Skip to main content

எழுத்தாளனும் பிச்சைக்காரர்களும்



”இந்த புத்தாண்டில் தினத்தில் உன் புத்தகம் வராதா?” என மனைவி சற்று துயரம் தோய்ந்த குரலில் கேட்டாள். நான் வராது என்றதும். “ச்சே ஒவ்வொரு வருடமும் அப்படி கொண்டாட்டமாக ஆரம்பித்து பழகி விட்டது” என்றாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை ரகசியமாய் ஒரு புரளியை கிளப்பி விட்டு அது பெரிய கதையாக ஊரெல்லாம் பரவும் போது ஒரு உள்ளார்ந்த உற்சாகம் தோன்றுமே, புத்தகம் வெளியாகிற நாட்களில் எழுத்தாளனுக்கு அப்படியான பரபரப்பு தான் இருக்கும். தமிழர்கள் எந்த புத்தகத்தினாலும் சலனப்பட மாட்டார்கள் என்றாலும் நமக்கென உள்ள ஒரு சிறு வட்டத்தில் சில அலைகள் கிளம்பும். அதை கவனிக்கவும் பின் தொடரவும் ஆர்வமாக இருக்கும். என்னுடைய இரண்டாவது நாவல் வெளியான போது அதன் முழுமகிழ்ச்சியையும் புத்தகத்தின் பிரதியை ஏந்தியபடி தனியாக வீடு திரும்பும் இரவு வேளையில் தான் உணர்ந்தேன்.

 ஆனால் இவ்வருடம் தனிப்பட்ட முறையில் எனக்கு கொஞ்சம் வேற மாதிரி. கடந்த சில மாதங்களில் கடுமையான பொருளாதார சிரமங்களை அனுபவித்து மனம் மரத்துப் போய் விட்டது. ஓட்டை விழுந்த ஒரே சட்டையை போட்டுக் கொண்டு அலைந்தேன். அம்மா உணவகத்தில் ஐந்து ரூபாய்க்கு இரவுணவை முடித்துக் கொள்ள பழகினேன். பணம் இல்லையென்பது ஒரு நடைமுறை பிரச்சனை மட்டும் அல்ல. அது நம் ஈகோவை கடுமையாய் தளர்த்துகிறது. பண பயம் போதை வஸ்துவை போல் மனதை விசித்திரமாய் யோசிக்க வைக்கிறது. ”வானம்” படத்தில் சிம்பு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் ஆளின் கையில் இருக்கும் கத்தை கத்தையான பணத்தையே தன்னை அறியாமல் பார்த்துக் கொண்டிருப்பார். என் மனம் இப்படித் தான் இயங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் எனக்கு ஒரு விசித்திரமான கற்பனை வந்தது. வேலை கிடைக்காவிட்டால் முச்சந்தியில் நின்று பிச்சை எடுக்க வேண்டும் என நினைத்தேன். குறிப்பாக சிக்னல் உள்ள நெருக்கடியான சாலை ஒன்றில். அது எந்த இடமாக இருக்கும் என்று கூட என் மனதில் தோன்றி விட்டது. அப்போது என்ன உடை அணிய வேண்டும், எந்த பாத்திரத்தில் பிச்சை எடுக்க வேண்டுமெல்லாம் கூட யோசித்தேன். (எழுத்தாளனாக இருப்பதன் சிக்கல் இது – மனம் படுவேகமாய் வேலை செய்யும்). கொஞ்ச நேரத்தில் என்ன அபத்தம் இது என என்னை பார்த்து நானே சிரித்துக் கொண்டேன். அதன் பிறகு பொருளாதார கவலைகள் ஓரளவு அகன்று விட்டன.
 போன வாரம் அடையாறில் இருந்து ராஜ்பவன் போகிற வழியில் உள்ள ஒரு சந்தில் இரவு பதினொரு மணிக்கு ஒரு சின்ன ஓட்டலில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு காயிலாங்கடை. பிளாஸ்டிக் கேன்களும் பாட்டில்களும் தொங்க விட்டிருந்தார்கள். அதை வாங்குவதற்காய் அழுக்கான தார்பாய்ச்சிய வெள்ளை வேட்டியும், குர்தாவும், முண்டாசும் அணிந்த ஒல்லியான கறுப்பான மனிதர்கள் வந்தார்கள். கையில் ஒரு கழி வைத்திருந்தார்கள். ஏதோ ஒரு விசித்திரமான மொழியில் கடைக்காரனுடன் பேரம் பேசினார்கள். பிறகு சில பழைய கேன்களை வாங்கிக் கொண்டு போனார்கள். நான் எதற்கு என கடைக்காரனிடம் விசாரித்தேன். தண்ணீர் பிடிப்பதற்காக வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் கேனுடன் திரும்ப வந்தார். இன்னொரு கேனைக் காட்டி அது வேண்டும் என்றார். கடைக்காரரும் கொடுத்தார். கொடுக்கும் போது சொன்னார் “நல்லா கழுவிட்டு தண்ணி பிடி”. அந்த கேன்களில் எண்ணெயோ மண்ணெண்ணெயோ பெட்ரோலோ கூட பிடிக்க பயன்படுத்தி இருக்கலாம். அதில் அப்படி ஒரு மோசமான நாற்றம் அடிக்கும் என எனக்குத் தோன்றியது. அதில் தண்ணீர் குடித்தால் நிச்சயம் வீச்சமடிக்கும். ஆனால் அப்படி ஒரு கேனுக்காய் சண்டை போட்டு வாங்கிப் போகும் ஆட்கள் இந்த ஊரில் இருக்கிறார்களா? தண்ணீர் பிடிக்க ஒரு காலி புட்டி கூட இல்லாதவர்கள் இருக்கிறார்களா? யார் இவர்கள்? என்றெல்லாம் யோசித்தேன்.
அடுத்த நாள் வீடு திரும்பும் போது நான் கற்பனையில் கண்ட அதே சிக்னலில் வண்டியில் நின்று கொண்டிருந்தேன். அன்று கேன் வாங்க வந்தவர்கள் சாரி சாரியாய் பிச்சை கேட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் என் கண்களை நோக்கி எதையோ முணுமுணுத்தபடி கைகளை நீட்டி ஏந்தி நின்றார். அவர் கண்களில் நான் என்னையே பார்த்தேன். அவருக்கு பிச்சை அளிப்பது எனக்கே பிச்சை அளிப்பது போல் இருக்கும் எனத் தோன்றியது. பார்வையால் மறுப்பு தெரிவித்தேன். அவர் உடனே அகன்று விட்டார். நமக்கு ஒரு சிறு எல்லைக்கோடு உள்ளது. ஒரு அடி எடுத்து வைத்தால் அதை தாண்டி விடலாம். காலம் இன்னும் கொஞ்சம் கழுத்தை நெரித்தால் யார் வேண்டுமானாலும் கோட்டின் அந்த பக்கம் போய் விடுவோம்.
வாழ்க்கை இப்படி இருக்கையில் புத்தகம், வாசகர்கள், விவாதம் எல்லாவற்றின் மீதும் கடும் அலுப்பு வந்து விட்டது. மரணம் நிகழ்ந்த வீட்டில் உடனடியாய் திருமணம் போன்ற வைபவங்கள் நடத்தக் கூடாது என்பார்கள். என் மனதுக்குள் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டது. வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது ஒரு பிரச்சனையே அல்ல என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கை செத்து விட்டது. எவ்வளவு தான் வேலை செய்தாலும் உணவுக்காக இருட்டில் எலியை போல் ஒருநாள் ஓட நேரிடலாம் என பயம் வந்து விட்டது.
இலக்கியம், கலை, பிரசுரம் பற்றின என் லட்சியங்கள் தற்காலிக கோமாவுக்குள் சென்று விட்டன. எந்த இலக்கிய ஏமாற்றமும் குதூகலமும் இனி என் மனதை தீண்டாது. அது மரத்துப் போய் விட்டது.
மீண்டும் முன்பு போல் மகிழ்ச்சியில் திளைக்க எனக்கு இன்னும் சற்று கால அவகாசம் தேவை. ஏப்ரல், மே காலத்தில் புத்தக கண்காட்சி என்றால் நான் இன்னும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பேன். பழையபடி இலக்கியம் பற்றின வெற்று கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்க தொடங்கி இருப்பேன். வரட்டும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...