Skip to main content

பதன்கோட் தீவிரவாத தாக்குதல் – சில ஐயங்கள்



Image result for pathankot attack

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு ராணுவத்தினர் பலியாகி விட்டனர். இன்னும் தாக்குதல் ஓயவில்லை. தொடர்கிறது. இத்தாக்குதல் நடக்கக் கூடும் என ஜனவரி 1 அன்றைக்கே தகவல் வந்து விட்டது. அனைத்து படையினரும் தயார் நிலையில் முடுக்கி விடப்பட்டனர். ஆனால் நேரடியாய் களமிறங்கி தீவிரவாதிகளைத் தாக்குவதற்கோ தளத்தை பாதுகாப்பதற்கோ ராணுவத்தினருக்கு ஆணை வழங்கப்படவில்லை. சொல்லப்போனால் தீவிரவாதிகள் தளத்துக்குள் நுழைந்து தாக்கும்வரை அவகாசம் வழங்கப்பட்டது. இது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.

 பல்வேறு பாதுகாப்பு படையினர் பதன்கோட்டில் முகாம் இட்டிருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒருங்கிணைக்க ஆள் இல்லை என்று கூறப்படுகிறது என்றாலும் இது நம்பும்படியான வாதமாக இல்லை. ராணுவத்தை சேர்ந்த சிலர் இதை ஒரு அரசியல் சதி என்கிறார்கள். அதிகார மையத்தில் உள்ள சிலர் தீவிரவாதிகள் பதன்கோட் தளம் வரை சென்று சேர வேண்டும் என விரும்பினார்கள். அதனாலே அவர்கள் பாதுகாப்பு படையினரை தடுத்து நிறுத்தினர் என ஒரு தரப்பு கூறுகிறது.
 பதன்கோட்டை தீவிரவாதிகள் அடையும் முன்னர் அவர்கள் ஒரு காரை கடத்தினர். அக்காரில் ஒரு எஸ்.பி, அவரது சமையற்காரர் மற்றும் ஒரு நண்பர் இருந்தனர். பின்னர் அவர்களை ஒரு வனத்தில் விடுவித்து விட்டு தீவிரவாதிகள் பதன்கோட்டுக்கு விரைந்தனர். சமையற்காரர் அங்குள்ள ஒரு காவல் நிலையத்துக்கு சென்று தம்மை தீவிரவாதிகள் கடத்திப் போன விவரத்தை சொல்ல, போலிசார் அதைக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அவரை அடித்து துன்புறுத்தினர். மாவோயிஸ்டுகளின் துண்டுபிரசுரத்தை வைத்திருந்தவர்களை துருவி துருவி விசாரித்து சிறையில் தள்ளி சித்திரவதை செய்யும் நம் போலீசார் தீவிரவாதிகள் ஒரு போலீஸ் அதிகாரியை கடத்திப் போனதை நம்பவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. ஒருவேளை இத்தகவல் வெளியே பரவக் கூடாது என நினைத்த உயர் அதிகாரிகள் தம் வழக்கப்படி புகார் கொடுத்தவரையே குற்றவாளியாக்கி துன்புறுத்தியிருக்கலாம். எப்படியோ தீவிரவாதிகள் விமானப்படை தளத்தை அடைவதற்கான உச்சபட்ச உதவிகளையும் நாம் செய்து கொடுத்து விட்டோம்.
எனக்கு இந்த சந்தர்ப்பம் கார்கிலை நினைவு படுத்துகிறது. கார்கிலில் தீவிரவாதிகள் ஊடுருவியது முஷாரப் மற்றும் வஜ்பய்க்கு இடையிலான மறைமுக ஒப்பந்தத்தின்படியே நடந்தது. பின்னர் இதே தீவிரவாதிகளை வெளியேற்றுகிறோம் எனும் பெயரில் நிறைய ராணுவ வீரர்களை பலிகொடுத்தோம்; கணக்கற்ற பணத்தையும் வீணடித்தோம். இந்த போர் அப்போது தன் மீதுள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்கள் கவனத்தை திருப்பவும், பாகிஸ்தானுடன் போர் புரிந்தோம் என்று மார்தட்டவும் பா.ஜ.கவுக்கு உதவியது. மறுபக்கம் முஷாரப்புக்கும் பாகிஸ்தானில் இந்தியாவுக்கு படையெடுத்த மாவீரர் எனும் பெயரைப் பெறவும் ராணுவத்தில் தன் செல்வாக்கை அதிகப்படுத்தவும் பயன்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதிகள் என்றுமே இரட்டை முகம் கொண்டவர்களே. ஒரு பக்கம் அவர்கள் ராணுவத்தை திருப்திப்படுத்தி தம் செல்வாக்கை தக்க வைக்க வேண்டும். ராணுவத்துக்கு எப்போதும் போர் தேவை. இன்னொரு பக்கம் இந்திய பிரதமர்களூடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்வதேச நற்பெயரையும் வணிக நலன்களையும் பாதுகாக்க வேண்டும். அதனாலே ஒவ்வொரு முறையும் இந்திய-பாக் பேச்சுவார்த்தை நடக்கும் போது உடனே தீவிரவாத தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கின்றன. இந்த பதன்கோடு தாக்குதல் இந்திய-பாக் அரசுகளின் புரிந்துணர்வுடன் தான் நடந்துள்ளதோ எனும் சந்தேகம் எழுகிறது. இப்போது தம் மீதுள்ள மக்கள் அதிருப்தியை மட்டுப்படுத்தி தேசியவாத உணர்வலையை பரப்ப பா.ஜ.வுக்கு இத்தாக்குதல் பலனுள்ளதாக இருக்கும். பாகிஸ்தானில் மோடி சென்று நேரடியாய் நவாஸ் ஷரீப்பை சந்தித்தது அங்குள்ள ஆளுங்கட்சிக்கு மக்களிடையிலும் ராணுவத்திலும் ஏற்படுத்திய கசப்பை போக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு இது பயன்படும்.
Image result for pathankot attack
சமீபத்தில் தில்லியில் கேஜ்ரிவால் அரசு இரு அதிகாரிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்ததை அடுத்து ஒட்டுமொத்தமாய் அனைத்து அதிகாரிகளும் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தை எவ்வாறு தில்லியின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜங் கோவாவில் இருந்தபடி மத்திய அரசுடனும் நூற்றுக்கணக்கான அதிகாரிகளுடனும் போனில் ஒருங்கிணைத்தார் என்பதை கேஜ்ரிவால் விளக்கினார். இதையெல்லாம் சாமர்த்தியமாய் ஒருங்கிணைக்க முடிகிற போது ஒரு நாளுக்கு முன்பே தகவல் தெரிய வந்த பின்னரும் தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் விதமாய் பாதுகாப்பு படையினரை நம்மால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
மோடி அரசு பதவியேற்ற போது நான் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதினேன் “என்ன செய்ய போறீங்க மிஸ்டர்.மோடி?“. அதில் சில வருடங்களுக்குள் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும், பா.ஜ.கவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் என்று கூறியிருந்தேன். என் கணிப்பின் படியே அருண் ஜேட்லியின் கிரிக்கெட் கிளப் ஊழல் வெளியாகி விட்டது. அடுத்த இரு வருடங்களில் இன்னும் பல ஊழல்கள் அம்பலமாக உள்ளன. தொடர் தீவிரவாத தாக்குதல்களில் நம் தேசம் பலவீனமாகி வருகிறது. ஊழலுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிரான அரசு என்று போலி பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த இந்த அரசு இப்போது அம்மணமாகி நிற்கிறது. காங்கிரஸ் மென்மையானது, பா.ஜ.க வன்மையானது. காங்கிரஸ் ஊழல்மயமானது, பா.ஜ.க களங்கமற்றது என்ற எதிரிடையை கொண்டு இனியும் வடை சுட முடியாது. எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...