ்பவர்கள் ஒருநாள் அதே அழுத்தத்துடன் துணிச்சலுடன் அதை வெளிக்காட்டவும் செய்வார்கள். இந்த உளவியல் தான் கதைக்கு அழகு.

இரண்டு விசயங்கள். இக்கதையை இமையம் இன்னும் சிறப்பாய் எழுதியிருப்பார் என ஒரு கணம் தோன்றியது. இன்னும் சில பரிமாணங்களை கதைக்கு சேர்த்திருப்பார். ஒரு சில வசனங்களில் பக்க பாத்திரங்களை இன்னும் உயிரோட்டம் கொள்ள வைத்திருப்பார். இன்னும் கூர்மையான கவுச்சி வாசம் வீசும் வசனங்களை எழுதியிருப்பார்.
நவீன சிறுகதையில் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அந்த துளி விஷத்தை பற்றி எழுத வேண்டும் என்பது அது. கண்மணி குணசேகரன் இயல்பாகவே அந்த பாலைப் பற்றியே எழுதுகிறார். அப்படி எழுதி ஒருவர் மௌனியும் அசோகமித்திரனும் தொட்ட உயரங்களை அடைவது சிரமம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...